Friday, December 26, 2008

அபியும் நானும்....விமர்சனம்

மீண்டும் ராதாமோகன்....

படம் பார்க்க வருபவர்களை கவுரவப் படுத்தி அனுப்பியிருக்கிறார்.

தந்தைக்கும், மகளுக்குமான பாசப்பிணைப்பு என்பது படம் பூசை போட்ட அன்றே எல்லோருக்கும் தெரிந்துவிட்டபோதும், அழகியதீயே, பொன்னியின்செல்வன் (இது மட்டும் சற்று மொக்கை), மொழி கொடுத்த தைரியத்தில் படத்திற்குச் சென்றால், மிக அழகாக திரைக்கதையில் கலக்கியுள்ளார்.

சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்பது முடிவாகிவிட்ட பிறகு, அந்த சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாதவாறு தேர்ந்தெடுப்பதே மிகப்பெரிய கலை தான்.

பாசமிகு நவீன தந்தையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியுள்ளார். மகளைப் பள்ளியில் சேர்க்க நேர்முகத்தேர்வு
க்குத் தயார் ஆவது, பனியனோடு பெருமையாகத் தெருவில் நடப்பது, கடைசியில் ஐஸ்வர்யா அழுகும் போது
மவுனமாக சிரிப்பது, தாயிடம் மட்டும் மகள் அத்துனை உண்மைகளையும் சொல்லிவிட்டாள் என்றபோது லுக்குவது
என கலந்துகட்டி அடித்துள்ளார். காமெடி செய்யும் போது மட்டும் நிறைய இடங்களில் ரோவன் அட்கின்சனின் பாதிப்பு தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். பிருத்விராஜ் மகள் அளவிற்கு உள்ள ஒரு குழந்தை "இந்த அங்கிள் ஏம்மா Mr.Bean மாதிரி பன்றாறு?" என்று தியேட்டரில் கேட்டது சற்று உறுத்தியது.

(சிறு தகவல் : புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ஜனகராஜ் காரிலேயே தயார் ஆவது போல் அமைக்கப்பட்ட காட்சி கூச்சநாச்சமே இல்லாமல் Mr.Bean ல் அடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிகரம் எப்படித்தான் ஒத்துக்கொண்டாரோ?? :‍-)))

ஐஸ்வர்யா அம்மாவாக நிறைவாக செய்துள்ளார். எங்கே இக்கதையை கெடுத்து விடுவாரோ என்ற பயத்தைப் போக்கியுள்ளார் திரிஷா.

குமரவேல் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். நாம் என்னதான் தமிழ்சினிமாவைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த திறமைசாலிகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மனிதர் கலங்கவைத்தும், சிரிக்க வைத்தும் கலக்குகிறார்.

இது தவிர மனோபாலா, தலைவாசல் விஜய், கனேஷ் வெங்கட்ராம் என நினைவில் நிற்கும் பாத்திரங்கள். ராதா மோகன் எடுத்திருந்த சர்தார்ஜி பின்புலமும், வடக்கத்திய கதாபாத்திரங்களும் சென்டிமென்டிற்காக சேர்க்கப்பட்டு இருந்தாலும்
ஓவர்டோஸ்.

வசனகர்த்தா விஜி இல்லாத குறையைப் போக்கியுள்ளார்கள் நாராயணன் / சுப்பிரமணியன். ஊட்டி பின்புலத்தோடு கண்ணுக்கு குளிர்ச்சியாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரீத்தா.

வித்யாசாகர், வைரமுத்து கூட்டணி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். "மகள் படுக்கைக்கு தனியறை புகுவது
பிரிவுக்கு ஒத்திகை" என்ற வரியில் வைரமுத்து திடீரென மீண்டும் பளீச்சிடுகிறார்.

ஆங்காங்கே தெரியும் நாடத்தன்மை, சென்டிமெண்ட் ஓவர்டோஸ் இவைகள் மட்டும் படத்தின் திருஷ்டிப் பரிகாரங்கள்.

மொத்தத்தில் சண்டை இல்லாமல், "Where is the Party tonight?" இல்லாமல், வீரவசனங்கள் இல்லாமல் இவ்வளவு நல்ல‌ படம் எடுத்ததற்கே ராதாமோகனுக்கு குஷ்பு கோவிலுக்கு பக்கத்தில் ஒரு செங்கல்லாவது வைக்கலாம்.

பின்குறிப்பு:

பரங்கிமலை ஜோதியில் திருவண்ணாமலை படம் (சத்தியமாங்கோ.........) பார்க்கப் போக வேண்டிய கோஷ்டி ஒன்று இந்தப் படத்திற்கு வந்து அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் நம் கழுத்தையும் அறுத்தது. அவர்களிடம் சென்று அட்வைஸ் செய்யலாம் என்றெல்லாம் தோன்றியது.

பயமாக உள்ளது. எனக்கு வயசாயிடுச்சோஓஓஓஓஓ :‍-((

Saturday, October 18, 2008

சினிமா......சினிமா.......சினிமா.......சில நினைவுகள்

இந்தியப் பதிவுலகில் முதன்முறையாக..........என்னையும் இத்தொடர் விளையாட்டிற்கு விநோத் அழைத்த போது கண்களில் இருந்து கண்ணீர் தரதரவென வழிந்தது. இனி.....

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


திரையில் பார்த்த முதல் படம் அஞ்சலி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இயக்கம் என்ற எந்த எழவும் தெரியாத அந்த‌ வயதில் பெரிய திரையில் படம் பார்த்ததே ஏதோ லீவு விட்ட சந்தோசத்தை ஏற்படுத்தியது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?


ராமன் தேடிய சீதை. சேரன் படத்திற்கு இனி போகலாமா?? வேண்டாமா??என்ற கேள்வி எழுப்பிய படம்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


நேற்று கே.டிவியில் நந்தா பார்த்தேன். நடிப்பு, இயக்கம், வசனம், பாடல்கள், பிண்ணணி இசை, பாலா அனைத்தையும் தாண்டி கல்லூரிப் பருவத்தில் வந்த மறக்க முடியாத படம். எத்தனையோ முறை பார்த்த பின்பும், நேற்றும் பார்த்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தமிழ்சினிமாக்கள் என்று மாற்றிக்கொள்ளவும். காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து பொய் சொல்லப் போறோம் வரை ஏதோ ஒரு விதத்தில் தாக்கியும் ,சந்தோசப்படுத்தியும், துக்கப்படச் செய்தும் வருகிறது


5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?


பராசக்தி......நம் மக்கள்.....சண்டாளர்கள் என்ன படம் எடுக்கிறார்கள் என்று ஓடவிடாமல் செய்திருந்தால் சிவாஜியும், கலைஞரும் நமக்கு கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


சமீபத்தில் தசாவதாரம். ஒரே காட்சியில் 4 கமல்கள் அசாதாரணமாக வருவதும், சுனாமிக்காட்சிகளும் சந்தோஷத்தைக் கொடுத்தது.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?


வேறு என்ன வேலை...வாரமலர் எலீஸா தொடங்கி, ஆனந்தவிகடன் ராஜூமுருகன் வரை வாசித்து வந்திருக்கிறேன்.


7.தமிழ்ச்சினிமா இசை?


எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் மூத்த கலைஞர்கள் ஆகிவிட்ட நிலையில் , இன்றும் ஜேம்ஸ் வசந்தன்களும், விஜய் ஆண்டணிகளும் நம்மை மகிழ்ச்சிப் படுத்தி வருகிறார்கள்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது உண்டு. டைட்டானிக், மெலீனா, பிளப்பர், பிரேவ்ஹார்ட், பைண்டிங் நிமோ,பைட்கிளப், தாரே சமீன் பர், லக்கான் போன்றவை.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


இல்லை


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நாம் என்ன நினைத்தாலும் ஆண்டிற்கு சுமார் 80 மோசமான படங்களும் 10 நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


வேறு கலைகளில் ஆர்வம் அதிகமாகும். மக்கள் பிரச்சினை பற்றி சிறிது யோசிப்பார்கள். குடும்ப சண்டைகள் / உறவுகள் வளரும். நான் எழுதும் கொடுமையான விமர்சனப் பதிவுகள் நின்று போகும்.

குறிப்பு :

கேள்விகளுக்குப் பதில் எழுதி ரொம்ப காலம் ஆகிவிட்டதால் பதில்கள் சற்று மொக்கையாக இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

தொடர் விளையாட்டில்,

1. சினிமா சிங்கம் முரளிகண்ணனையும்,
2. சிங்காரோ சமீன்

அவர்களையும் அழைக்கிறேன்.

Monday, September 29, 2008

ராமன் தேடிய சீதை - ‍ ஆணாதிக்கப்படமா???

நேற்று மாலை உதயம் திரையரங்கை அடைந்த போது மணி மாலை 6.45. "படம் இன்னும் போடல என்று 6.30 காட்சி டிக்கெட்டை அவர் என் கையில் திணித்த போது தொடங்கியது ஏமாற்றம்...

நான் தியேட்டரில் உள்ள அனைவரிடமும் திட்டு வாங்கி என் இருக்கையை அடைந்த போது பசுபதி எபிசோடு ஓடிக்கொண்டிருந்தது.

பசுபதி பார்வையற்றவர் கதாபாத்திரத்திற்குச் செய்த அப்சர்வேசனை ரேடியோ ஜாக்கி பாத்திரத்துக்கும் செய்திருக்கலாம். நம் ரேடியோ ஜாக்கிகள் எவ்வளவோ பரவாயில்லை.சரியான மொக்கை.கஜாலாவா இது? கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்.

ஏற்கனவே உழவன் படத்தில் பிரபு, நாட்டாமை படத்தில் கவுண்டமணி, போன்றோர் செய்த தனக்கு பெண் கிடைக்காமல் ஏங்கும் நாயகன் பாத்திரம் தான்.சேரன் எத்தனை படம் நடித்தாலும் இப்படியே தான் நடிப்பார் போலிருக்கிறது. ஒரு சின்ன முன்னேற்றம்....ம்ஹீம்... நல்லவேளை கையில் புத்தகத்தை வைத்து கொண்டு ஹீரோயினை "என்னடா?? ஏண்டா?? " என்று வசனம் பேசவில்லை.அதுவரை தப்பித்தோம்.

பத்திரிக்கைகளில் மற்றோர் ஆட்டோகிராப் என்று போட்டிருந்த போதே தெரிந்துவிட்டது. இதுவும் ஒரு ஆணாதிக்கப் படமாகத்தான் இருக்கப்போகிறது என்று. ஆட்டோகிராப் ஒரு தெளிவான ஆணாதிக்கப்படம். யோசித்துப் பாருங்கள்.... ஒரு ஹீரோயினுக்கு முன்பே இரண்டு காதலர்கள் + ஒரு நண்பர் இருந்து அவள் நான்காவது ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் மூன்று பேரும் வந்து பெருமூச்சு விடும் ஒரு உச்சக்கட்ட காட்சியைத் தமிழ்சினிமாவில் கற்பனை செய்து பார்க்க முடியுமா??. வடிவேலு மருதமலையில் இக்கதையை நகைச்சுவை என்ற பெயரில் பயன்படுத்தியிருப்பார்.

தொடைகளுக்கிடையே ஒழுக்கத்தைப் புதைத்து வைத்துள்ள நம் கலாச்சாரத்தில் ஒரு பெண் இரண்டு ஆண்களோடு மாலை மாற்றி வந்த போஸ்டரைப் பார்த்துவிட்டே எம்பி எம்பிக் குதித்தார்கள். ஆனால் ஆட்டோகிராப் உலகத்திரைப்படமாம்???.

இப்படத்திலும் கதாநாயகன் பார்க்கும் பெண்கள் எல்லாம் இவனை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் இவனை வேண்டாம் என்று சொன்ன பெண் மிகவும் கேவலமான வாழ்க்கை வாழ்வது போல் காட்டி, "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று ஏக்கத்தோடு கேட்கும் காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்???

படத்தில் ஓட ஓட காமெடி கூடிக்கொண்டே வருகிறது. படத்தில் சேரன் என்னவோ மிக சீரியஸாகத்தான் நடித்துள்ளார். ஆனால் தியேட்டரில் தான் சிரிக்கிறார்கள். இவ்வளவு சீரியஸான காமெடியை இதுவரைப் பார்த்ததில்லை.

