Sunday, December 23, 2007

நீதிமன்றம் செல்லவிருக்கும் இயக்குநர்கள் சாமி மற்றும் தங்கர்பச்சான் அவர்களுக்கு...

சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா??

நேற்று ஜெயா தொலைக்காட்சியில் கோலிவுட் கோர்ட் என்ற நிகழ்ச்சியில் மிருகம் பட இயக்குநர் சாமி "Animal Welfare Association" இடமிருந்து NOC வாங்குவது பற்றிப் பொங்கிக் கொண்டிருந்தார்.மிருகம் படத்தில் சுமார் 10 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகள் தூக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் கூறியிருந்தார்.(சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்).

இதே போல் சென்ற வாரத்தில் தங்கர்பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டின் கள்ளக்குறுந்தகடு (நன்றி சுகுணா திவாகர்) 30 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்டுபிடித்து அதைப் போலீஸில் புகார் செய்திருந்தார்.(ஏற்கனவே அந்தப் படத்தில் கள்ளக்குறுந்தகட்டிற்கு எதிராக ஒரு காட்சியும் வைத்திருப்பார்).இவரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது.

நன்று.அப்படியே எங்கள் பிரச்சினைகளையும் சொல்கிறோம். அதையும் அங்கே சொல்லுங்கள்.

ரசிகர்கள் இளிச்சவாயர்களா???

சென்னையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் திரைப்படங்கள் வெளிவருகிறது.அதை அந்த வார இறுதியில் கவுண்டரில் டிக்கெட் எடுத்து யாராவது பார்த்தால் அவர்கள் பெயரை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.உன்னை யாருய்யா அந்த வாரமே பார்க்கச் சொன்னா?? என்று கேள்வி எழுப்பாதீர்கள்.அடுத்த வாரங்களில் அந்தத் திரைப்படங்கள் அந்தத் திரையரங்குகளில் ஓடுவதில்லை.வேறு புதிய படங்கள் வந்து அதையும் பிளாக்கில் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது.சுருக்கமாகச் சொல்லப்போனால் "First come first serve" லாம் இப்போது இல்லை. "கையில காசு வாயில தோசை" தான் உள்ளது.

இந்தியாவின் மொத்த‌க் க‌ருப்புப்ப‌ணத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட்ட உச்ச நடிகரின் திரைப்படந்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று கேள்வி.(சென்னையில் அதன் ஒரு டிக்கெட்டின் விலை 300 - 1000 வரை).

இப்போது உங்கள் டார்கெட் மார்க்கெட் பணம் ஜாஸ்தியாகக் கொடுக்க மறுக்கும் நடுத்தரக்குடும்பமோ அல்லது குடும்பப் பெண்களோ இல்லை தான்.பர்ச்சேஸிங் பவர் ஜாஸ்தியாக உள்ள இளைஞர்கள் தான்.ஆனால் அதற்காக வழக்கமான கட்டணத்தை விட 5 மடங்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்.

அந்த மார்க்கெட்டை அழிக்க எப்படி டி.வி யும், கள்ளக்குறுந்தகடும் வந்ததோ அதே போல் இந்த மார்க்கெட்டையும் அழிக்க ஏதொவொன்று வரும்.அதற்கு முன்பாகவே முடிவு நீங்கள் தான் எடுக்க வேண்டும்.

தரமான படங்களைச் சரியான கட்டணங்களோடு நல்ல தியேட்டர் வசதிகளுடன் எங்களுக்குக் கொடுங்கள்.இப்படி இருந்தால் தான் நாம் அனைவரும் ஒரு product (திரைப்படம்) மூலம் சந்தோசமடைய முடியும்.கள்ளக்குறுந்தகடும் இன்ன பிற பிரச்சினைகளும் தாமாகவே அழிந்துவிடும்.

(பில்லா படத்திற்குச் சென்று டிக்கெட் விலை கேட்டு நாங்கள் எங்கள் எதிர்ப்பைத்தெரிவிக்க அன்று படத்திற்குச் செல்லவில்லை :)))

Sunday, December 16, 2007

பில்லா - தியேட்டரில் கொலை???

பில்லா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.தியேட்டரில் உள்ள அனைவரும் அஜீத்திடமும்,நயந்தாராவிடமும் மனசை விட்டுக்கொண்டிருக்க என் அருகில் அமர்ந்திருந்தவர் உயிரை விட்டிருந்தார்.

நிற்க.அவர் சுடப்பட்டு இறந்திருந்தார்.

விக்ரம் படத்தில் அம்பிகாவை நெற்றிப் பொட்டில் சுடுவார்களே.அந்த மாதிரி சுட்டிருந்தார்கள்.(சே இந்த நேரத்தில் கூட திரைப்பட ஞாபகமா??)

சுட்டவன் நல்ல வேலைக்காரானாக இருந்திருக்க வேண்டும்.சென்னையின் மையப்பகுதியில், ஞாயிற்றுக் கிழமையில், பட்டப் பகலில், தியேட்டரில் துப்பாக்கி சுடும் காட்சி வரும் சமயத்தில் சுட்டிருந்ததால் டி.டி.எஸ் எபக்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த அசம்பாவிதத்தை உணரவில்லை.

சரி இப்போது நான் என்ன செய்வது?.கத்துவதா? தியேட்டர் மேனேஜர் ரூம் எங்கு இருக்கும்??

ந‌ண்பா நீ யார்? தியேட்ட‌ரில் வ‌ந்து சுடும் அளவிற்கு உன் எதிரி யார்? அவ‌ருக்கு நீ செய்த‌ கொடுமை என்ன‌?

அச‌ந்த‌ர்ப்ப‌மாக‌ செல்போன் அடித்த‌து.

"சே முடிவைக் கூட‌ ப‌டிக்க‌ விட‌மாட்டேங்கிறாங்க‌" என்று சொல்லிய‌வாறே அலுவ‌ல‌க‌க் க‌ணிணியின் த‌மிழ்ம‌ண‌ விண்டோவைக் க்ளோஸ் செய்தேன்.

குறிப்பு:

1)இது பதிவர் ச‌ர்வேச‌னின் ந‌ஒக‌ விற்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து.

2)இத‌ற்கு முன்பு என்னால் எழுதப்ப‌ட்ட‌ ஒரு சிறுக‌தை நண்ப‌ர்க‌ளிட‌ம் அடி வாங்கித்த‌ரும் அள‌விற்குத் திறமையுட‌ன் இருந்த‌து.இப்போது ந‌ண்ப‌ர்க‌ள் யாரும் அருகில் இல்லாத‌ தைரிய‌த்தில் எழுதிவிட்டேன்.

Thursday, December 13, 2007

சோ‍ - நல்லவரா?? கெட்டவரா??

