நித்யானந்த சுவாமிகளின் ஒழுக்கக் கேட்டைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பறை அறிவித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியே தீருவோம் என்ற முடிவை சனநாயகத்தின் நான்காவது தூண்களான நக்கீரன், குமுதம் குழும இதழ்கள் எடுத்திருப்பதைப் பார்த்த ஆனந்த விகடன் குழுமமும் தன் பங்காக ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரையை எழுதியிருப்பது பா.திருமாவேலன். ஆனந்த விகடனில் அரசியல் , சமூக கட்டுரைகள் என்றாலே அது பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும்.
இவரும் வழக்கம் போல் அனைத்து சாமியார்களைப் பற்றியும் கண்டது, கேட்டது, படித்தது, அறிந்தது, அறியாதது எல்லாவற்றையும் வைத்து ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் படங்களும் போட்டாகி விட்டது.
என்ன ஆச்சரியம்....எல்லோர் பேரும் உள்ள அந்த கட்டுரையில் ஜக்கி வாசுதேவ் பேர் மட்டும் இல்லை. எங்கே அவர் பெயர் என்று பார்த்தால் அவர் வழக்கம் போல் சுபா தயவில் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஏன் திருமாவேலனுக்கு ஜக்கி பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை?
குமுதமும் இப்படித்தானே நித்யானந்தனின் அருளுரைகளை வழங்கி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது அவரை வைத்து வேறு பிஸினஸ் ஆரம்பித்து விட்டது தனிக்கதை.
ஏன் இப்படி.. முற்போக்கு வேடம் ஏற்றாயிற்று சரி. அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டாமா? ஜக்கி மீது எந்தப் புகாரும் வரவில்லையே என்று சொல்லலாம். (புகார்கள் ஏற்கனவே வலையுலகில் கிடைக்கின்றன) ஆனால் புகார் வந்த பிறகு மட்டும் என்ன செய்கிறீர்கள் ? குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பு. ம்ஹூம்...சரி இனி எந்த சாமியாரின் கட்டுரைகளையும் வெளியிட மாட்டோம் என்ற அறிவிப்பு. ம்ஹூம்..... அதை வைத்தும் வியாபாரம்.
தயவு செய்து உங்கள் தலையங்கங்கள் ஆட்சியாளர்களை நோக்கிக் கை காட்டுவதோடு மட்டுமில்லாமல் உங்களை நோக்கியும் கை காட்டட்டும்.
செய்த தவறை ஒத்துக்கொண்டு, இனி அடுத்த தவறு செய்யாமல் இருப்பதே உங்களை 15.00 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் பேருதவி.