படத்தில் குறிப்பிடத்தகுந்த பாத்திரம் மணிவண்ணன். வித்யாசாகரின் இசையும் ஆங்காங்கே நன்றாகத்தான் உள்ளது.

நிதின்சத்யா எபிசோடு. திருடப் போன இடத்தில் பெண் அழகாக இருந்தால் காதல் வந்துவிடமா??. காதல் வருவதற்கான நல்ல‌ காரணங்களை நம் இயக்குநர்களே இதை விட நிறைய யோசித்து விட்டார்கள் பாஸு...

இயக்குநர் தன் பெயரை மட்டும் படத்திற்கு படம் வித்தியாசமாக வைத்துக் கொண்டால் (ஜெகன், ஜெகந்நாத்) போதாது. இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வேண்டும்.

கடைசியாக ஒரு பின்குறிப்பு:

நம் ரசிகர்கள் பாவம். இந்த பரவாயில்லாத படத்தையெல்லாம் மிகச் சிறந்த படம் என்று சொல்லும் அளவிற்கு 2008 ல் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வு அரசாங்கமே படத்தைப் பார்த்து விட்டு இப்போது "காதலில்விழுந்தேன்" படத்தைச் செய்வது போல் தியேட்டர்களில் திரையிடா வண்ணம் பார்த்துக்கொள்வதுதான்.

சன்டி.வியில் என்னா ஒரு புரட்சி. எல்லா தலைவர்களும் கடும் கண்டணங்களைத் தெரிவிக்கிறார்கள்.எதிர்காலம் சற்று பயமாகத்தான் உள்ளது.:-(

Sunday, August 24, 2008

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு........மற்றுமோர் சூப்பர்சிங்கர்.....

மிக அதிகமான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதமாக விளம்பரம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று, "தமிழ்ப்பேச்சு.........எங்கள் மூச்சு".பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு படைத்த தமிழகத்தின் அடுத்ததலைமுறைப் பேச்சாளர்களை / தலைவர்களை வெளிக்கொணரப் போகும் நிகழ்ச்சி என்று நினைத்தோம்.

இளைய திலகத்தின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் என்ன கொடுமை சார் இது ?

காப்பியச்சுற்று:

முதலில் நடுவர் நெல்லைக் கண்ணணின் ஆசிரியத்தனம்.சூப்பர் சிங்கரில் எப்படி நடுவர்கள் ராகம் சரியில்லை.........தாளம் சரியில்லை..........சுதி சேரவில்லை என்று சிந்துபைரவி JKB அண்ணா ரேஞ்சுக்கு சீன் போடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் நெல்லைக் கண்ணன் கம்பர், வள்ளுவர் என்று சீன் போடுகிறார்.

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பேச்சுப்போட்டி / ஒப்புவித்தல் போட்டி நடத்தும் ஆசிரியரிடம் விட்டது தவறுதான். விளைவு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று மனசு சொல்லுது.......பாக்காதேன்னு புத்தி சொல்லுது.......

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களாக வேண்டும் என்றால், கம்பராமாயணமும், திருக்குறளும் தெரிந்தால் தான் ஆக முடியும் என்றால் அந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது?????

நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். திருவள்ளுவர் திருக்குறளை சொந்தமாக எழுதித்தான் இவ்வளவு புகழ் பெற்றாரே தவிர மற்ற இலக்கியங்களை மனனம் செய்து புகழ் பெறவில்லை.இலக்கியங்களைப் பிரதி எடுக்கும் வசதி இல்லாத அந்தக் காலத்தில் வேண்டுமானால் மனனம் செய்வது புத்திசாலித்தனமாக‌ இருந்திருக்கலாம்.சாகாவரம் படைத்த இணையம் போன்ற விடயங்கள் வந்த இக்காலத்திலும் மனனம் செய்வதையே உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் தொண்டர்களை என்னவென்று சொல்வது???

தமிழில் பேசும் சுற்று:


தமிழில் தற்போது வைக்கப்படும் பெயர்களில் ஒரு அழகுணர்ச்சியே இல்லாததைக் காணலாம்.

உ.ம்

1) Pen - எழுதுகோல் ‍ - Writing Instrument.

2) Computer - கணிணி ‍ - Calculating instrument.

3) Cellphone - கைபேசி

என்று தற்போது வைக்கப்பட்ட இப்பெயர்களை சங்க காலத்தில் இருந்து புழங்கும் வார்த்தைகளோடு ஒப்பிட்டால் நம் நிலைமை புரியும்.

புயல்களுக்கே அழகுணர்ச்சியோடு காத்ரீனா, ரீட்டா என்றெல்லாம் பெயர் வைக்கும் மற்றவர்களோடு ஒப்பிட்டால்,
தமிழில் பெயர் சூட்டும் விசயம் ஒரு தவறான திசையில் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்த விசயங்களைப் பற்றியெல்லாம் நடுவர்களாக வந்தவர்களே யோசித்து இதுவரை ஒன்றும் செய்யாத நிலையில் போட்டியில் பங்கேற்க வந்தவர்களைப் போட்டுஎடுத்தது எந்த விதத்தில் நியாயம் ? ? ?

பேச்சு என்பது ஒரு கலை. தமிழைத் தவறாகச் சந்தைப்படுத்தும் ஒரு விஷயம் இல்லை.

பாட்டுப் போட்டியில் நன்றாகப் பாட வேண்டுமே தவிர....பாடலின் சிறப்புகளைப் பற்றிப் பட்டியல் போடக்கூடாது.அதே போல் கம்பர் என்ன சொன்னார்??? இளங்கோ என்ன சொன்னார் என்பதை விட நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதே முக்கியம்.

கம்பராமாயணத்தைப் பக்கம் பக்கமாகப் பேசும் கம்பன் கழக பேச்சாளர்களை விட, அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் கலைஞரின் பேச்சு சிறந்தது என்பதில் யாருக்கும் (ஜெயலலிதாவிற்குக் கூட) மாற்றுக்கருத்து இருக்காது.

தமிழை உயர்த்திப் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு

1) பேசுபவரின் கருத்து என்ன ????? கருத்தின் உண்மை என்ன ????
2) அதை எவ்வளவு சுவையாக கேட்கும் வண்ணம் பேசுகிறார்?????
3) எவ்வளவு சுருக்கமாகப் பேசுகிறார்?????????

போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டால் உண்மையிலேயே நமக்கு மிகச் சிறந்த அடுத்த தலைமுறை பேச்சாளர்கள் கிடைப்பார்கள்..........

முக்கியக் குறிப்பு:

நண்பனோடு பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த‌ கருத்துக்கள் இவை.....ஹி.ஹி... நல்லா இருப்பதெல்லாம் அவன் சொன்னது....மொக்கையாக இருப்பதெல்லாம் நான் சொன்னது :-))

Monday, August 4, 2008

குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........

இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்

நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......

இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.

வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி

வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.

(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)

வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....

விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூபூபூ...

வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........

விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்குள்ளேயே சிரிக்கிறார்)

வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...

வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????

வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????

வாசு : அப்ப நயந்தாரா???

வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....

வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........

வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......

(ரஜினி வீட்டில்)

ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....

சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....

ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????

சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......

(மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)

பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...

வடிவேலு : என்னன்னு......

பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற‌. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........

வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......

ரஜினி பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.

ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க.....

வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....

வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............

வடிவேலு : 2 வைபா.............

வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......

ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......

வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????

(ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்))

கட்டாய டிஸ்கி :

இந்த சம்பவங்கள் கற்பனையே :-))

Sunday, August 3, 2008

குசேலன் -‍ ஏன் இந்த கொலை வெறி ???? விமர்சனம்

கதை:

சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நண்பனை பல காரணங்களுக்காகக் காணத் தவிக்கும் ஏழை முடிதிருத்தும் நண்பன் பற்றிய கதை.

திரைக்கதை:

இந்தக் கதையையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி எழுதிக்கொள்ளவும்.

வசனம்:

ரஜினியின் புகழ் பரப்பும் வசனங்களைச் சொன்னால் மட்டும் போதும் படம் 100 நாட்கள் ஓடி விடும் என்று சொன்ன ஜோசியக்காரனை பி.வாசு மாற்றி விடுவது நல்லது.

பசுபதி:

அவரும் என்ன தான் செய்வார் பாவம். திருப்பி திருப்பி ஒரே காட்சியையே படமாக்கியுள்ளதால் தன் கூத்துப்பட்டறை பயிற்சி முழுவதையும் காட்டியும் எடுபடவில்லை.

மீனா:

படத்தில் ஓரளவு நன்றாக செய்துள்ள ஒரே ஜீவன்.

நயந்தாரா:

காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார். அதுவும் வடிவேலு மறைந்திருந்து பார்க்கும் காட்சி ஒரு தேர்ந்தெடுத்த..........சரி அடுத்த விசயத்துக்கும் போவோம்.

வடிவேலு:

யூ டூ வடிவேலு.........சமீபத்தில் வந்த எந்தப் படங்களிலும் இந்த அளவு கொத்தியதாக ஞாபகம் இல்லை. தியேட்டரில் மொத்தம் 1 1/2 இடத்தில் மட்டுமே சிரித்தார்கள்.

லிவிங்ஸ்டன் / சந்தானபாரதி / பாஸ்கர்/வையாபுரி/சந்தானம்:

இந்த கோஸ்டியைத் தவிர்த்து இருந்தாலே பாதி சேதாரத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

பிரபு:

போலீஸ் ட்ரெஸ்ஸில் வந்த போது அனைவரும் அசந்தர்ப்பமாக சிரித்தார்கள். செந்தில் என்ற பழைய சந்திரமுகி பெயரை சூட்டினால் மட்டும் போதுமா. என்ன கொடுமை சார் இது ?? என்று பி.வாசுவைக் கேட்டிருக்க வேண்டாமா??

கேமரா:

அது என்ன சூப்பர்ஸ்டார் வரும் காட்சிகள் மட்டும் வீடியோகேம்ஸ் பார்ப்பது போல் உள்ளது.
Technology has improved so much???????

இசை:

வெயில் / பொல்லாதவன் போன்ற படங்களுக்கு இசையமைத்த G.V பிரகாஷ் பெயரை வைத்துக் கொண்டு குசேலன் படக் குழுவினரை யாரோ ஏமாற்றி விட்டதாக
தீவிர வதந்தி ஒன்று பரவியுள்ளது.

வாசு:

நடிகன் மாதிரி காமெடி படம் எடுத்த வாசுவா இது??? அழுத்தமான கிளைமாக்ஸ் அதனால 13 ரீல்கள் சும்மா செம காமெடியா எடுத்துருக்கோம்னு ஒரு பேட்டில இவரு சொன்ன போது கண்களில் இருந்து என்னையும் அறியாமல் நீர் வந்தது.

ரஜினி:

யாருப்பா அது. அவர் இந்தப் படத்துல இருக்காரா ??? போங்கப்பா ??? பொய் சொல்றீங்க. அண்ணாமலை - 2 , சந்திரமுகி - 2 எல்லாம் நல்ல வேளை வரவில்லை. தப்பித்தோம்.

கிளைமேக்ஸ் :

இது மட்டும் நல்லா இருந்தா போதுமா??? முதல் 2 1/4 மணி நேரம் யாரு உக்காற்றது??

ரசிகர்கள்:

இவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. உங்க தலைவர் சொன்னது தான்....

வேண்டாம்.......நொந்துடுவே.....

Wednesday, July 9, 2008

கதம்பசாதம்-சுப்ரமணியபுரம்,இப்படிக்கு ரோஸ்,புதுப் பண்பலை

சுப்ரமணியபுரம்:

அடிச்சுப் பிடிச்சு விமர்சனம் எழுதலாம்னு பாத்தா தலைகள் எல்லாம் ஏற்கனவே எழுதிட்டதால, ஒரு விமர்சன சுருக்கம்.

ஏற‌த்தாழ‌ அனைவ‌ருமே அறிமுக‌ம்.இருந்தாலும் ப‌டத்தைப் போர் அடிக்காம‌ல் எடுத்துள்ளார்க‌ள்.எல்லோரும் போற்றும் "ராசாத்தி ச‌வுண்டு ச‌ர்வீஸ்", க‌ழுத்தைக் க‌ற‌ க‌ற‌வென‌ அறுக்கும் வ‌ன்முறை இவைகளைத் த‌விர்த்துவிட்டுப் பார்த்தால் உல‌க‌த் தர‌ம் என்று எல்லாம் ப‌ய‌முறுத்தாம‌ல் ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை த‌ந்துள்ளார்க‌ள்.