காலையில் எழுந்து "இட்லிவடை" சாப்பிடும் போது அறிவாளியாக,நடுநிலையானவாராக, தைரியமானவராக, நேர்மையானவராகத் திரியும் ஒரு மனிதர், தமிழினி பக்கம் ஒதுங்கினால் கோமாளியாக, ஒரு கட்சி சார்புடையவராக,பழமைவாதியாகத் தெரிவது எப்படி?.அவர் என்ன அந்நியன் படத்தில் வரும் விக்ரமா?. இது குறித்து பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம்.(யாருப்பா அது சோ னாலே குழப்பந்தான்னு சவுண்டு குடுக்கிறது).போடலாம் என்று அங்கீகரிப்பவர்கள் மேலே படியுங்கள்.

நல்லவரா???????

1) சோ வின் நகைச்சுவை உணர்ச்சி.தேன்மழை, நினைவில் நின்றவள் இந்த இரண்டு படங்கள் மட்டும் போதும் அவருடைய ஹியூமரை எடுத்துக்காட்ட.என்னைப் பொறுத்த வரை தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த காமெடி ஜோடிகளில் ஒன்று நாகேஷ்‍ - சோ.

2) அவருடைய எழுத்து.சமீபத்தில் அவருடைய புத்தகங்களில் சுமார் 10 புத்தகங்களைப் படித்தேன்.கவனிக்கப் பட வேண்டிய நகைச்சுவையான எழுத்து.விகடனில் வெளிவந்த மிஸ்டர்.ரீல் முதல் இப்போது வரும் லூசுப்பையன் வகை எழுத்துக்கு அவர் தான் முன்னோடி.அவருடய "துக்ளக் படமெடுக்கிறார்" படித்துப் பாருங்கள்.

3) அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையில் இது வரை ஒரு நடிகையின் நாபிக் கமலத்தைக் கூடக் காட்டியது இல்லை.சினிமாவில் குப்பை கொட்டிய அவருக்கு இது முடியாதது இல்லை.கவர்ச்சிப் படங்கள் போடாமல் வரும் வெகுசனப் பத்திரிக்கைகளை எண்ணுவதற்கு நம் ஒரு கையில் உள்ள விரல்களே போதும் என்ற இந்த சூழ்நிலையிலும் அவர் கொள்கை.ஹேட்ஸ் ஆப்.

4) அவர் வாதங்கள் எடுத்து வைக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அது சரியா? தவறா? என்பது வேறு.இன்றளவும் தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரிடம் கருத்துக் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

5) ஆட்சியில் இருப்பவர்களைப் பிரபலங்கள் "இவரு நல்லவரு, வல்லவரு, தங்கமான தங்கமானவரு" என்று மட்டுமே கூறும் இந்த வேளையில் குறைகளைச் சொல்ல இருக்கும் சில பேர்களில் ஒருவர்.வெறும் முரசொலியோ, நமது எம்.ஜி.யார் மட்டும் வெளிவரும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

6) "எங்கே பிராமணண்?", "சாத்திரங்கள் சொன்னதில்லை" போன்ற நூல்களை அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்குப் பிடிக்காத வண்ணம் எழுதியிருப்பார்.

கெட்டவரா????

1) "ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் மொழியை அழித்தால் போதும்", என்ற கருத்தை உணர்ந்து இன்று வரை டி.வி பேட்டிகளில் ஆகட்டும், மற்ற பேட்டிகளில் ஆகட்டும் அந்த பிராமண பாஷையை விடாமல் இருக்கும் பாஷாபிமானம்.இவருடைய சென்னைத் தமிழ் உலகறிந்தது.ஏன் அதிலேயே பேசலாமே.பெரியார் தாசன் சென்னைத் தமிழில் தான் பேசுவார்.ஆனால் மற்றவர்களின் மொழிப் போராட்டங்களை மட்டும் கிண்டல் செய்யும் ஹிப்பொக்ரெட்.

2) எழுதுவது குருமூர்த்தியாக இருந்தாலும் அந்த தீவிரவாதக் கருத்துகளை அங்கீகரித்து வெளியிடுவது இவர் தான்.உலகெங்கும் இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கும் இவர்கள் இஸ்லாம் சகோதரர்கள் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் படித்து என் நண்பர் ஒருவர் அந்த சமூகமே நமக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்த பின்பு நான் துக்ளக் படிப்பதை நிறுத்தினேன்.

3) பெண்கள் மீதான இவர் பார்வை.இவர் படத்தில் கூட பெண்களைத் தான் அதிகம் ஓட்டுவார்.சரி ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தால், இப்போது தான் அது காமெடி மட்டும் இல்லை என்று புரிகிறது.

4) பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10).

நல்லவரா? கெட்டவரா?

பதில்:

தெரியலயேப்பா!!!!!

Sunday, December 9, 2007

கல்லூரி - விமர்சனம்

+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு கொள்கிறது.நட்பின் காரணமாக டெல்லியில் இருந்து படிக்க வரும் வாய்ப்பையும் மறுக்கிறது.

"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.

இது ச‌ரியா? த‌வ‌றா? என்ற குழ‌ப்ப‌ம் இருவ‌ருக்கும் தீர்வ‌த‌ற்குள் அனைவ‌ரும் ஒரு பேருந்தில் க‌ல்விச் சுற்றுலா செல்கிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் காத‌ல் நண்ப‌ர்க‌ளுக்குத் தெரிய‌வ‌ரும் வேளையில்....தியேட்ட‌ரில் நிச‌ப்த‌ம்.அனைவ‌ரும் க‌ன‌த்த ம‌ன‌துட‌ன் வெளியே வ‌ருகின்ற‌ன‌ர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்ன‌ன்னு சொல்ல‌ல‌)

ப‌ட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ரும் ப‌ஸ் பாட‌ல் காட்சியிலேயே ந‌ம்மைக் க‌ல்லூரி மூடிற்கு கொண்டு வ‌ந்து விடுகிறார் பாலாஜி ச‌க்திவேல்.

ப‌ட‌த்தில் வ‌ரும் ஒவ்வொரு க‌தாபாத்திர‌த்தையும் இய‌ல்பாகவே உல‌வ‌ விட்டிருப்ப‌து ப‌ட‌த்தின் சிற‌ப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிச‌த்தில் நாம் பார்க்கும் ம‌னித‌ர்க‌ள் போல‌வே இருக்கிறார்க‌ள்.

அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். க‌ய‌ல்விழியாக வ‌ரும் பெண் ப‌ட்ட‌ய கிள‌ப்பி உள்ளார்.குடும்ப‌ நிலை உண்ர்ந்து ப‌டிப்ப‌து, த‌ப்பு செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ட்டையைப் பிடிப்ப‌து, த‌ம‌ன்னா த‌ன் காத‌ல் ப‌ற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வ‌து என அத்த‌னையும் அழ‌கு.

ஆதில‌ட்சுமியாக வ‌ரும் பெண், ச‌ர‌வ‌ண‌ணாக வ‌ரும் பைய‌ன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவ‌ரும் நம் நினைவில் நிற்பார்க‌ள்.

ஒரே காட்சியில்,9 மாண‌வ‌ர்க‌ளின் குடும்ப க‌ஷ்ட‌ங்க‌ளையும் உறுத்தாம‌ல் காட்டியிருப்பது க‌விதை.

இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.

பாலாஜி ச‌க்திவேல் காட்சிக‌ளால் க‌விதை வ‌டிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் க‌விதைக‌ளால் காட்சி அமைக்கிறார்.(ச‌ரியா? த‌வ‌றா? பாட‌ல் மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.

செழிய‌னின் கேமரா இய‌ல்பாக‌ உறுத்தாமல் எல்லாவற்றையும் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.

ஹைகோர்ட்டில் தூக்குத் த‌ண்ட‌ணை உறுதியாகி உள்ள‌ இந்த சூழ‌லில், ஆந்திர‌ அர‌சிய‌ல் போல் காட்டினாலும் அந்த‌ ச‌ம்பவ‌த்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???)

இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் க‌ய‌ல்விழி கோபிப்ப‌து, இர‌ட்டைய‌ர்க‌ள் காட்சி)

கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற‌ க‌ல்லூரிக‌ளில் பார்த்த‌து தான்.(காத‌ல் ப‌ட‌த்தில‌ ம‌ட்டும் க‌த‌ புதுசோ??)

ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை வைத்து இவ‌ர்க‌ள் வியாபார‌ம் செய்வ‌து ம‌ட்டும் நெருட‌ல்.

ப‌ரிந்துரை:

எல்லோரும் பார்க்க‌லாம்.

Wednesday, December 5, 2007

தமிழ்சினிமாவும்‍ - பிள்ளைக் காதல்களும்

"அறியாத வயசு, புரியாத மனசு
இரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்"

யுவனின் இசையில் இளையராஜாவின் வாய்சில் மனசை அள்ளும் பாடல்.பாடலைக் கேட்டு முடித்த பிறகு என்றாவது நமக்கு குற்ற உணர்வு வந்திருக்கிறதா???.நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவ‌ர்கள் பருவத்திற்குப் போகாமல் அவர்களை நம் பருவத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை.

1990 ல் வெளிவந்த அஞ்சலி படத்தில் மணிரத்தினம் ஆரம்பித்து வைத்த கூத்து இது.அதில் தான் குழந்தைகளின் வாழ்க்கையைக் காட்டுகிறேன் என்று அதுகள் "I LOVE YOU",சொல்வதையும், காதலுக்கு ஹெல்ப் செய்வது போலவும் வயதுக்கு மீறிய செய்கைகளைப் பதிவு செய்திருப்பார்.நல்ல வேலையாக தாலி சென்டிமென்ட் (சின்னத்தம்பி) அம்மாசென்டிமென்ட் படங்களும் அப்போது வந்ததாலும்,பெண்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ்ர்களுக்கு இது பிடிக்காது என்பதாலும் மற்றவர்கள் யாரும் இந்த வழியைப் பின்பற்றவில்லை.

செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை" மீண்டும் பிள்ளைப் பருவக் காதலைக் கையில் எடுத்தது.சொல்லப்போனால் அவர் அதில் ஒரு படி தாண்டி உடலுறவையும் காண்பித்து தமிழ்சினிமாவை உலகத் தரத்திற்கு (??) உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து இதே கதை அம்சம் கொண்ட சுமார் 15 படங்களுக்கு பூசை போடப்பட்டது.நல்ல வேளையாக ஒன்றும் வரவிலை.வெளிவந்த +2, பருவம், கிச்சா போன்ற படங்களும் ஊத்திக்கொண்டன.

தங்கரின் "அழகி" இந்த நேரத்தில் வெளிவந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.எல்லோரும் தங்கள் இளவயதுக் காதலுடன் கம்பேர் செய்து பார்த்து இது ஒரு மிகச் சிறந்த படம் என்று certificate கொடுத்தார்கள்.

அடுத்து வந்த "ஆட்டோகிராப்" இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.ஒரு ஆண் தன் வாழ்க்கையில் சந்தித்த / காதலித்த 3 பெண்களுக்கு, 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை வைக்கும் நாயகனைப் பற்றிய கதை இது.இதிலும் சேரன் பள்ளிக்கூடக் காதலைக் காட்டியிருப்பார்.திருவள்ளுவரையே எதிர்க்கும் பெண்ணிய வாதிகள் கூட இந்தப்படத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில்,ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு இதேபோல் பத்திரிக்கை வைக்கப் போனால் ஏற்றுக் கொள்வார்களா?? என்ற கேள்வி கூடக் கேட்காமல் வழக்கம் போல இது உலகத்தரமான படம் என்று கூடிக் கும்மிஅடித்தார்கள்.

பாலாஜிசக்திவேலின் "காதல்" வெளிவந்தது.படத்தை மேக்கிங்,மற்றும் திரைக்கதையால் எங்கோ கொண்டு சென்றிருப்பார்.ஆனால் அதிலும் இதே பள்ளிக்கூட காதல் எழவு தான்.அந்தப் படம் வெளிவந்த போது அப்படத்தில் வருவதாக காட்டப்படும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் நிசத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்."இப்படத்தை பார்த்து விட்டு எங்கள் பள்ளி பிள்ளைகள் கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.எனவே படத்தைத் தடை செய்யவேண்டும்",என்று தொடர்ந்தார்.தினத்தந்தியில் இந்த செய்தி 8 ம் பக்கத்தில் யாரும் படிக்காத ஒரு இடத்தில் வந்தது.அனைவராலும் இது உலகத்தரமான திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்சினிமாவின் மைல்கல்லில் ஒன்று என்று அழைக்கப்பட்டது.

வெயில் (பாடலில்) ஆகட்டும், பருத்திவீரன் ஆகட்டும், தமிழ் M.A ஆகட்டும்,ஒன்பது ரூபாய் நோட்டு ஆகட்டும் நல்ல படங்கள் என்று சொல்லப்படும் எல்லாப் படங்களுமே பிள்ளைக்காதலைத் தான் காட்டுகிறார்கள்.

இந்த லிஸ்டில் தொலைக்காட்சியில் வரும் "கனா காணும் காலங்களும்" சேர்த்தி.

படம் எடுப்பவர்களுக்கு இது வாழ்க்கை, வியாபாரம்.எது ஓடுமோ அதைத் தான் காட்டுவார்கள்.நல்ல படங்களைத் தேர்ந்து எடுப்பது நம் கையில் தான் உள்ளது.பல நல்ல படைப்புகளை / படைப்பாளிகளை நாம் தான் தேர்ந்து எடுத்து அங்கீகரித்து உள்ளோம்.இளையராஜாவை அவர் ஆகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த போது தலையில் வைத்து ஆடியதும் நாம் தான்.அவர் மோசமான பாடல்களைக் கொடுத்த போது அங்கீகரிக்க மறுத்ததும் நாம் தான்.