ம‌துரை....வாக்கிங் நேர‌க் கொலை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் ல‌க்கிலுக் த‌ன் விம‌ர்ச‌ன‌த்தில் த‌விர்த்த‌து ஏன்??? என்பது மில்லிய‌ன் யூரோ கேள்வி.

.............................................................................

"இப்ப‌டிக்கு ரோஸ்" அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌ட்டு என்னை ஏமாற்றிய‌ ஒரு நிக‌ழ்ச்சி.உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்வ‌து போல் தோன்றும்.(உ.ம்.. அவ‌ர் தூக்கு போட்ட‌ போது உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்துச்சு????).உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்யும் ஒரு ப‌ழைய‌ தொழில் ம‌ட்டும் அனைவ‌ராலும் எதிர்க்க‌ப்ப‌டுவ‌து ஏன் என்று தெரிய‌வில்லை????.

அதில் க‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் பில்லிசூன்ய‌ம், மாந்ரீக‌ம் ப‌ற்றிய‌ ஒரு அறிமுக‌ம் கொடுத்தார்க‌ள்.நன்கு க‌வ‌னித்துப் பார்த்தால் பில்லிசூன்ய‌ம் செய்யும் ஜெய‌ராம‌ன் கையில் அனைத்து விர‌ல்க‌ளிலும் மோதிர‌ம் போட்டுள்ளார்.விக்ர‌வாண்டி ரவிச்ச‌ந்திர‌னும், சாஸ்திரிக‌ளும் கூட‌ செல்வ‌செழிப்போடுதான் உள்ளார்க‌ள்.பாம‌ர‌ன் சொன்ன‌து போல் "த‌மிழ்நாட்டிற்கு எந்த‌ சாமியும் தேவையில்லை...ஈ.வெ.ராம‌சாமியைத் த‌விர‌".
BTW பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லையே ஏன்...ஒருவேளை ஞாநிகளுக்கு மட்டுமே தெரியுமோ???

...............................................................................

சென்னையில் முத்தூட் நிறுவத்தினர் Chennai - Live என்ற பண்பலையை ஆரம்பித்துள்ளார்கள்.இதன் துவக்க நிகழ்ச்சி செவ்வாய் அன்று தாஜில் நடந்தது.இதன் சிறப்பம்சம் சென்னையின் முதல் Talk FM என்று சொன்னார்கள்.நிறைய விவாத நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும் என்று சொன்னார்கள்.வரவேற்போம்....

Tuesday, June 17, 2008

தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.

என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?

"பாத்தம்வே என்னத்த சொல்ல"???

அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???

சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..

விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....

நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....

அதுக்குத்தான் கீழே எழுதுராங்கலாம்ல...

என்னல நீயும் ஆக்கங்கெட்ட கூவ கணக்க பேசுத....நாம என்ன மாநில மொழி திரைப்படத்துக்கால போயிருக்கோம்....கீழ எழுத்துக் கூட்டிப் படிக்க....

சரி விடுங்க அண்ணாச்சி...மேல சொல்லுங்க....

நானும் இந்த ஊருல 40 வருசமா இருக்கம்ல.ஆனா இங்கன இருக்கிற எட்டயபுரத்துக்கே வழி தெரியாது.ஆனா எங்கனையோ இருந்து வந்த வெள்ளக்காரன் வில்லன் பய மெட்ராஸ், செங்கல்பட்டுனு சந்து சந்தா ஹீரோவைத் துரத்துராம்வே....

என்ன அண்ணாச்சி நீங்களும் லாஜிக் எல்லாம் பாத்துக்கிட்டு......

எல கேக்குரவன் கேனையனா இருந்தா......

இருந்தா.....

விடுல அதுக்கு மேலே அவுகளே நிரப்பிக்கிடுவாகா....

அப்புறம் ஒப்பனை பத்தி சொல்லலியே அண்ணாச்சி....

அதுல சும்மா சொல்லக்கூடாதுவே....நல்லா பண்ணியிருகாக...ஆனா பல மேக்கப்பு இந்தியன் தாத்தா மாதிரியும், சண்முகி மாமி மாதிரியும் இருக்குறத தவித்துருக்கலாம்வே....அதே மாதிரி தேவையே இல்லாத மேக்கப்புகளும் படத்துல இருக்குதுவே....

அண்ணாச்சி என்ன சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டே இருக்கீங்க....படத்துல நல்லதே இல்லையா....

என்னவே இப்படி பேத்தனமா கேட்டுப்புட்ட.படத்துல வார தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்சினிமாவ அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போவுதுவே....உதாரணமா கேமரா.நம்ம ரவிவர்மன் தம்பி இருக்குல்ல அது ஏதொ ஸ்பீல்பெர்க் படம் எடுத்த மாதிரில எடுத்துருக்கு....

என்ன இவ்வளவு உழைப்பையும், நல்ல கதைக்கு, நல்ல படத்துக்கு கொட்டியிருந்தா எல்லாத்துக்கும் சந்தோஷம் தானவே....அதான் துக்கமா கிடக்கு.ஆனா படத்த பாக்காம மட்டும் இருந்துராதல....பாரு என்ன‌!!!!

பின்குறிப்பு :அடுத்த பதிவு ... தசாவதாரத்தில் அரசியல்

Sunday, June 15, 2008

தசாவதாரம் ‍- திரை விமர்சனம்

உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ‍ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.

(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல ‍ உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)

இதை அப்படியே எடுத்தால் மும்பை எக்ஸ்பிரெஸ் / ஆளவந்தான் போன்ற வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும் என்பதால் பத்து அவதாரங்கள்,நிறைய அரசியல் என்று ஜிம்மிக்ஸ் காட்டியுள்ளார்.

முதலில் கமலின் உழைப்பு."வந்தோமா...இரண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமா...4 பாட்டுப் பாடுனமா என்று இல்லாமல் (சத்தியமா குருவி பத்தி சொல்லலீங்கோ)என்று இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே உழைத்துள்ளார்.லக்கிலுக் சொன்னது போல் தேவையில்லாத அவதாரங்களையும் எடுத்துள்ளார்.உ.ம் நெட்டைப் பாத்திரம்.

கமலைப் பார்த்து பார்த்து கடைசியில் பக்கத்து சீட்டில் உட்காந்திருப்பவர் கூட கமல் தானோ என்ற சந்தேகம் வருகிறது.இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள்...

1) பூவராகவன்
2) போலீஸ் அதிகாரி ‍(தெலுங்கு பேசுப‌வ‌ர்.)
3) வில்ல‌ன் க‌ம‌ல் ‍ (மேக்க‌ப் த‌விர்த்து)
4) நம்பி பாத்திரம்

அசின் நன்றாக செய்துள்ளார்.இருந்தாலும் மோசமான பாத்திரப் படைப்பு.எனக்கு விஜய் டி.வி நீயா...நானாவில் பேசிய "குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காகப் புண்ணியம் செய்த பெண்" தான் நினைவுக்கு வந்தார்.க‌டைசி சீனில் த‌மிழ்சினிமாவின் இல‌க்க‌ண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ கம‌ல் மீது காத‌லும் வ‌ந்து விடுகிற‌து.

எல்லா சீனிலும் கமலே வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விடுகிறது.இதை கமல் எப்போது நிறுத்துவாரோ...தெரியவில்லை.இந்த படத்தில் அப்படி வந்து போனவர்களுள் முக்கியமானவர்கள்....கபிலன்,நாகேஷ்,கே.ஆர்.விஜயா,மல்லிகா ஷெராவத் போன்றோர்.

படத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சில மேக்கப்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தான்.அசத்தியுள்ளார்கள்....

ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)

ஹிமேஷ் இசையில் உலகநாயகனே பாடலும், கல்லை மட்டும் பார்த்தால் பாடலும் ஓ.கே.

கே.எஸ் ரவிக்குமார் தன்னால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மசாலா படங்கள் :-(( எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

உலகத்தரம் என்ற வியாதியின் காரணமாக ஹாலிவுட் கதையையே அடித்திருப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சியைப் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்குள் தாராளமாக நுழையலாம்.எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி...

பின்குறிப்பு :

அடுத்த பதிவு...கடலையூர் என்ற கிராமத்து ர‌சிக‌ர் பார்வையில் இருந்து தசாவதாரம் விமர்சனம்...

என்ன‌ ப‌ன்ற‌து...இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ வ‌ச்சு ச‌த்திய‌ம் வேற‌ ப‌ண்ணியிருக்கோம்...

Monday, June 2, 2008

சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....

நேற்று உயிரைப் பணயம் வைத்தாவது சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்து விடுவது என்று முடிவு கட்டினேன்.ஒவ்வொரு திரையரங்காக பார்த்து கடைசியில் உதயம் வந்து சேர்ந்தேன்.

சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக் கடந்த பின்னும் ஏறத்தாழ முழு திரையரங்கும் நிரம்பி இருந்தது.

படம் பற்றி பல பதிவுகள் வந்துவிட்டதால் மீண்டும் அதையே சொல்லி மொக்கைப் போட விரும்பவில்லை.படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி கேரம்போர்டு விளையாடும் காட்சி தான்.

தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மிக அழகாக சொல்லியிடுக்கிறார்கள்.

இந்த‌ப்ப‌ட‌மும் திரைய‌ர‌ங்கில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக்கொண்டு தான் இருக்கிற‌து.ஆபாச‌ம் இல்லை...வ‌ன்முறை இல்லை... ப‌ஞ்ச் ட‌ய‌லாக்குக‌ள் இல்லை...பறந்து போய் ரயிலைப் பிடிக்க வில்லை...பின் எப்படி ???மக்களுக்கு மறை கழண்டு விட்டதா??? ஏதோ பீம்சிங் காலத்து படம் மாதிரி இருக்கு..இது எப்படி ஓடுது??? என்று கோட‌ம்பாக்க‌த்துக்கார‌ர்க‌ள் ரூம் போட்டு ம‌ண்டையைப் பிடித்துக் கொண்டிருப்ப‌தாக‌க் கேள்வி...

ம‌க்க‌ள் பார்க்கிறார்க‌ள்...நாங்க‌ள் கொடுக்கிறோம் என்ற கேனைத்தனமான வாத‌ம் இனி எடுப‌டாதோ என்ற பீதி எழுந்துள்ளது.

ஞாநி இயக்குநர் அமீருடனான விவாதத்தில் ஒரு மிகச் சிறந்த கருத்தைச் சொன்னார்."ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல எண்ணங்களும்,வக்கிர எண்ணங்களும் சரிபாதியாக உள்ளது.மொழி போன்ற படங்கள் நல்ல எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன...பருத்திவீரன் போன்ற படங்கள் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன" என்றார்.

மற்றொரு விஷயம்,வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது என்பது எளிதான வேலை.நல்ல விஷயங்களுக்கு தீனி போடுவது தான் கடினமான வேலை.ஒவ்வொரு ஆண்டும் 100 படங்கள் வந்தாக வேண்டிய நிலையில் எல்லாப் படங்களும் நல்ல எண்ணங்களுக்குத் தீனி போடும் வகையில் எடுப்பது என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை விட கடினமான வேலை.

ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா...

Sunday, May 4, 2008

தரணி - விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...

"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.

"ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு..."

"சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க..."

"விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை ஆரம்பிக்கிறார்".

"படத்த ஓப்பன் பண்ணவுடனேயே ஒரு பிரச்சினையைக் காட்டுறோம் சார்..."

"அது என்ன பிரச்சினை????"

"அது ஒரு பிரச்சினையே இல்லை சார்."

"இப்பத்தான் பிரச்சினைன்னு சொன்னீங்க..."

"அத சொல்லல சார்.பிரச்சினை ஒரு மாட்டேர இல்ல.ஏன்னா இன்ட்டர்வெல்க்கு 30 நிமிஷம் கழிச்சுத்தான் நீங்க பிரச்சினைக்கு உள்ளேயே போறீங்க..."

"அதுவரைக்கும்....."

"இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுட்டு இருந்தீங்கன்ன பரதன்ட்ட சொல்லி இன்னொரு படத்துக்கு பூஜை போட சொல்லிருவேன்..."

"என்னது பரதனா???...அண்ணா நீங்க சொல்லுங்கன்னா..."

"படத்தோட பேரு குண்டு...இதுல நீங்க ஒரு கோலிக் குண்டு சாம்பியன்.இரண்டாவது சீன்ல பயங்கரமா ஒரு கோலிக்குண்டு மேட்சு நடக்குது..அதுல நீங்க ஜெயிக்கிறீங்க..."

விஜய்..மனதிற்குள்(ஏதோ IPL match ரேஞ்சுக்குப் பேசுறாரே)

"நீங்க ஜெயிச்சி கப் வாங்குறீங்க...ஸ்கீரன்ல உங்கள ப்ரீஸ் பண்ணி கதை,திரைக்கதை,இயக்கம் தரணின்னு போடுறோம்."

"ஆங்...இதுல மட்டும் தெளிவா இருங்க.."

"என்ன‌து???"

அண்ணா நீங்க‌ க‌தைய மேல‌ சொல்லுங்க‌ன்னா...

"விஜ‌ய் You are insulting me...அதான் சொல்லி முடிச்சிட்டேனே..."

"என்னது சொல்லி முடிச்சுட்டீங்களா?????"

"ஆமா..."

"இது 15 நிமிஷத்துக்குத்தான ஓடும்.மீதி 2 மணி நேரத்துக்கு..."

"வித்யாசாகர்ட்ட சொல்லி 6 பாட்டு வாங்கிட்டேன்.அப்புறம் காமெடிக்கு விவேக் கிட்ட சொல்லி பெருச்சாளி, வச்சுக்கிட்டு இருக்கிறது அப்படி இப்படின்னு ஏதாவது அசிங்கமா பேசச் சொல்லி சமாளிச்சுக்கலாம்..."

"அப்ப ஹீரோயினு..."

"விஜய் நீஙக 2 படம் என் கூட பண்ணியும் என் frequency க்கு வரல.திரிசா தான் ஹீரோயின்.அத அமெரிக்காவுல இருந்து நீங்க இழுத்துக்கிட்டு ஓடி வ‌றீங்க..."

"என்ன‌து அமெரிக்காவுல‌ இருந்தா???"

"ஆமா ம‌துரை முடிச்சாச்சு, ம‌லேசியா முடிச்சாச்சு...அடுத்து அமெரிக்கா தானே..."

"கிழிஞ்ச‌து..."

"அப்புற‌ம் ஒரு முக்கிய‌மான‌ விச‌ய‌ம்.உங்க‌ளோட‌ இன்ட்ரோ சாங்குக்கு மாள‌விகா கிடையாது.ந‌மீதா தான்."

"ஏன் ???"

"ஏன்னா இந்த‌ப் ப‌ட‌த்துலேயே ஏன் மாள‌விகாவுக்குப் ப‌திலா ந‌மீதாவ‌ போட‌ல‌ன்னு ஒருத்த‌ர் த‌க‌வ‌ல் அறியும் சட்ட‌த்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்."

விஜ‌ய் ம‌ய‌ங்கி விழுகிறார்.

க‌ட்டாய‌ பின்குறிப்பு..

இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது இல்லை.

உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??

உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..

"த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???"

"Wipro வுல"

"சம்பளம் எவ்வளவு வரும்???"

"17000 வரும்."

"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"

"இல்ல Campus Interview....

"சரி உனக்கு எவ்வளவு வரும்??"

"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."

"ஒரு 9000 வரும்."

"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.

சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாண‌த்துக்கு வரும் போது தந்திர்றேன்...

குருவி‍ - திரைவிமர்சனம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரன் உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குருவி.

குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு விஜய் ஓடும் காட்சிகளில் கில்லி தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்கிறது.(ஒரு படம் பார்த்தா பார்த்த அன்னிக்கே மறந்து போற சக்தியக் கொடு இறைவா!!!!!)

விஜய் ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துள்ளார்.(பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்ற அறிவுரை உட்பட).விஜயை சூப்பர்(காமெடி)மேனாக மாற்றியுள்ளார்கள்.வில்லன்கள் படம் முழுக்க சுட்டும் ஒரு குண்டு கூட மேலே படவில்லை.அடுத்த முறை சுடறதுக்கு நல்லா ட்ரெயினிங் எடுங்கப்பா...(ஹி..ஹி துப்பாக்கியைச் சொன்னேன்)

திரிசா...டிட்டோ....பலபடங்களில் செய்தது தான்.

விவேக் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் க்ராஸ் ஆகும் பெண்களை அசிங்கமாக‌ப் பேசி காமெடி செய்வாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.இந்தப் படத்தில் டபுள்மீனிங் தூக்கல் தான்.

வில்லன்களாக‌ சுமன், ஆசிஷ்வித்யார்த்தி போன்றோர்.வில்லன்களாக அறிமுகமாகி காமெடியன்களாக முடிந்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.அதுவும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் மொழ..மொழன்னு பாட்டிற்கு விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.வித்யாசாக‌ர் பின்னியுள்ளார்.

ப‌ர‌த‌ன் இல்லாத‌ குறை வ‌சன‌ங்க‌ளில் தெரிகிற‌து.வெறும் பில்ட‌ப்புக‌ள் ப‌ட‌த்தின் முத‌ல் வார‌க் க‌லெக்ச‌னுக்கு ம‌ட்டுமே உத‌வும் என்ப‌தை வ‌ச‌ன‌க‌ர்த்தா உண‌ர்வார் என‌ ந‌ம்புவோம்.

கோபிநாத்தின் காமிரா ப‌ட‌த்தைப் பிர‌ம்மாண்ட‌மாக‌ காட்டியுள்ள‌து.

தரணியின் படங்களில் இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் படத்தில் இல்லாதது பெறும் குறை.அதிலும் இரண்டாம் பகுதி முழுவதும் சண்டைகளால் நகர்கிறது.

ச‌ங்க‌ர் எப்ப‌டி நாட்டைத் திருத்தும் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ அதுபோல் த‌ர‌ணியும் இந்த‌ வ‌கைக் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ என்று தோன்றுகிற‌து..


மொத்ததில் படம் பரவாயில்லை.ஆனால் கில்லி போல் இல்லை.:-((

Monday, April 21, 2008

அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்

கடவுளின் பவரையே லவட்டிக் கொண்டு போகும் இரண்டு மேன்சன் வாழ் இளைஞர்கள் பற்றிய கதையில் லாஜிக் என்ற வஸ்துவை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.

ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான‌ படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.

கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும் பின்னியிருக்கிறார்.ஆனால் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அடிக்கடி விண்டோஸ் டெஸ்க்டாப் பேக்ரவுண்டு மாற்றுவது போல் அடிக்கடி பேக்ட்ராப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.

சந்தானம்...அநியாயத்திற்கு நடித்துள்ளார்.இப்படியே போனால் அடுத்த பேரரசு படத்தின் நாயகன் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.சந்தானத்திடம் நாம் எதிர்பார்க்கும் டைமிங் மிஸ்ஸிங்.:-((

கஞ்சா கருப்பு நிறைவாக செய்துள்ளார்.தன் குடும்பத்தாருடனான காட்சிகளில் கலக்கியுள்ளார்.

நம் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கூட கொஞ்சம் அதிகமாக வைத்திருப்போம்.அதைவிட குறைவாகத்தான் நாயகி மதுமிதாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.ஜோதிர்ம‌தியும் அவ்வ‌ப்போது வ‌ந்து போகிறார்.

ராஜேஷ்,M.S பாஸ்கர்,இளவரசு,தலைவாசல் விஜய்,V.S ராகவன் என ரகளையான கேரக்டர்களை இயக்குநர் அறிமுகம் செய்கிறார்.ஆனால் அந்த அளவு இவர்களைப் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் சோகம்.

குறையேதும் இல்லை....,அட அட அட என்ற இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது.

படத்தின் மிகப் பெரிய குறை சிரிப்பு தேவனாக இருந்திருக்க வேண்டிய சிம்புத்தேவன்,அட்வைஸ் தேவனாக மாறி மொக்கை போட்டு இருப்பதுதான்.பல இடங்களில் கொத்தி விட்டார்.

கடைசி சீனில் வரும் காமெடி படம் முழுக்க வந்திருந்தால் ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக இருந்திருக்கும்.இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.:-(((

சங்கரின் ராசி எண்ணாண 8 வரும்படி டைட்டில் வைத்தால் மட்டும் போதாது என்பதை சிம்புத்தேவன் உணர அறை எண் 305 ற்கு வர்ம் கடவுளைப் பிரார்த்திப்போம்.

பின்குறிப்பு.
85000 சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையினரின் கைகளை மொன்னையாக்கும் சிம்புத்தேவன் இப்படத்தை இயக்குவத்ற்கு மாதம் 3500 சம்பளத்திற்கும்,அவருடைய காட்பாதர் சங்கர் ரோபோ படத்தை இயக்குவதற்கு மாதம் 2500 சம்பளத்திற்கும் வேலை செய்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது...

கேட்கிறவன் கேனையனாக இருந்தால்............

Tuesday, April 8, 2008

யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்

தனுஷ் வேலைவெட்டி இல்லாத உருப்படாத இளைஞன்.அவருடைய பாசக்கார எதிரியான அப்பா ரகுவரன்.தீடீரென ஒரு நாள் வழியில் நயந்தாராவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார் தனுஷ்
:-)).தனக்குள் பற்றி எரியும் காதலை நயந்தாரவிடம் தனுஷ் சொல்ல "நோ" சொல்லிவிடுகிறார் நயன்.சிபாரிசுக்கு போகும் ரகுவரனையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.ரகுவரன் இறந்துவிடுகிறார்.ம‌ன‌மாற்ற‌த்திற்காக‌ ந‌ண்ப‌ணின் திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் கிராம‌த்திற்குச் செல்கிறார் த‌னுஷ்.அங்கே ம‌ண‌ப்பெண் ந‌ய‌ன்....இடைவேளை.

ந‌ய‌னின் மிக‌ப் பெரிய‌ குடும்ப‌ம் த‌னுஷை ஏற்றுக் கொண்டார்க‌ளா?த‌னுஷ்,ந‌ய‌ன் ஜோடி இணைந்த‌தா என்ப‌து மீதிக்க‌தை.

என்ன‌ 3,4 த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ள் சேர்ந்து பார்த்தது போல் உள்ள‌தா? :-((

படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த பழைய கதைக்கு செல்வராகவன் விறுவிறுப்பான திரைக்கதையும்,போரடிக்காத வசனங்களும் எழுதித் தந்துள்ளார்.

தனுஷ் பொல்லாதவனிற்கு பிறகு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.ஆனால் ஆங்காங்கே அவருடய‌ மாமனாரைக் காப்பியடிப்பது மட்டும் நெருடல்.

இப்ப‌ட‌த்தில் ந‌ய‌ந்தார‌வை ப‌ற்றி சொல்லாவிட்டால் புழ‌ல் சிறையில் தள்ளி விடுவார்க‌ள்.அவ்வ‌ள‌வு பாந்த‌மாக‌ இருக்கிறார்.ட‌ப்பிங் க‌லைஞ‌ரின் உத‌வியோடு ந‌ன்றாக‌ ந‌டிக்க‌வும் செய்துள்ளார்.

ர‌குவ‌ர‌ன் வ‌ழ‌க்கமான பிரெண்ட்லியான‌ அப்பா.ஆனால் வ‌ழ‌க்கமான‌ என்று சொல்ல‌ முடியாத‌ அள‌விற்கு பின்னியுள்ளார்.ப‌ட‌த்தில் அவ‌ர் இற‌க்கும் காட்சியில் ஏனோ க‌ண்க‌ளில் இருந்து த‌ண்ணீர் வ‌ந்த‌து.

த‌னுஷின் ந‌ண்ப‌ராக‌ ந‌டிப்ப‌வர், அலைபாயுதே ப‌ட‌த்தில் இருந்து த‌ன‌க்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ ஹீரோயினை ஹீரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை செய்து வ‌ருகிறார்.எப்போது தான் விடியுமோ பாவ‌ம் :-((

க‌ருணாஸ் ஒரு சீனில் ம‌ட்டும் சிரிக்க‌ வைத்து விட்டுப் பின் அவ்வ‌ப்போது த‌லையை ம‌ட்டும் காட்டுகிறார்.

பதினைந்து வயது பெண்ணின் காதல் எபிசோட் அபத்தம். அதிலும் அப்பெண்ணிற்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்.என்ன.. முடிக்கும் போது மெச்சூராக முடித்து தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.கொடுமை..