17 வயது வரை உள்ள பருவம் காதலிக்க ஏற்றது அல்ல.அந்த வயதில் காதலித்துக் கொண்டிருந்தால்,அந்த வயதில் கிடைக்க வேண்டிய அனுபவம்,நட்பு,படிப்பு,விளையாட்டு,அறியாமை,அறிந்துகொள்ளல்,பாராட்டு,மகிழ்ச்சி இன்ன பிற வஸ்துக்களையும் இழக்க நேரிடும்.20 வயதுக்கு மேல் காதலிப்பவர்களுக்கே அது காதலா?? இனக்கவர்ச்சியா?? என்று தெரியாத நிலையில் பாவம் சிறுவர்களை விட்டுவிடுவோம்.

Tuesday, December 4, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்

முதலில் கதை.

பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர் கொடையாளியாகவும் உள்ளார்.ஊர் மக்கள் பிரச்சினையை அவ்வப்போது பணம் கொடுத்தோ / கொடாமலோ தீர்த்து வைக்கிறார்.அவர் நண்பர் பாய்க்கு(நாசர்) தொழிலில் முன்னேற தம்பதிகள் இருவரும் முகம் சுளிக்காமல் பண உதவி செய்கிறார்கள்.அவரும் தோல் தொழில் வியாபாரம் ஆரம்பித்து முன்னேறுகிறார்.

பிள்ளைகள் வளர்கிறார்கள்.கல்யாணம் முடித்த முதல் இரண்டு பையன்களும் தங்கள் மனைவி மற்றும் மாமாவால் (நடன இயக்குநர் சிவசங்கர்)தூண்டப்பட்டு அப்பாவை எதிர்க்கிறார்கள்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

கடைசிப் பையன் ஊரில் துணி துவைக்கும் சாதியை சார்ந்த பெண்ணைக் காதலிக்கின்றான்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

இதனால் மனம் உடைந்த மாதவரும்,வேலாயியும் ஊரை விட்டே வெளியேறி ஆம்பூரில் இருக்கும் நாசரிடம் தஞ்சம் அடைகிறார்கள்.ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்து கடைசி பிள்ளையை ஏதேச்சையாக பார்க்கும் மாதவர் பிள்ளை நிலை கண்டு வெதும்பி திரும்பி ஊருக்கே செல்ல முடிவு எடுக்கிறார்கள்.தீடீரென பாம்பால் தீண்டப் பட்டு வேலாயி இறந்துவிட ஊருக்குப் போகும் முடிவைக் கை விடுகிறார் மாதவர்.

நாசரும் உடல் நலிவுற்று பெங்களூரு சென்று விட,பிறகு நாசரின் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்டு ஊருக்கே செல்கிறார்.அங்கு பிள்ளைகள் நிலை கண்டு மனம் வெறுத்து உயிர் விடுகிறார் மாதவர்.

சத்தியமா இதாங்க கதை.

பஸ் டிக்கெட்டிற்கு முழு பணம் இல்லாமல் பண்ருட்டி பஸ்ஸில் ஏறும் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிடுகிறார் சத்தியராஜ்.திருடு போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பது, கால் மேல் கால் போட்டுத் தூங்குவது, கத்தும் குருவி என்னவென்று சரியாகச் சொல்வது, என மாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.விருதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடித்தாரோ என்னவோ பல இடங்களில் இயல்பு மிஸ்ஸிங்.பத்திரக்கோட்டை சிலாங்கும் அங்கங்கே மிஸ்ஸிங்.

அர்ச்சனா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்.முருகனையும், வாழுமுனி ஆண்டவனையும் அடிக்கடி கூப்பிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார்.

சிவசங்கர், ராமலிங்கமாக வருபவர், ராமலிங்கத்தின் காதலியாக வரும் பெண், அழகியில் "ஒளியிலே தெறிவது" பாட்டிற்கு வருவாரே அவர், அனைவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான தேர்வுகள்.

படத்தில் குறிப்பிடத் தகுந்த மற்றோர் அம்சம் எடிட்டிங். B.லெனின் விளையாடியுள்ளார்.காமிராவும் அழகாக உள்ளது. இசை சுமார்.பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.

குறைகளே இல்லையா?? இருக்கிறது.அது இல்லாமல் எப்படி.

சத்தியராஜ்,அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக சொல்லப்பட்டு இருப்பது
சரியான சப்பை.குடும்ப வன்முறை ஜாஸ்தி.யாராவது யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முழுக்க சோகம்.மனிதனின் சோகங்களைப் பதிவு செய்வது தான் நல்ல படம் என்ற கருத்தை எப்போது தான் மாற்றுவார்களோ?? தெரியவில்லை.

இதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் காதலிக்கிறது.லிப் கிஸ் கொடுக்கிறது.எல்லாமும் செய்கிறது.ஸ்கூல் பசங்களைக் கொஞ்சம் படிக்க விடுங்கப்பா ப்ளீஸ்.

படம் ரொம்ப நீளம்.அந்த ஊர் ஸ்லாங் பாதி பேத்துக்கு வரவில்லை.இருந்தாலும் மதுரை,நெல்லை, தேனி கிராமங்களையே பார்த்து வந்த நமக்கு பத்திரக்கோட்டை சற்று புதிது தான்.

கடைசி கிளைமாக்ஸ் ஒரு நல்ல‌ சிறுகதை.வாழ்த்துக்கள் தங்கர்.

பரிந்துரை ‍- பார்க்கலாம்(எல்லாரும் அல்ல)

பின்குறிப்பு:(தியேட்ட‌ரில் ந‌ட‌ந்த‌து)

1)இந்த‌ப் ப‌ட‌ம் வேணாம்,வேணாம்னு சொன்னேன் கேட்டியா?? (இர‌ண்டு டீனேஜ்க‌ள்)

2)இவ்வ‌ள‌வு டிக்கெட் வாங்கி வ‌ச்சிருக்கு,ஒர்த்த‌னும் வ‌ர‌ மாட்டேங்கிரானுங்க‌ளே(பிளாக் டிக்கெட் விற்ப‌வ‌ர்)

Wednesday, November 28, 2007

அவ்வை சண்முகி‍ - தரமான நகைச்சுவைப் படமா???

முன்னுரை:

சாம்பார்வடை என்ற பதிவர் "நீங்கள் சிபாரிசு செய்யும் படங்கள்" என்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று பதிவர் கோவி.கண்ணண் அவர்கள் சிபாரிசு செய்த படங்களின் வரிசையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அதில் அவர் குறிப்பிட்டு இருந்த படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று.அக் கருத்தில் இருந்து மாறுபடுவதால் இந்தப் பதிவு.

கேள்வி‍ : அவ்வை சண்முகி தரமான நகைச்சுவைப் படமா?
என் பதில் : இல்லை.மூன்றாம் தரமான நகைச்சுவைப் படம்.

பொருள்:

படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்பது விதி.படத்தின் ஒன்லைன் "குழந்தைக்காக மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு ஆண்,பெண்ணாக மாறுவதால் ஏற்படும் குழப்பங்கள்".நன்றாகத் தான் உள்ளது(மிஸஸ் டவுட் பயரில் இருந்து சுட்டது ஆச்சே)

ஆனால் பட‌த்தை எடுத்திருக்கும் வித‌ம்.முழுக்க முழுக்க‌ ஆபாச‌ம்.இர‌ட்டை அர்த்த வ‌ச‌ன‌ங்க‌ளையும்,விர‌ச‌மான காட்சிஅமைப்புக‌ளாலும் ம‌ட்டுமே காட்சிக‌ளை நக‌ர்த்தி இருப்பார்க‌ள்.

தான் பெண்ணல்ல‌ ,ஆண் என்று மீனாவிற்கு க‌ம‌ல் சொல்லும் உச்சக் கட்ட‌ காட்சி ஒரு உச்ச‌க் க‌ட்ட‌ உதார‌ண‌ம்.இதே க‌தையை வைத்து சுரேஷ் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி எடுத்த‌ ச‌ன் தொலைக்காட்சி நாட‌க‌ம் (பதி சபாபதி)இதை விட‌ எவ்வள‌வோ பெட்ட‌ர்.

சுருளிராஜ‌ன்,வெண்ணிற‌ ஆடை மூர்த்தி வ‌கைய‌றாக்க‌ள் இருந்தாலும் நாம் அனைவ‌ரும் சிலாகிப்பது நாகேஷைப் பார்த்து தான்.

என்னுடைய‌ த‌ர‌மான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட்:

1)காத‌லிக்க‌ நேர‌மில்லை.
2)இன்று போய் நாளை வா.
3)தேன்மழை.
4)ச‌பாபதி.
5)ச‌பாஷ்மீனா+வாலிப‌விருந்து=உள்ள‌த்தை அள்ளித்தா.

முடிவுரை:

இது என் க‌ருத்து. அனைவரும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டும் என்று இல்லை.மாறுப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் தான் வாழ்க்கையை சுவார‌சிய‌ம் ஆக்குகின்ற‌ன‌.

குறிப்பு:

1) நானும் க‌ம‌ல் ர‌சிக‌ன் தான்.
2) கோவிச்சுக்காதீங்க கோவி(இதான‌ முர‌ண்தொடை)

இக்க‌ட்டுரைக்கு எத்த‌ன‌ மார்க் கொடுப்பீங்க‌

Monday, November 26, 2007

அழகிய தமிழ்மகன்‍ -பாடலும் போலியா???

அழகிய தமிழ்மகன் கதை "போலி" கதை என்பது நாம் அறிந்ததே.அப்படத்தில் இடம் பெற்று இருக்கும் "மதுரைக்குப் போகாதடி"என்ற பாடலைக் கேட்ட அன்றிலிருந்தே மண்டைக்குள் ஒரு குரல்.ஆ! தொடர்கதையின் நாயகனுக்கு வருமே அந்த மாதிரி.

நிற்கும் போதும்,நடக்கும் போதும்,பறக்கும் போதும் யோசித்ததில் கானல் நீர் விலகியது.காட்சிப் பிழை தெளிந்தது.(courtesy - ‍பாரதி)

அந்தப் பாடலின் முதல் பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த "பள்ளிக்கூடம் போகாமலே,நாங்க பாடம் படிக்காமலே" (வைகாசி பொறந்தச்சு)பாடல் போலவே இருப்பதைக் காணலாம்.

A.R Rahman அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா காபி அடிப்பதின் copyrightவைத்திருந்த தேவாவின் மெட்டையே சுட்டது காலத்தின் comedy.

Thursday, November 22, 2007

ஓசை செல்லாவிற்கு ஒரு அவசரக்கடிதம்

விடுநர்

செல்வம்
கடலையூர்
தமிழ்மணம்

பெறுந‌ர்

ஓசை செல்லா
த‌மிழ்ம‌ண‌ம்

ஐயா,


பொருள்:ந‌மீதாவிற்குத் த‌மிழ் க‌ற்றுத்த‌ர‌க்
கோரி விண்ண‌ப்ப‌ம்

இப்ப‌வும் 25௧‍.11.2007 தேதியிட்ட‌ ஞாயிற்றுக் கிழ‌மையில் க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்ப‌ப் போவ‌தாக‌க் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மானாட‌ ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சியின் துளிக‌ளைப் பார்க்கும் போது சிர்ப்பு,சிர்ப்பாக‌ வ‌ருவ‌தால்(பிழை என்னுடைய‌து இல்லை),இக் க‌டித‌த்தை த‌ந்தி போல் பாவித்து த‌ங்க‌த் த‌லைவி ந‌மீதாவிற்கு ந‌ல்ல‌ த‌மிழ் ந‌ல்குமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப‌டிக்கு
செல்வ‌ம்

Sunday, November 4, 2007

நீயா?நானா?...ஒரு கண்டணம்

நேற்று அப்பாவை பஸ் ஏத்தி விட்டு விட்டு நீயா?நானா? பார்க்கலாம் என்று வேக வேகமாக வீட்டிற்கு வரும் போது மணி 9.40.சரி முடிவையாவுது பார்க்கலாமே என்று டி.வி.ஆன் செய்தேன்.

அதில் ஒரு பெண்,தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததற்கு தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்,அது போன ஜென்மத்தில் தான் செய்த புண்ணியம் என்றும் கூறிக்கொண்டிருந்தது.இதைக் கேட்டவுடன் காலம் சில நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருந்தது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கருத்து தான் இன்று வரை உலக அளவில் நம்மைப் பெருமைப் படுத்துவதாக உள்ளதேயன்றி 2007ல் சொல்லப்பட்ட‌"குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தது தான் செய்த புண்ணியம்" என்ற கருத்து பெருமைப் படுத்துவதாக ஆகாது.

இதில் தவறு அந்தப் பெண்ணின் மீது மட்டும் இல்லை.அதன் பெற்றோர் மீதும்,சமூகத்தின் மீதும் உள்ளது.இந்த நவீன வலைப்பதிவு உலகில் கூட ஒரு மூத்த வலைப்பதிவர் இதே கருத்துடன் உள்ளது நோக்கத் தக்கது.

இவர்களுக்கு எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற கருத்து இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் போது மட்டும் தான் தோன்றும் போல் இருக்கிறது.அது முடிந்த வுடன் இப்படி பிறந்ததற்குப் பெருமைப் பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

திரு.கோபிநாத் அவர்கள் அந்த பெண் அப்படி பேசிய போது ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும் கண்டிக்கத்தக்கது.ஒரே ஒரு பெரியவர் மட்டும் நச்சென்று அந்த மேடையிலேயே கண்டித்தது ஆறுதல்.

விஜய் டி.வி. தொலைக்காட்சி உலக குமுதம் ஆகிக் கொண்டே வருகிறது.அவர்கள் டி.ஆர்.பி க்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது போல் தெரிகிறது.இதற்கும் என் கண்டணங்களைப் பதிவு செய்கிறேன்.

Thursday, November 1, 2007

சிம்பிள் லாஜிக்...இது தெரியாதா??

இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.பெற்றோர்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கே சென்று விட்டு விட்டு,டாடா காட்டி விட்டு வந்து விடுகிறார்கள்.