முதல் பாதி விறுவிறுப்பு பின்பகுதியில் சற்று குறைவு தான்,

பாடல்கள் ந‌ன்றாக‌ உள்ள‌து.அத‌ற்காக‌ இப்ப‌டியா சொல்லிக்காம கொள்ளிக்காம‌ திடீர் திடீர்னு வ‌ர்றது.

ஜ‌வ‌ஹர் முத‌ல் ப‌ட‌ம் என்ற‌ சுவ‌டே தெரியாம‌ல் ந‌ன்கு இய‌க்கி உள்ளார்.

ப‌ரிந்துரை:

ஒரு முறை பார்க்கலாம்.

எச்சரிக்கை:

படத்தின் நாயகியின் குடும்பப் பிண்ணணி காரணமாக தமிழ்மணத்தில் டவுசர் கிழியும் வாய்ப்பு உள்ளது.:-))

Friday, April 4, 2008

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்திப்பு - 30/3/2008 கொஞ்சம் லேட்டான பார்வை).

தாழ்தளப் பேருந்தில்(Automatic Door)சென்றபடியால் காந்திசிலை சிக்னலில் இறங்க முடியாமல் கண்ணகி சிலை நிறுத்தத்தில் சென்று இறங்கினேன் :-((

ஆடி அசைந்து நான் செல்வதற்குள் கூட்டம் களைகட்டத் துவங்கியிருந்தது.

கூச்சத்தோடு என்னை அறிமுகம் செய்தவுடன் வினையூக்கி உங்கள் விமர்சனங்கள் படித்துள்ளேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுத்தார்.

பதிவர் நித்யகுமாரன் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் போது நானாகவே "ஹி..ஹி எனக்கு இது கொஞ்சம் புதுசு.இவ்வுலகிற்கு வந்து 6 மாசம் தான் ஆகிறது" என்று சொன்னேன்.அதற்கு அவர் "நான் வந்து 2 மாசம் தான் ஆகிறது..ஒன்றும் பிரச்சினை இல்லை"என்று பதிலிறுத்தார்.

"கூட்டத்திற்கு நம் ஆதர்ஷ நாயகன் வவ்வால் வந்திருக்கிறார்",என்ற வதந்தி கிளம்பிய போது,"ஒருவேளை அவரா இருக்குமோ..ஒருவேளை இவரா இருக்குமோ...ஒருவேளை அப்படி இருக்குமோ...ஒரு வேளை இப்படி இருக்குமோ என்றெல்லாம் குழம்பி,ஒருவேளை அது நானாகவே இருக்குமோ என்ற முடிவுக்கு வரும் அளவிற்குத் தெளிவாக இருந்தேன்.:-((

"This cat ம் Milk Drink மோ "என்றவாறு மூஞ்சி வைத்திருந்த குசும்பன் வழக்கம்போல் எல்லோரையும் வாரிக்கொண்டும்,வாரப்பட்டுக் கொண்டும் இருந்தார்.

அப்போது அங்கு வந்த டோண்டு சார் சுமார் 30 அடி உயரத்தில் குதித்து தான் ஒரு 65 வயது இளைஞர் என்று நிரூபித்தார்.(3 அடியை 30 அடி என்று எக்ஸாஸ்ஜிரேட் செய்வது சங்க காலத்து மரபு :-))

மா.சிவக்குமார் இணையத்தில் மட்டுமில்லை, விசைப்பலகையிலும் தமிழை ஏற்றியே தீர வேண்டும் என்று தமிழ் ஒட்டியையும்(ஸ்டிக்கர்),மென்பொருள் குறுந்தகடு ஒன்றையும் விநியோகித்தார்.

சுகுணாவிற்கும்,அதியமானிற்கும் உலகமயமாக்கல்,சந்தைப்பொருளாதாரம்,கோககோலா,மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி என்றெல்லாம் விவாதம் வந்த போது நான் "ஆத்தாடி !!!" என்று எதிர்திசைக்கு வந்து விட்டேன்.

எதிர்திசையில் லக்கி கலக்கிக் கொண்டிருந்தார்.பாலகுமாரன்,சாரு,ஜெயமோகன்,சுஜாதா,பாட்ஷா,முகவரி பட வசனங்கள்,பதிவுலகம் என்று அனைவரும் கலந்துகட்டி பேசியது அந்தக் காலத்து குமுதம் படிப்பது போல் இருந்தது.

வெங்கட் என்ற நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது "சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம்...ஆனால் படிக்காதவர்கள் இருக்கமுடியாது"என்றெல்லாம் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசினார்கள் என்று சொன்னார்.

முர‌ளிக்க‌ண்ண‌ண்,ல‌க்கிலுக்,அதிஷா ஆகியோர் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு ரூபாய் புத்த‌க‌ம் வெளிக்கொண்டு வ‌ருவ‌து ப‌ற்றி பேசினார்க‌ள்.மிக நல்ல முயற்சி.

பார்த்த முதல் நாளே வா..செல்வம் என்று தோள் மீது கை வைத்து உரிமையோடு அழைத்துச் சென்ற பாலா,

வீட்டிற்கு வாங்க அங்க பழகலாம் என்று அன்போடு கூப்பிட்ட அதிஷா மற்றும் அவர் நண்பர்,

பெயர் சொன்னவுடன் "நீ தானா அது??" என்று கேட்ட வரவனை,

"ஐ.டி துறை,டெக்ஸ்டைல் துறை, ஈழத்தமிழர் பிரச்சினை",என்றெல்லாம் பேசிய நண்பர் பாரி,

இருட்டில் கூட நான் கூலிங்கிளாஸ் அணிவதை நீங்கள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்த அபிஅப்பா,

சாந்த சொரூபிகளாக காட்சியளித்த உண்மைத்தமிழன்,பைத்தியக்காரன்,சுந்தர்,ஆடுமாடு என வந்திருந்த அனைவரும்

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...

அடுத்த சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்து......

Thursday, March 27, 2008

பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...

சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((

வவ்வால் அவர்களின் பங்குசந்தை குறித்த சமீபத்திய பதிவினைப் படித்தேன்.அதில் அவர் "இந்தியாவின் gdp 8 சதவிகிதமாக இருக்கும் போது பங்குச்சந்தையின் வளர்ச்சி மட்டும் எப்படி 800 சதவிகிதமாக உள்ளது?" என்ற நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

இதைப் படித்ததும் எனக்கும் பின்வரும் சந்தேகங்கள் தோன்றின.யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்...

பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.

1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.

2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் "இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே...இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா...இது சரியா?

இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.

ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

Tuesday, March 11, 2008

வெள்ளித்திரை - திரைவிம‌ர்ச‌ன‌ம்

"From the makers of Mozhi"என்ற எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம்.

பாடம் 1 :(எந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்போடு செல்லக்கூடாது)

சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இரண்டு இளைஞர்கள்."என்ன செய்தாலும் சரி, நடிகனாக ஆகியே தீருவேன்" என்று பிரகாஷ்ராஜும்,"தரமான இயக்குநராகத்தான் ஆவேன்"என்று பிருத்விராஜும் சினிமா என்ற மாய உலகை சுற்றி சுற்றி வருகின்றனர்.

பிருத்வியின் கதையைத் திருடி ஹீரோவாகிறார் பிரகாஷ்.படமும் ஓடி உச்சநடிகராகிறார்.பிருத்விக்கு அவர் கதை திருடப்பட்டதால் இயக்குநராகும் வாய்ப்பு பரிபோகிறது.

இடையே ந‌டிகையான கோபிகாவிற்கும்,பிருத்விக்கும் காத‌ல்.கோபிகா த‌ன் அண்ண‌ணோடு ச‌ண்டை போட்டுக் கொண்டு பிருத்வியைத் தீடீரென‌ ம‌ண‌ம் முடிக்கிறார்.

"ந‌டிகையின் க‌ணவ‌ர்"என்ற‌ சாயல் பிருத்வி மீது விழுந்ததும் அவர் சினிமா முயற்சியில் ஒரு தொய்வு ஏற்படுகிறது.இதை உணர்ந்து கோபிகா அவரை விட்டுப் பிரிகிறார்.

ம‌ன‌ம் வெறுத்த‌ பிருத்வி த‌ன் கொள்கைக‌ளில் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்டு பிர‌காஷ்ராஜை வைத்து க‌ம‌ர்சிய‌ல் ப‌ட‌ம் ஒன்றை ஆர‌ம்பிக்கிறார்.அதில் அவ‌ர் ச‌ந்திக்கும் பிர‌ச்சினை என்ன‌ என்ப‌தே கிளைமாக்ஸ்.

பிர‌காஷ்ராஜ் "நடிகன்" கதாபாத்திரத்தில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளில் அல‌ப்ப‌றையாக‌ ஆர‌ம்பிக்கும் பிரகாஷ்,போக‌ போக சுண‌ங்கி விடுகிறார்.

பிருத்வி அநியாய‌த்திற்கு "Under Play"செய்திருக்கிறார்.தன் கதையை ஒருவன் திருடினாலும்,மனைவியே தன்னை விட்டுப் பிரிந்தாலும் ஒரே மாதிரியான ரியாக்சன்.படம் பார்ப்பவர் மனதில் எதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பாட‌ம் 2:அதிகமான "Under play"வும் ஆபத்து.

M.S பாஸ்கர்,சரத்பாபு,சார்லி முஸ்தபாவாக வருபவர்,அனைவரும் தங்கள் அனுபவத்தை காட்டியிருக்கிறார்கள்.

வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம்.விஜி வசனங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருக்கலாம்.

பாட‌ம் 3 :ந‌ல்ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ம‌ட்டும் ஒரு ப‌ட‌த்தை ஓட‌ வைக்காது.

G.V பிரகாஷ் இசையில் ஒரு பாடல் O.K.

சன் டி.வி பாணியில் சொல்வதானால் வெள்ளித்திரை‍ இன்னும் மின்னியிருக்காலாம்.

Wednesday, March 5, 2008

வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும் - தமிழ்மணம் - லக்கிலுக் அவதூறு

அவர்கள் இருவரின் உறவுகுறித்த நையாண்டிகள் அக்கட்சி மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" என்றெல்லாம் வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார் லக்கி.

யாரோ மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிமானம் அவரது எழுத்தை தரமற்றதாக ஆக்கி வருகிறது என்பதை எப்போது தான் உணர்வாரோ? இந்த முறை தமிழ்மணத்தில் அவர் எழுதியுள்ள இடுகையை வாசிக்கும்போது ஒன்றுமே தோணவில்லை.

அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாமல் அதே இடுகையில் "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" பாடலை லக்கி போட்டிருப்பது உச்சக்கட்ட ஆபாசம். லக்கியின் இந்த இடுகையை ஒரு சராசரி வாசகன் உடனடியாக அவர்கள் இருவரோடு இணைத்து தான் சிந்திப்பான். அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் லக்கி அத்துமீறல் செய்திருக்கிறார் என்பதே தெளிவான உண்மையாகும்.

ஞாநி கிளப்பியது அவதூறா? அல்லது லக்கி இந்த கட்டுரையின் மூலம் கிளப்பியிருப்பது அவதூறா? என்பதை அக்கட்டுரை வாசித்த லட்சக்கணக்கான தமிழ்மணம் வாசகர்கள் அறியமுடியும்.

ல‌க்கியின் க‌ட்டுரையை எல்லோரும் வாசித்திருப்போம் என்ப‌தால் சுட்டி கொடுக்க‌வில்லை.

குறிப்பு:

1)இது அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட லக்கியின் கும்மி ஸ்டைல்.என்னதான் எழுதினாலும் அவர் அளவிற்கு இல்லை என்பது நிதர்சனம்.

க‌டைசியாக‌ கொசுறு கும்மி:

வ‌லைப்ப‌திவுல‌க‌த்தின் ட்ரெண்ட் செட்ட‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ல‌க்கியின் புது ட்ரெண்ட்டிற்கு வாழ்த்துக்க‌ள்.(ஒன்னும் தெரியாத‌ பாப்பாக்க‌ளுக்கு...ல‌க்கியின் பின்னூட்ட‌ங்க‌ளைப் பார்க்க‌வும்)

Friday, February 29, 2008

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினால் கெட்டுவிடுவோமா?என்ன கொடுமை சார் இது...

சுஜாதாவின் நினைவாக சுஜாதா...என்ற இடுகையை இட்டிருந்தேன்.அதில் சுஜாதாரசிகன் என்ற பெயரில் ஒரு நண்பர் வந்து "மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினை முழுவதும் சொல்லி, இது தான் இலக்கியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அவ‌ருக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்றுதான்.

தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா!!

சுஜாதா மட்டும் அந்த‌ மாதிரி எழுதியிருக்காவிட்டால் நான் ந‌ல்ல‌ பைய‌னாக‌ இருந்திருப்பேன் என்ப‌து வ‌டிவேலு காமெடியை விட‌ சிற‌ந்த‌து.

அவர் எழுதியிருந்தாலும்,எழுதியிராவிட்டாலும் நாம் இப்ப‌டியேதான் இருந்திருப்போம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.

சுஜாதா என்ற‌ வார்த்தையைக் கூட‌ கேள்விப் ப‌டாத‌ ந‌ம் கிராம‌த்து ம‌க்க‌ளின் பாலிய‌ல் க‌தைக‌ளை கி.ரா அவ‌ர்க‌ள் தொகுத்து த‌ந்திருக்கிறார்.(நாட்டுப்புற‌ பாலிய‌ல் க‌தைக‌ள்).ப‌டித்துப் பாருங்க‌ள்.

நாம் வாழ்க்கை முழுவ‌தும் ந‌ல்லவ‌ராக‌ இருப்ப‌த‌ற்கு ஒரே ஒரு வ‌ழிதான் உள்ள‌து.பிற‌ந்த‌வுட‌னே ஒரு அறைக்குள் சென்று க‌த‌வை மூடிக் கொண்டு இற‌ந்த‌ பிற‌கு தான் வ‌ர‌வேண்டும்.

ந‌ம் வாழ்க்கையில் ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளும் கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளும் ச‌ரி பாதி க‌ல‌ந்து தான் இருக்கும்.தேர்வு ந‌ம் கையில் தான் உள்ள‌து.

மெக்ஸிகோ ச‌ல‌வைக்காரியையும் தாண்டி, பிராம‌ண ஆத‌ர‌வையும் தாண்டி,எழுத்து வியாபார‌த்தையும் தாண்டி அவ‌ருடைய‌ எழுத்து ந‌ம் அனைவ‌ரையும் பாதித்து உள்ள‌து என்ப‌தே உண்மை.

குறிப்பு:

இந்த‌ இடுகைக்கு "தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா"என்ற‌ பெய‌ர் தான் வைக்க‌லாம் என்று இருந்தேன்.எதுக்கு வ‌ம்பு?யாரும் வ‌ந்து ப‌டிக்க‌மாட்டார்க‌ள் என்று தான் பெய‌ர் மாற்றி வைத்தேன்.
(இதே விச‌ய‌த்தைத் தான் அவ‌ரும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பின்ப‌ற்றினார்.:-))

Thursday, February 28, 2008

சுஜாதா....மீள்பதிவு

சுஜாதா தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.

உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்‍‍‍‍-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.

என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.

1)சிறுகதைகள்‍ - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு

2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.

3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)

4)இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன்,மனுஷ்யபுத்திரன் போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.

5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதைஎல்லாம் விட‌ ஸீரீர‌ங்க‌த்து தேவ‌தைக‌ள் (ப‌குதி 1) அவ‌ருடைய‌ ப‌டைப்பின் உச்ச‌ம் என்று கூட‌ சொல்ல‌லாம்.

மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியது இல்லை.

எதை எழுதினாலும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவர் நினைவுகளோடு.....

Wednesday, February 27, 2008

போய் வாருங்கள் சுஜாதா....

நீங்கள் ரோபோ படத்திற்கு இன்னும் இளமையாய் வசனம் எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தோம்.

க‌ற்ற‌தும்..பெற்ற‌தும் தொட‌ர் அறிவிப்பு இந்த‌ வார‌மாவ‌து வ‌ந்து விடாதா???என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

ச‌த்திய‌மாய் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை.

எங்க‌ளையெல்லாம் வாசிக்க‌ வைத்து, சிரிக்க‌ வைத்து, சிந்திக்க‌ வைத்த உங்க‌ள் எழுத்துக‌ளுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ள்...

உங்க‌ள் ஆத்மா சாந்திய‌டைய‌ட்டும்.உங்க‌ள் நினைவுக‌ள் எங்க‌ள் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.

THANK YOU VERY MUCH OUR DEAR SUJATHA....

Tuesday, February 26, 2008

காதலிப்பவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்களா???

என்ன நிசமாலுமே லவ் பண்றியா?...போடா லூசு(காதல் திரைப்படம்)

நிசமாத்தான் சொல்றீயா??(கற்றது தமிழ்)

நான் அழகா இருக்கேனா???(கண்ணாடில பாத்தாலே தெரியுமே!!)

என்னை ஏமாத்திற‌ மாட்டியே???(இது ஒட்டுக் கேட்ட‌து)

இன்னும் ஆயிர‌ம் ஹார்மோன்த‌ன‌மான கேள்விக‌ள் இருந்தாலும் பின்வ‌ரும் முக்கிய‌மான‌ கேள்விக‌ளை சாய்ஸில் விட்டு விடுகிறார்க‌ள் என்றே நினைக்கிறேன்.

1)உன் எதிர்கால‌ க‌ன‌வு என்ன?(என் ச‌ம்ப‌ள‌ம் 6500 ரூபாய்தான்.)

2)க‌ல்யாண‌த்திற்கு அப்புற‌மா உங்க‌ அப்பா அம்மாவையும்,எங்க‌ அப்பா அம்மாவையும் நாடு க‌ட‌த்திர‌லாமா?இல்ல‌ இங்க‌யே இருந்து தொலைக்க‌ட்டுமா?

3)க‌ல்யாண‌த்திற்கு அப்புறமா கொஞ்ச நாட்களிலேயே என‌க்கு டி.வில‌ கிரிக்கெட்,உன‌க்கு டி.வி ல‌ சீரிய‌ல் ஓ.கே வா?

4)இனிமே வரப்போற 40 வருசத்துக்கும் இதே மூஞ்சிதான்.பரவாயில்லையா?(இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்...என்ன பண்றது விதி)

பின்குறிப்பு:

Annexure 1

எனக்கு இந்த அனுபவம் இல்லை.காரணம் என் கல்லூரிப் பருவத்தின் ஒரு தலைக்காதலைத் திரைப்படமாக எடுத்தால் அது அவ்வாண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக அமையும்.அதன் ஒன்லைன் இதான்...

"என் வாழ்க்கை எனும் சினிமாவில் அவளை நான் ஹீரோயினாகப் பார்க்க அவள் என்னைக் காமெடியனாகப் பார்த்தாள்.:-((

Annexure 2

Phone-in நிகழ்ச்சியில்..
நான்:மேடம் என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க...

டெலிபோன் பெண்:அப்படியா?நீங்க எப்படி இருப்பீங்க சொல்லுங்க...

நான்:ரஜினி மாதிரி

டெ.பெ:ஸ்டைலாவா??

நான்:இல்ல கருப்பா....S.P.B மாதிரி...

டெ.பெ:நல்லா பாடுவீங்களா???

நான்:இல்ல குண்டா இருப்பேன்.அப்புறம் நம்ம S.J சூர்யா மாதிரி...

டெ.பெ:அய்யய்யோ....Better Luck Next ஜென்மம்!!!!

Monday, February 18, 2008

அஞ்சாதே ‍- திரைவிமர்சனம்

அலுவலகத்தில் ஆணி பிடுங்குவதற்காக பாண்டிச்சேரி அனுப்பியிருந்தார்கள்.ஆணியெல்லாம் பிடுங்கி முடித்தபின்பு நைட்சோ - ‍அஞ்சாதே.

சத்யா,கிருபா என இரு நண்பர்கள்.இருவரின் அப்பாக்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.கிருபா போலீஸ் ஆகியே தீருவது என்ற வெறியோடு பயிற்சி எடுக்கிறான்.சத்யாவோ போலீஸில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்டீரீட் தாதாவாகச் சுற்றுகிறான்.

சத்யாவின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்ட எப்போதும் கிருபாவுடன் ஒப்பிடுகிறார் சத்யாவின் அப்பா.இந்நிலையில் சிறுமிகளை பணத்திற்காகவும்,பலாத்காரத்திற்காகவும் கடத்திக் கொண்டு போகும் தயா கும்பலின் என்ட்ரி.

கிருபாவின் தங்கை குளிப்பதை தயா பார்ப்பதைப் பார்த்து டென்சனாகும் சத்யா கோவில் திருவிழாவின் போது தயாவைப் போட்டு பின்னியெடுக்கிறான்.இதைப் பார்த்த சத்யாவின் அப்பா அனைவர் முன்னிலையிலும் "நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்டா" என்று சத்யாவை அவமானப் படுத்த கோபமடைந்த சத்யா அவன் மாமா மூலமாக குறுக்கு வழியில் போலீஸில் சேர்கிறான்.

முறையான‌ பயிற்சி எடுத்துவ‌ரும் கிருபாவிற்கு போலீஸ் வேலை கிடைக்காம‌ல் போக, இத‌ற்குக் கார‌ண‌ம் குறுக்கு வ‌ழியில் வேலை வாங்கிய‌ ச‌த்யாதான் என்று அவ‌ன் மீது கோப‌ம் கொள்கிறான்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் போலீஸ் லைப் ஸ்டைலாலும், கிருபாவின் விரக்தி நிலையைப் பார்த்தும் சத்யா வருந்துகிறான்.

சத்யாவின் மீதான கிருபாவின் கோபத்தை தயா தன் சிறுமிகளைக் கடத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திகொள்கிறான்.கிருபாவும் பணத்தேவை,விரக்தி மற்றும் சத்யா மீதுள்ள கோபம் இவற்றால் தயாவுடன் சேர்கிறான்.

இந்த கும்பலைப் பிடிக்க பொன்வண்ணண் தலைமையில் ஒரு டீம் ஏற்பாடு செய்யப் படுகிறது.சத்யாவும் அந்த டீமில் ஒரு ஆளாக போடப்படுகிறான்.

தயா கும்பலைப் எப்படிப் பிடித்தார்கள்?அனைவரின் முடிவு என்ன என்பது தான் கிளைமேக்ஸ்...

சத்யாவாக நரேன்.சத்யாவாகவே மாறியிருக்கிறார்.ஆரம்பத்தில் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அலம்பல் பண்ணுவது,போலீஸ் ஆன பின்பு அவர்கள் லைப்ஸ்டையிலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது,நண்பனும் தயா கும்பலோடு சேர்ந்து விட்டான் என்று வருத்தப் படுவது என்று பல இடங்களில் பின்னியிருக்கிறார்.ஆனால் ஆங்காங்கே ச‌ற்றே ஓவ‌ராக்ட்.

கிருபாவாக‌ அமீர்.த‌ன் லுங்கியை க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பெண் அணிந்திருப்ப‌தைப் பார்த்த‌வுட‌ன் த‌லையில் அடித்துக் கொள்வ‌து, போலீஸ் ஆக‌ முடியாத‌ விர‌க்தி, என்று இவ‌ரும் மிர‌ட்டியிருக்கிறார்.

த‌யாவாக‌ பிர‌ச‌ன்னா.காக்க..காக்க‌ ஜீவ‌னையும்,வேட்டையாடு..விளையாடு இளாவையும் ஞாப‌க‌ப்ப‌டுத்தும் க‌தாபாத்திர‌ம்.ஆனால் த‌ன் ந‌டிப்பாலும்,மேன‌ரிச‌ங்க‌ளாலும்,அந்த சாயலே தெரியாமல் வித்தியாசப்ப‌டுத்திக் காட்டியிருக்கிறார்.

ஹலோ அங்கிள்!எப்படி இருக்கீங்க என்ற ஒற்றை வரியை மட்டும் டயலாக்காகப் (சென்னை 600028) பேசிய விஜயலக்ஷ்மி இதில் குறிப்பிடத்தகுந்த பாத்திரத்தை செய்துள்ளார்.ஹீரோவுடன் டூயட் பாடாமல் சமீபத்தில் நடித்த ஒரே ஒரு ஹீரோயின் இவராகத்தான் இருப்பார்.(திரிசா,அசின் கவனிக்க)

இன்னும் M.S.பாஸ்கர்,பொன்வன்னன், பாண்டியராஜன்,லிவிங்ஸ்டன்,குருவி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் கச்சிதமான பாத்திரப்படைப்புகள்.