தாம் பெற்ற பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.எனக்குத் தோன்றுவதெல்லாம், நம் குழந்தைகள் நம்மை உற்று கவனித்து வருகின்றன.நாம் செய்வதை அப்படியே திருப்பி செய்கின்றன.அப்படி இருக்கும் போது, நாம் நம் குழந்தைகள் மீது பாசம் வத்தால் நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகள் மீது தான் பாசம் வைப்பர்கள்.

மாற்றாக நாம் நம் பெற்றோர் மீது பாசம் வைத்தால், அது அவர்கள் மனதில் பதிந்து நம் மீது பாசம் வைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.நாம் தான் அதற்கு இடம் கொடாமல் அடுத்த தலைமுறையினரைக் குறை கூறி வருகிறோம்.

Tuesday, October 30, 2007

பாமரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...

ஐயா வணக்கங்க,

தலைப்பப் பாத்த உடனே,இதென்னடா திருநெல்வேலிக்கே அல்வாவா?? அப்படினு தோணும்.இருந்தாலும் மனசில பட்டதை சொல்ல கடிதத்த விட சிறந்த ஊடகம் வேற இல்லனு தோணுது.

உங்கள எனக்கு ரொம்பப் புடிக்குங்க.ஏன்னா, கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒன்னு சொல்றாங்களே!!.அது இன்னும் இருக்கான்னு சந்தேகம் வரும் போது உங்க எழுத்துகளப் படிச்சாப் போதுமுங்க.படார்னு சந்தேகம் தீந்துடும்.

அப்புறம் உங்க நடை.அதாங்க எழுத்து நடை.சூப்பர் போங்க.உங்கள எழுத்துலக கவுண்டமணினே கூப்பிடலாம்.அவ்வளவு நக்கல்,அவ்வள்வு எள்ளல்.

எல்லாத்துக்கும் மேல உங்க தைரியம்.VIP கள எல்லோரும் இவரு நல்லவரு,தங்கமானவரு,தங்கமான தங்கமானவருனு மட்டும் சொல்லிட்டு இருக்கிற இந்த நாள்ல நீங்க குத்தங்களையும் சொல்றீங்க பாருங்க.simply great ங்க‌.

உங்க மேலயும் எனக்கு கொஞ்சம் விமர்சனங்கள் உண்டுங்க.பாருங்க நீங்க மணிரத்திண‌த்தப்
பத்தி, அவரு அஞ்சலி படத்துல E.T படத்தில இருந்து தட்டுனத மட்டும் சொல்றீங்க.ஆனா அந்தப் படத்தில 1 1/2 வயசு குழந்தைய ஏதோ ஃபுல் கதையையும் உள் வாங்கி நடிச்ச மாதிரி அந்தப் பிள்ளய நடிக்க வச்சிருப்பாரே, அத சொல்ல மாட்டேங்கிறீங்க.கெட்டத மட்டும் சொன்ன, நல்லத மட்டும் சொல்ற அவங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்.

எல்லாத்தையும் படிக்கிறீங்க, கிழிக்கிறீங்க.ஆன பாருங்க குமுதத்தில எழுத்திலேயே பாடி காட்றாங்க.

ஒங்க கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கிறேன்.திரையுலக தருமிக்கு கடிதம் எழுதும் போது நல்லது,கெட்டது ரெண்டையும் எழுதுங்க.இல்லையினா தருமியோட ஃபேமஸ் டயலாக் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியதுங்க.

எங்கள் தலைவர் கவுண்டமணியோட நக்கல் எல்லோருக்கும் பிடிக்குங்க.ஆனா அவரோட தனி நபர் தாக்குதல் தான் யாருக்கும் பிடிக்காது.இது உங்ளுக்கு தெரியாதது இல்ல.ஏன்னா உங்களுக்கும் தலைவரைப் பிடிக்கும்னு சொல்லி இருக்கீங்க.

நன்றிகளுடன்.

Sunday, October 28, 2007

சுஜாதா மீது ஏன் இந்த கோபம்????

No one is ideal here including myself.எந்த ஒரு மனிதனும் 100% positive character ஆக இருந்து விட முடியாது.ப்ளசும்,மைனசும் கலந்துதான் இருக்க முடியும்.

1965 ல் எழுத ஆரம்பித்து சுமார் 42 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் சுஜாதா மீது எனக்கும் சில விமர்சனம் உண்டு.முதலில் அதைப் பார்க்கலாம்.

1) ஏராளமான, எலுமிச்சங்காய் அளவுள்ள போன்ற வர்ணணைகள், ஸ்பூன்லிங் ஜோக்ஸ் போன்ற பாலியல் வக்கிர எழுத்துக்கள்.

2) அயோத்தியா மண்டபம், "ஏழைப் பிராமண பையன் இட ஒதுக்கீடு காரணமாக 95% வாங்குவதற்க்குப் போராடி,போராடி ஓய்ந்து போனான்‍‍-அனிதாவின் காதல்கள்" போன்ற நுண்ணிய சாதீய எழுத்துக்கள் போன்றவற்றின் மீதெல்லாம் என்க்கும் விமர்சனங்கள் உண்டு.

இதையெல்லாம் தாண்டி அவர் தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.

உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்‍‍‍‍-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.

என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

நாம் எல்லோருக்கும் ஹீரோ ஆக வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது.அதற்கு வலிமையான வில்லன் ஒருவர் தேவைப்படுகிறார். அவரைத் தாக்க பிராமணீய எதிர்ப்பு, எழுத்து வியாபாரம் போன்ற ஆயுததைப் பயன் படுத்திக் கொள்கிறோம் அவ்வளவுதான்.

இப்படி வைத்துக் கொள்வோம்.1965 ல் அவர் எழுத வருகிறார்.எழுத வந்தவுடன் புதுமைப்பித்தன் சரியில்லை, ல.ச.ரா சரியில்லை, தி.ஜா சரியில்லை என்று மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் இன்நேரம் அவரை மறந்து போய் இருப்போம்.

அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.

1)சிறுகதைகள்‍ - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு

2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.

3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)

4)‍ இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன், போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.

5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதைஎல்லாம் விட‌ ஸீரீர‌ங்க‌த்து தேவ‌தைக‌ள் (ப‌குதி 1) அவ‌ருடைய‌ ப‌டைப்பின் உச்ச‌ம் என்று கூட‌ சொல்ல‌லாம்.

மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியதும் இல்லை.நம் பதிவுலத்தோடு இதை நாம் ஒப்பீடு செய்யலாம்.

எதை எழுதினாளும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆரோக்கியமான விவாதங்களை எதிர் பார்த்து....

மா.செல்வம்

Friday, October 26, 2007

சன் டி.வி க்குக் கை நடுங்குகிறதா?????

அப்பொதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி கிடையாது."பஞ்சு,பட்டு,பீதாம்பரம்", "ஒளியும் ஒலியும்", "சித்ரஹாரில் வரும் ஒரே ஒரு தமிழ்ப் பாட்டு", ஞாயிறு படம் இதை எல்லாம் பார்க்க வேண்டுமானால் தெருக் கடைசியில் உள்ள வீட்டிற்குத்தான் போக வேண்டும்.அவர்கள் வீட்டின் பெயரே டி.வி.காரர் வீடுதான்.அவர்களும் எங்களை விடாமல் துரத்துவார்கள்.நாங்களும் சளைக்காமல் அவர்கள் சன்னல் வழியே எட்டிப் பார்ப்போம்.அவர்கள் சன்னலையும் சாத்திய பிறகுதான் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் சன்னல் சாத்தவில்லை என்பதை அறிந்து அங்கு ஓடுவோம்.

அப்பாவும் இதென்ன‌டா வ‌ம்பாப் போச்சே என்று த‌வ‌ணை முறையில் ஒரு Black and White டி.வி. ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். டி.வி வந்ததில் இருந்து நான் தான் Antenna Operator.டி.வி யை ஆண்டெனாவுடன் connect செய்து விட்டு On செய்தால் விதவிதமாக புள்ளிகள் மட்டும் தெரிந்தது.படம் வரவில்லை.என் தம்பி ஏதோ ஒன்று சொல்லி அம்மாவிடம் அடி வாங்கினான்.பிறகு எலக்டீரிசியனைக் கூப்பிட்டு வந்து காட்டினால் அவர் தென்னை மரம் அருகே இருப்பதால் Antenna உயரம் பத்த வில்லை என்றார்.2 தென்னை மர உயர Antenna வைத்த பிறகுதான் டி.வி யில் புள்ளிகள் மறைந்து சச்சு தெரிந்தார்.ஆம் முதலில் நங்கள் பார்த்த பாடல் "ரோஜா மலரே ராஜகுமாரி" தான்.

90 க‌ளின் ஆர‌ம்ப‌ங்க‌ளில் cable t.v பழக்கத்தில் வந்து ஒரு நாளைக்கு 3 படங்கள் போட்டார்கள். எங்கள் வீட்டில் Cable connection கொடுக்காததால் மீண்டும் டி.வி.காரர் வீட்டு சன்னலை முற்றுகை இட்டோம்.அப்போது தான் சன் டி.வி. தனது ஒளிபரப்பு சேவையை தொடங்கியது.

இடையில் ஒரு நாள் நான் Antennaவை அங்கிட்டும், இங்கிட்டும் திருப்பி திருட்டுக் கேபிளில் பாசமலர் படம் தெரிந்த போது ஜான் பெயர்டு அடைந்த சந்தோசத்தை அடைந்தோம்.

பாச‌ம‌ல‌ர் ப‌ற்றி பேசிப் பேசியே அப்பாவை cable t.v connection கொடுக்க சம்மதிக்க வைத்தோம்.

சன் டி.வி அப்போது பல புதுமைகளால் ஈர்த்தது."சுரேஷ் சக்ரவர்தியின் டிக்,டிக்,டிக் கேம் சோ,பதி சபாபதி","ஜேம்ஸ் வசந்தனின் வார்த்தை விளையாட்டு","ரபி பெர்னாட்டின் நேருக்கு நேர்","டி.கே.வி ராஜனின் சினிமா குவிஸ்", "சாமியர்களின் சண்டை","வீரப்பனின் பேட்டி","இந்திய தொலைக்காச்சிகளில் முதன் முறையாக அவர்கள் போட்ட படங்கள்", "பயணிகள் ரயில்", "இந்த வாரம்... என்று கிளப்பிய ஆர்வம்", "Functionsஇன் Live coverage", "தூரன் கந்தசாமியின் குரல், "ஜென்மம் திகில் நாடகம்", "மெகா சீரியல்கள் அறிமுகம்" என்று அனைத்தும் நினைவில் நிற்பவை.

ஆனால் இன்று அவர்கள் சுய பரிசோதணை செய்து கொள்ள வேண்டும்.வெறும் சீரியல்களையும், படங்களையும் மட்டும் நம்பக் கூடாது.சீரியல் போர் அடித்து விட்டது. படம் 28 ரூபாய்க்கு விளம்பரம் இல்லாமல் பார்க்க முடிகிறது.விஜய் டி.வி.யும் தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்து உள்ளது.

நீங்கள் மஸ்தானா,மஸ்தானா பண்ணுவதர்க்குள் அவர்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கு சென்று விட்டார்கள்.

எனவே கலக்க போவது யாருவை காபி அடித்து அசத்தப் போவது யாரு என்று பண்ணாமல், புதிதாக உங்கள் முத்திரையோடு Programmes கொடுத்தீர்களேயானால் நாங்கள் பார்ப்பதற்க்கு தாயராக உள்ளோம்.

குழந்தைகள்...ஜாக்கிரதை

காலையில் குளிப்பதற்காக பக்கெட், சோப், சகிதமாக குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டுப் பாப்பா(வயது 1 1/4)குளித்து முடித்து விட்டு ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தது.நான் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கே போய் "ஷேம்,ஷேம் பப்பி ஷேம்" என்று சொன்னேன்.

அது என்னைப் பார்த்து முறைத்து ..தா போடா என்று மூன்று எழுத்து சென்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியது.நானும் அதிர்ந்து சரி கௌதம் மேனன் படம் பார்த்து வளர்ந்த குழந்தையாய் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சரி நமக்கு மட்டும் ஏன் இந்த அவமானம் என்று எண்ணிய போது,"மூஞ்சினே, மூஞ்சி சில மூஞ்சிகளைப் பார்த்தலே இப்படியெல்லாம் தோணும்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு குளிப்பதற்க்குச் சென்றேன்.

குளித்து முடித்து விட்டு வரும் போது, பக்கத்து வீட்டு தாத்தா(வயது 65) அவரும் அதே வார்த்தையை அக்குழந்தையிடம் வாங்கியிருந்தார்.எங்கள் இருவர் காதிலும் same blood

குழந்தைகள் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் தான் அது தெரியாமல் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம்.

ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

என் மீது ஊர்ந்து கொண்டிருந்த எறும்பை
நசுக்கிக் கொன்றேன்
குழந்தைகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Thursday, October 25, 2007

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்

முதலில் சிறுவர் மலரில் ஆரம்பித்தது எனது வாசிப்பானுபவம்.வாரமலரில் குறுக்கெழுத்துப் போட்டி நிரப்பி விட்டு என்னை ஒரு பெரிய மேதாவியாக நினைத்துக் கொண்டது உண்டு.பிறகு பூந்தளிர்,கோகுலம் என்று வளர்ந்து குமுதம் விகடனில் வந்து நின்றது.நான் படிக்க வந்த வயதில் குமுதம் மாலனின் ஆசிரியத்தில் "ஜெக ஜோதியாக" இருக்கும்.