படத்தின் உண்மையான ஹீரோ மிஷ்கின் தான்.தேர்வு செய்த கதையில் ஆகட்டும்,அதற்கு அவர் அமைத்த திரைக்கதை ஆகட்டும், படமாக்கியவிதமாகட்டும் மிஷ்கின் கலக்கியுள்ளார்.படத்தில் நிறைய புதுமைகள்.

1) கைக‌ளையும்,கால்க‌ளையும் ம‌ட்டும் நடிக்க‌ வைத்து சீன் மூடைக் கொண்டுவ‌ரும் காட்சிக‌ள் நிறைய‌ உள்ள‌து.

2) வான‌த்தில் காட்ட‌ப்ப‌டும் அரைநிலா,கிருபா சேற்றில் விழுவ‌து, கிருபாவின் த‌ங்கை அவ‌னை அடிக்க‌டி கைவில‌ங்கால் க‌ட்டிப்போடுவ‌து என்று நிறைய‌ காட்சிக‌ள் பொய‌ட்டிக் ஆக‌ உள்ள‌து.

ம‌கேஷின் ஒளிப்ப‌திவு.அதை விட‌ ப‌ட‌த்தின் லைட்டிங்.ஒவ்வோர் மூடிற்கும் ஒரு லைட்டிங் என‌ அச‌த்தியுள்ளார்.

ப‌ட‌த்தில் இர‌ண்டே இர‌ண்டு பாட‌ல்க‌ள் தான்.சேர்த்து வைத்து பிண்ணணி இசையில் மிர‌ட்டிவிட்டார்க‌ள்.

BTW "கண்ணதாசன் காரைக்குடி...என்ற பார் பாடலுக்கு ஏன் பாண்டியில் அவ்வளவு விசில்..எனக்குப் புரியவேயில்லை..யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...

கடைசிக்காட்சியில் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு ஹீரோவும்,வில்லனும் சண்டை போடுவது போன்ற அபத்தக் காட்சிகளும் உண்டு.ஆனால் அதெல்லாம் மிகவும் குறைவே.வ‌ன்முறை ஜாஸ்தி.16 வ‌ய‌து சிறுமிக‌ள் என்ற‌ வ‌க்கிர‌ உணர்வைத்த‌விர்த்திருக்கலாம்.

மற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌ ஒரு த‌மிழ்த்திரைப்ப‌ட‌ம்.


பின்குறிப்பு:

இந்த‌ப் ப‌ட‌ம் ம‌ட்டும் ஓடாவிட்டால் காளைக‌ளும்,ப‌ழ‌னிக‌ளும் உங்க‌ளைத்(க‌ன‌வில்) துர‌த்தும் என்று அன்போடு எச்ச‌ரிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.

Sunday, February 17, 2008

ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?

"பூஜா - சிங்களத்துக்காரி

ஆரியா - மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேரு

கோணங்கி - தேவமாரு."


மேலே கூறிய அறிய தகவல்கள் அனைத்தும் நம் எழுத்துலக டைனசோரான திரு.ஜெயமோஹன் அவர்களின் (அதிகமில்லை ஜென்டில்மேன்...)2 பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட தகவல்கள்.

இர‌ண்டு ப‌திவுக‌ளில் இருந்து 3 பேர்க‌ளின் சமூக‌த்தை அறிய‌ முடிகிற‌து என்றால்,அவ‌ருடைய‌ ல‌ட்ச‌க்க‌ணக்கான‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌டித்தால் 10 கோடி த‌மிழ‌ர்க‌ளின் ச‌மூக‌த்தையும் அறிந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை"...."யாவருங் கேளீர்"...என்றெல்லாம் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் மொழியை 1 இஞ்ச் மேலே உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை,எட்டிக் கீழே தள்ளாமல் இருந்தால் போதும்.

தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் இந்த சமுதாயத்தின் icon ஆக உள்ளீர்கள்.உங்களைப் படித்து உங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தாலும் இருப்பார்கள்.அவர்களுக்காகவாது நீங்கள் எழுதுகின்ற‌ விஷயங்களை நீங்களே ஒருமுறை படித்து விட்டு அச்சு/வலையில் ஏற்றுங்கள்.

Friday, February 15, 2008

நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!

"எல்லாவற்றையும் பகடி செய்வது சிதைந்த மனது" என்று அய்யனார் அவர்களின் பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஆம் அப்படிப் பார்த்தால் அந்த சிதைந்த மனது எனக்கும் உண்டு.

நான் கொஞ்சம் பருமனாக இருப்பேன்.(கொஞ்சம் என்பது பொய்).என்னுடைய கல்லூரிப்பருவத்தில் இதனால் நம்மை யாரும் ஓட்டுவார்களோ என்ற தாழ்வுமனப்பான்மையில் நான் எல்லோரையும் ஓட்ட ஆரம்பித்தேன் நகைச்சுவை என்ற பெயரில்.அத‌ற்கு எல்லோரும் சிரிப்பார்க‌ள்.நான் யாரை ஓட்டுகிறோனோ அவ‌ரைத்த‌விர‌.

நாள‌டைவில் எப்ப‌டி எல்லோரையும் ஓட்டுவ‌து என்று வித்தை (!)ப‌ழ‌க்க‌மான‌து.அதிலும் பெண்கள் அருகில் இருந்தால் இரு மடங்கு சக்தி வந்துவிடும்.இத‌னால் என‌க்கு எல்லோரும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்.ஆனால் நெருக்கமாக ஒருவர் கூட‌ இல்லை என்ற‌ நிலை உருவான‌து.அவ‌னைத்த‌விர‌.

என்னிட‌ம் பேசிக்கொண்டிருந்தால் 10 நிமிட‌ங்க‌ள் பொழுது போகும் என்ற‌ நிலைமையில் தான் என்னிட‌ம் எல்லோரும் ப‌ழ‌கினார்க‌ள்.

இது குறித்து நான் அவனிடம் வருத்தப்படும் போதெல்லாம், "இதற்கெல்லாம் காரணம் நீயே தான்...ஒருவர் நம்மைப் பற்றி தப்பு சொன்னால் அவரைக் குறை சொல்லலாம்..ஆனால் எல்லோரும் நம்மைப் பற்றிக் குறை சொன்னால் நாம் தான் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்"என்று சொல்வான்.

அப்புறம் என்னைப்பற்றி சுயபரிசோதனை செய்து பார்த்ததில் என் தவறுகள் புரிய ஆரம்பித்தது.ஆனால் என்ன கல்லூரிப் பருவம் முடிந்துவிட்டது.

அங்கதம் குறித்து என் அனுபவத்தில் அறிந்து கொண்டவை:

1)நாம் ஒருவரைக் கிண்டல் செய்யத் துவங்கும் போது அவர்களை விட நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

2)நம்முடைய கிண்டலுக்கு அடுத்தவர்கள் சிரிக்கும் போது நம் கண்கள் மேலே செருக ஆரம்பிக்கும்.உலகத்திலேயே நமக்கு கீழ் தான் எல்லோரும் என்ற நினைப்பு உருவாகும்.

3)உண்மை புரியும் போது நம் கூட நெருக்கமாக யாரும் இருக்க மாட்டார்கள்.

4)ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.

இன்று ஜெயமோஹனும் அங்கதம் என்ற பெயரில் நான் செய்ததைத்தான் செய்துவருகிறார்.எனக்காவது என் தவறுகளை சுட்டிக்காட்ட அவன் இருந்தான்.ஆனால் அவருக்கு....அவருக்குத்தான் தெரியும்.

ஆக நான் ஒன்றும் ஜெயமோஹன் அளவிற்கு உயர்ந்துவிடவில்லை.அவர் தான் என் அளவிற்கு தாழ்ந்துள்ளார்.

கடைசியாக ஜெயமோஹனிடம் ஒரு கேள்வி

எழுத்துலக டைனசோரான நீங்கள் வசனம் எழுதித் தள்ளிய,தமிழ்நாட்டிலேயே 1000 நாட்கள் ஓடி சாதனை செய்த "கஸ்தூரிமான்"என்ற திரைக்காவியத்தை விட பழைய படங்கள் எதில் குறைந்து விட்டது?
(இதுவும் அங்க‌த‌ம் தான்)

Tuesday, February 12, 2008

ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?

//மலேசிய தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்கலாம்; நான் மராட்டியர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்//

அடி கொடுப்பவர்களும், அடி வாங்குபவர்களும் ஒன்று என்று கண்டுபிடித்து சொன்ன ராஜ்தாக்கரே இன்று முதல் "இந்தியாவின் ஒரே விஞ்ஞானி"என்று அன்போடு அழைக்கப்படுவார்.(courtesy - புலிகேசி)

மலேசியாவில் தமிழர்கள் அடிவாங்கியதற்காக கலைஞர் குரல் கொடுத்தாரேயன்றி,மலேசியர்களை அடித்துவிட்டு குரல் கொடுக்கவில்லை.

ம‌ற்ற‌ மாநில‌ம‌க்க‌ளை அடித்து துரத்தும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் கிடையாது.அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு த‌னி ஏரியாவைக் கொடுத்து (ச‌வுக்கார்பேட்)அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கிறார்க‌ளா என்று ம‌ட்டும் அவ்வ‌ப்போது பார்த்து வ‌ருவோம்.(சைட் அடிக்கிற‌துக்கு என்னா பில்ட‌ப்பு..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..)

மொழிப்போராட்ட‌த்தோடு இதை போட்டுக் குழ‌ப்பிக் கொள்ளும் ஆப‌த்து இருப்ப‌தால் முன்னெச்ச‌ரிக்கையாக‌ இப்போதே சில‌ விள‌க்க‌ங்க‌ள்...

1)வ‌ட‌ நாட்டுக்கார‌ர்க‌ளின் மொழியைத்தான் வேண்டாம் என்று சொன்னோமே த‌விர‌ வ‌ட‌நாட்டு ஆட்கள் இங்கு வ‌ருவ‌தை வேண்டாம் என்று சொன்ன‌தில்லை.

2)"நான் உங்க‌ள் ஊரில் வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்..ஒழுங்காக‌ எங்க‌ள் மொழியைப் ப‌டியுங்க‌ள்"என்ப‌து போங்கு ஆட்ட‌ம் என்ப‌தால் தான் ஹிந்தியை வேண்டாம் என்று சொன்னோம்.

3)"ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன‌தால் தான் எங்க‌ளுக்கு என்று த‌னி ச‌ந்தை உள்ள‌து.தனித் திரைப்ப‌ட‌ங்க‌ள்,தொலைக்காட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌து.

எனவே எங்களை வைத்து ஒன்றும் காமெடி...கீமெடி பண்ணவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பின்குறிப்பு:

"என்ன‌ கொடுமை சார் இது?" என்ற‌ த‌லைப்பில் இனி அடிக்க‌டி இது போன்ற‌ சீரிய‌ஸ் விசய‌ங்க‌ள் சிரிய‌ஸாக‌ அல‌ச‌ப்ப‌டும் என்ப‌தை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, February 11, 2008

A.R.ரஹ்மான்‍ இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை

சனிக்கிழமை பக்கத்து வீட்டு பையன் ஓடோடி வந்தான்."அண்ணா என்கிட்ட live concert க்கு 2 டிக்கெட் இருக்கு.உங்க‌கிட்ட வண்டி இருக்கு.உங்க வண்டில போலாம்னு சொன்னீங்கன்னா உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றான்.ஒரு நிமிடம் பொல்லாதவன் தனுஷ் போல் உணர்ந்தேன்."சண்முகம் உட்றா வண்டிய"ன்னு(நாட்டாமை) சொல்லிக்கிட்டு என் சூரப்புலியைக் கிளப்பினேன்.(தெரியாதவர்களுக்கு சூரப்புலி என்பது ஹீமேனின் வாகனம்)...(டேய் நீ வச்சிருக்கிற‌ xl super க்கு இது கொஞ்சம் ஓவர்டா என்று என் தம்பி சவுண்டு விட்டான்)

YMCA போனவுடன் முதல் நுழைவுவாயிலில் நுழைந்தோம்.பதறிப் போன security "சார்..இது VIPங்க வர்ற வழி.நீங்க 4 வது வாசல் வழியா போங்க" என்றார்.(அங்கிருந்து பார்த்த போது A.R.ரஹ்மான் ஒரு புள்ளி போலத்தான் தெரிந்தார்.:-((

MARG என்ற கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாதலால் முதலில் அவர்கள் நிறுவனத்தைப் பற்றி சிறிது நேரம் பேசினார்கள்.