டீன் - ஏஜ் பருவத்தில் கையில் கிடைப்பதை எல்லாம் நான் படிப்பதைப் பார்த்து விட்டு என் அம்மா எனக்கு வேண்டிக்கொள்வதர்க்கு என்று கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
நானும் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ராஜேஸ்குமார்,சுபா என்று வளர்ந்து வந்தேன்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பனால் பாலகுமாரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.அவருடைய எழுத்து முழுவதுமாக என்னை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.அவருடைய நாவல்கள் சுமார் 100ஐப் படித்து ஆஹா இவர் தான் நம் குரு என்று மனதில் வைத்துப் பூஜிப்பதற்குள் அவருக்கும்,வண்ணநிலவனுக்கும் நடந்த சண்டையைப் படித்ததில் மனதில் இருந்த பலூன் படீரென வெடித்தது(இருந்தாலும் உள்ளம் கவர்ந்த கள்வன், இரும்புக்குதிரைகள்,தாயுமானவன் போன்றவை இன்றும் நினைவில் உள்ளது).

விகடனால் பல எழுத்தாளர்கள் அறிமுகம் கிடைத்தது.சுஜாதா, எஸ்.ராமகிருஷ்னன், க.சீ.சிவக்குமார், போன்றோரின் படைப்புகளைப் படிக்க நேரிட்டது.
அதிலும் சுஜாதா தன் எழுத்து எனும் மந்திரக்கோலால் வசியம் செய்ய ஆரம்பித்தார்.அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் இவற்றோடு எனது பெரும் பொழுது போனது.

கல்கியின் பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தனின் சிறுகதைகள், எஸ்.ரா வின் துணைஎழுத்து, போன்றவை என் மனதைப் பெரிதும் கவர்ந்தவை.

இன்னும் நிறையப் படிக்க ஆசை.படிப்போம்,கிழிப்போம்.

Wednesday, October 24, 2007

எனது பெயர் குழப்பங்கள்

உங்களில் யாருக்காவது alies போட்டு பெயர் ரிஜிஸ்டெர் செய்யப்பட்டு உள்ளதா? உங்கள் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது சந்தேகக்கண் கொண்டு பார்த்து உள்ளார்களா? அப்படி என்றால் தாரளாமாக வந்து எங்கள் சங்கத்தில் சேர்ந்து விடுங்கள்.
முதலில் ஒரு சின்ன ஃபிலாஷ்ஃபேக்.நான் பிறந்த உடன் என்னுடைய பாட்டி என்னைக் கூட கேட்காமல் என் அப்பாவின் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள்.அம்மா கூப்பிட முடியாது என்பதால் செல்வம் என்றும் பெயர் வைத்தார்கள்(நாங்க எல்லாம் எப்படி பேரு வாங்கி இருக்கோம் பாத்தீங்கல).பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போதும் M.Marimuthu@selvam என்றே கொடுத்து விட்டார்கள். கல்லூரியில் சேரும் போது தான் பிரச்சினையே(ஆமா பெரிய காவேரி பிரச்சினை).
அண்ணா பல்கலையில் computer application form ல் பெயர் entry செய்து கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.எப்படியோ எனது பெயரை M.Marimuthu A Selvam என்று அண்ணா பல்கலையில் register செய்து விட்டார்கள். எந்த ஆசிரியர் வந்து பாடம் எடுத்தாலும் என் பெயரை வைத்து காமெடி செய்த பிறகே பாடம் எடுக்க ஆரம்பிப்பார்கள்.நாளடைவில் அதுவே பழகிப் போனது.

இப்போது பாஸ்போர்ட் எடுக்க சென்ற போதும் பிரச்சினை தான்.பெயரை மாற்றி விட்டு வர சொல்லி விட்டார்கள்.எனவே பெயர் வைக்கும் போது எதற்கும் யோசித்து வையுங்கள்.இல்லை என்றால் உங்கள் பிள்ளைகளும் வந்து பதிவு போடும் ஜாக்கிரதை

முதலில் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு.முதலில் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் பிறந்தது கடலையூர் எனும் சிறு கிராமம். அப்பாவிற்கு மாற்றல் ஆகும் பணி என்பதால் வரிசையாக வைகை ஆறு,தாமிரபரணி ஆறு, பிறகு திருமணிமுத்தாறு ஆகிய ஆற்றங்கரைகளில் வசித்து வந்தோம் (ஒரு ஆசை தான்). படித்தது சென்னையில்.படித்து முடித்த பின் சென்னை "என்னைப் போடா வெண்ணை" எனறது. படித்தது டெக்ஸ்டைல்.பிறகு திருப்பூரில் 2 வருடங்கள் வேலை.இப்போது மீண்டும் சென்னையில்.

முதலில் எங்கள் ஊர் பற்றி சொல்லி விடுகிறேன்.எங்கள் ஊருக்குப் பக்கத்தில் தான் பாரதியார் ஊர்(எட்டையபுரம்).ஸாரி கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சில.பாரதி ஊருக்குப் பக்கத்து ஊர் தான் எங்கள் ஊர்.ஆனாலும் கூட எங்கள் ஊரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் கூட இல்லாதது எங்கள் ஊரின் தனிச்சிறப்பு.கழுதை வயதாகியும் ஊரின் வாசம் இன்னும் நினைவுகளில் உள்ளது ஆச்சரியமான ஒன்று.

பள்ளிப் படிப்பு முடியும் வரை எங்கள் கல்லூரி வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் சரியான பண்டு.10 ம் வகுப்பில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம்.கலைஞர் கையால் பரிசு.உலகமே காலுக்குக் கீழ் என்று நினைத்தால், இல்லை.12 ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்.கிடைத்தது அண்ணா பல்கலையில் டெக்ஸ்டைல்.

முதல் செமஸ்டரில் அனைத்துப் பாடத்திலும் பாஸ் செய்வதற்குள் டவுசர் கிழிந்து விட்டது.(நன்றி-லக்கிலுக்)."படிக்கவா எடுத்தோம் பிறப்பு" என்று திடீர் ஞானம் வந்தததில், பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம் வந்தது.ஒரு வழியாக 8 செமஸ்டரையும் பெயிலெ ஆகாமல் படித்தது கின்னஸ் புத்தகதில் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது.எங்கு போய் இந்த கண்டணத்தைப் பதிவு செய்வது என்று தெரியாததால் இன்று வரை செய்ய முடிய வில்லை.

பிழைப்பு தேடி மீண்டும் சென்னைக்கு வந்த போது அறிமுகமானவை தான் தமிழ்மணமும், தேன்கூடும்.நான் வந்த போது பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருந்தது(6 மாதங்களுக்கு முன்பு).
பிராய்டு சொல்லுவார்,மனிதனுக்கு இயல்பாக இருப்பது செக்ஸ் மற்றும் அக்ரெசன் இரன்டும் தான் என்று.வலைப்பதிவின் அக்ரெசனால் ஈர்க்கப்பட்ட நான் 6 மாதம் ஜாலியாக வேடிக்கைப் பார்த்து வந்தேன்.என்னுள் நிறைய மாற்றங்கள்.நிறைய புரிதல்கள்.நிறைய குழப்பங்கள்.இதை மேலும் வளர்க்கவே இந்த பதிவு முயற்சி. வாங்க பழகலாம்.

நன்றிகளுடன்.
மா.செல்வம்