A.Rரஹ்மான் மேடைக்கு வந்த போது அந்த மைதானமே அதிர்ந்தது.வாணவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.A.R.ரஹ்மான் ஹிந்தி பாடலைப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

(எனக்கு "துமாரா நாம் கியா ஹை?" தவிர வேறு எதுவும் ஹிந்தியில் தெரியாது என்பதால் தமிழ்ப் பாடல்கள் பற்றி மட்டும் இங்கே...)

ஹ‌ரிஹ‌ர‌ன்,சித்ரா,சின்ம‌யி,ஷ்ரேயாகோச‌ல்,பிளேஸ்,போன்ற‌ பாட‌க‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள்.(இன்னும் சில‌ பேர் பெய‌ர் தெரிய‌வில்லை..ஹி..ஹி..)

ஹரிஹ‌ர‌ன் ரோஜா பாட‌லில் இருந்து துவ‌ங்கினார்.வாய்ஸும்,இசையும் பொருந்தாம‌ல் ஏதோ சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் ஆடிஷ‌ன் ர‌வுண்டு பார்ப்ப‌து போல் இருந்த‌து.

A.R.ரஹ்மான் பாடிய‌ அத்த‌னை பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருந்த‌து."அதிர‌டிக்காரன் மச்சான்..." (சிவாஜி)பாட‌ல் A.R.ரஹ்மானின் அதிர‌டி..

சித்ரா "க‌ண்ணாள‌ணே என‌து க‌ண்ணை..."(ப‌ம்பாய்)பாட‌லைப் பாடிய‌ போது ப‌ய‌ங்க‌ர‌ கிளாப்ஸ்.அவ‌ருடைய‌ குர‌லுக்கு ஒரு ஊரையே எழுதிவைக்க‌லாம்.என் பெய‌ரில் எந்த‌ ஊரும் இல்லாத‌தால் கை வ‌லிக்கும் வ‌ரை கை ம‌ட்டும் த‌ட்டினேன்.

பிளேஸ் "வாடா..வாடா(சிவாஜி) பாட‌லைப் பாடினார்.


"மதுரைக்கு போகாதடி...(ATM)பாடலை அந்த பாடகரே வந்து அசத்தலாகப் பாடினார்.

இது நியாயமா??..

1)"மதுரைக்கு போகாதடி.."பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு "தில்சேரே..." பாடலுக்கு இல்லாத போது ஏன் இவ்வளவு ஹிந்தி பாடல்கள்?

2)நீங்க‌ள் கொடுத்த‌ ஹிட் ப‌ட‌ங்க‌ள் ஏராள‌மாக‌ இருக்கும் போது ஏன் பாட‌ல் தேர்வில் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்?(சிவாஜியில் இருந்து 3 பாட‌ல்க‌ள், ATMலிருந்து 3 பாடல்கள்,குரு ஹிந்தி படத்தில் இருந்து 3 பாடல்கள்..ஏன் உங்கள் ஹிட்டுகள் மறந்து விட்டதா?இல்லை பாடகர்கள் பற்றாக்குறையா?

3)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?

4)கடைசியாக இங்கு வரும் வெளிநாடு/வெளிமாநில ஆட்களே "வண்க்கம்...நல்ல இர்க்கீங்களா?"என்று தமிழில் பேச ஆசைப்படும் போது மருந்துக்கு கூட ஒரு தமிழ் வார்த்தை இல்லை.. ஏன் ரஹ்மான்?

5)நீங்க‌ளே சொல்லுங்க‌ள் இது நியாய‌மா?

Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்

ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.

வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.

படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு வந்து பாத்தா எங்கம்மா என் சாதகத்த பாத்துட்டு பயந்து போய் கிடக்காங்க.அதுக்கு பரிகாரமா அங்கன தீடீரென முளச்ச ரம்பயோட சிலைக்கு மால போடுறேன்.

உடனே ஏற்கனவே என் நகைச்சுவையில மயங்குன (டி.வி ல வின்னர்,மருதமலை,புலிகேசி, படத்து ஜோக்ஸெல்லாம் பாத்துருக்கும் போல இருக்கு.ஏன்னா இந்தப்படத்துல நான் ஒன்னும் பெரிசா செய்யலியே) ரம்பை என்னை ஆள் வச்சு இந்திரலோகத்துக்கு தூக்கிட்டுப் போய்டுது.இருங்க..இருங்க முழுக்கதையும் சொல்றேன்.அதுக்குள்ள ஓடுனா எப்படி?

காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.

நடுவுல நாரதரா நாசர் அப்பப்போ வந்து போறாரு.எங்க பக்கத்து வீட்டு குழந்தை தீடீரினு செத்துப்போக,எனக்கு இந்த எமப் பய மேல வந்தது பாருங்க கோவம்...இன்டர்வெல்.

அதுக்கு அப்புறம் கதய எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.கழுதய கொண்டு போய்த்தான ஆகனும்னு, பூலோகத்துல காச்சுன சாராயத்த மேலோகத்துக்கு எடுத்துட்டு போய் கிங்கரப்பசங்களுக்கும்,சித்ரகுப்தனுக்கும் ஊத்திக் கொடுத்து இந்த எமப் பயல கொல்லலாம்னு பாத்தா,அந்தப் பயலுக்கு சாவே கிடையாதாம்.அந்த நன்னாரிக்கு பொறந்த நாதாறி எல்லாம் கனவுன்னு நம்பி எங்கள ஏதும் செய்யாம விட்டுடுச்சு.

சரி மக்களோட விதிய மேலோகத்துல இருந்து படிச்சிட்டு போய் பூலோகத்துல அதையெல்லாம் சொல்லி,நரகத்துல கொடுக்கிற தண்டனையையும் சொல்லி அவங்களோட பாவங்கள குறைக்கிறேன்.இதனால‌ முல்லைப் பெரியாறு பிரச்சினை வரைக்கும் தீந்துருதுன்னா பாருங்களேன்.படத்துலயே இதான் பெரிய காமெடின்னு சில நன்னாரிக சொல்லிக்கிட்டு திரியுதுங்க.இருக்கட்டும்...இருக்கட்டும்...

எமப்பயலோட வரவுல ஆட்கள் குறைய டென்சனாகிறாரு எமன்.நாரதர் வந்து என்னைப் போட்டுக் கொடுக்க கடுப்பான இந்திரனும்,எமனும் எனக்கும்,ரம்பைக்கும் சாபம் கொடுக்கிறாங்க.

கொடுமை,கொடுமைன்னு இவ்வளவு நேரம் படம் பாத்தா கிளைமேக்ஸ்ல ஒரு கொடுமை திங்கு,திங்குன்னு ஆடுச்சாங்குற கதையா நான் 90 வயசுக் கிழவனா மாறிடுறேன்.அப்புறம் என்ன ஆச்சு.கத முடிஞ்சது.உங்க கத இல்லீங்க.எங்க படத்தோட கதை.

முதல்ல படத்துல இருக்கிற நல்ல விசயங்கள பாப்போம்.முதல்ல ஞாபகம் வர்றது நம்ம தோட்டா தரணி அண்ணண் தான்.என்ன அருமையா,பிரம்மாண்டமா செட் போட்டுருக்காரு.உங்களுக்கு ஒரு தொப்பிதூக்கல்ணே(ஹேட்ஸாப்).

அப்புறம் இந்த எமப்பயலா வற்றானே.அவன் நல்லா நடிச்சிருக்கான்ப்பு.சும்மா சொல்லக்கூடாது.டயலாக் டெலிவரியும்,பாடி மாடுலேசனும் பய பின்னியிருக்கான்.அதுவும் நீங்க நல்லவரா?கெட்டவரா?ன்னு ஒருத்தன் கேட்குற சீன்ல பிச்சு உதறியிருக்கான்.

நம்ம ஒளிப்பதிவாளர் கோபிநாத்.நல்லா கலர்புல்லா படம்புடிச்சிருக்காரு அண்ணே.

அம்புட்டுதேன். இப்ப மத்த விசயங்கள பாப்போமா...(ஆஹா கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க)

படத்துல கதையும்,திரைக்கதையும் கொஞ்சம் அப்படி,இப்படி இருக்கிறதால நம்ம ஹீரோயினையும் கொஞ்சம் அப்படி,இப்படி காட்டியிருக்கோம்.ஒரு வார்த்தைல சொல்லனும்னா பில்லா நயந்தாராவுக்கு மேலா.என்ன‌ வ‌டிவேலு ப‌ட‌த்துல‌யா இப்ப‌டினு கேட்க‌க்கூடாது.வேற‌ வ‌ழியில்ல‌.

அப்புறம் படத்துல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற மாறியெல்லாம் சீன் இல்ல.ஏதோ அங்கொன்னும்,இங்கொன்னுமா எங்கள அறியாம வந்தது தான் இருக்கு.அதனால ஓவரா எதிர்பார்த்து படத்துக்கு வராதீங்க சொல்லிப்புட்டேன்.

வசனங்கள்.நம்ம தம்பிராமையா நல்லா தமிழ்ல வசனம் எழுதுறாப்ல.ஒத்துகிடுதோம்.அதுக்காக இப்படியா தீடீர் திடீர்னு...முடியல‌...

படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.

எங்கண்ணண் கவுண்டமணி எமனாகவும்,செந்திலு சித்ரகுப்தனாகவும் நடிச்ச லக்கிமேன் அளவுக்கு கூட படம் இல்லைன்னு பாத்தவங்க சொல்றாங்க.வெயிட் பண்ணி பாப்போம்
எப்ப‌டி ஓடுதுன்னு.

மொத்ததுல தமிழ்மண வாசகர்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்னா ஒரு நல்ல உபத்திரவம் இல்லாத,எந்த வம்பதும்புக்கும் போகாத,மொக்கை.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நாங்க எப்படி படம் எடுத்தாலும் வந்து பாக்குறீங்க...நீங்க ரொம்ப நல்லவங்க...(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சரி வர்ட்டா...அடுத்து ஒரு நல்ல படத்துல சந்திப்போம்(எடுத்தா...)

நீதி:
வருடத்திற்கு சுமார் 100 தமிழ்ப்படங்கள் வெளிவரும்.அதில் 10 தான் நல்ல படங்களாக இருக்கும்.இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்.

Friday, February 1, 2008

ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவு

சரி நம் கதைக்கு வருவோம்...அதற்கு முன் ஒரு விளம்பர இடைவேளை...
--------------------------------------------------------------------------------
இந்தியப் பதிவுகளில் முதன்முறையாக....
திரைக்கு வந்து ஒரு நாளே ஆன....
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் விமர்சனம் நாளை
உங்கள் கடலையூர் பதிவில்*....

வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ.....

சாரிபா இரண்டும் மிக்ஸ் ஆயிடுச்சு...

இதை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள்.....

வ‌ழ‌க்க‌ம் போல‌ அப்பா குடுக்கிற‌ காசு தான்...

* condition apply...பட‌ம் பார்த்தால் தான்
-------------------------------------------------------------------------------------

இந்த வோல்டுலயே பிந்நவீனத்துக்கு அப்புறமா நான் அதிகம் பயப்படுவது எங்க வீட்டு எலிக்குத்தான்.இப்படித்தான் சமீபத்தில் 1965 ல் இல்லீங்க..2008 ல் தான் ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த எலி வந்தது.

"ஆஹா!பகலெல்லாம் நல்லா தூங்கிட்டு நைட்டு கரெக்ட்டா டூட்டி பாக்க வந்துடுச்சுடா"என்று மனதில் நினைத்து கொண்டே படாரென எழுந்தேன்

என்ன‌? என்றார் அம்மா.

"இல்லம்மா,அந்த‌ எலிய‌ அடிக்க‌ப் போறேன்" என்றேன்.

"சும்மா ப‌டுறா..நைட்டு டைம்ல‌ போய் காமெடி ப‌ண்ணிக்கிட்டு",என்றார் என்னைப் ப‌ற்றி ஏற்க‌ன‌வே தெரிந்து வைத்திருந்த‌ என் அம்மா.

மீண்டும் எலியின் உருட்ட‌ல்.அது என்னைப் பார்த்து சிரித்த‌தோ என்ன‌வோ??

ஒரு கையில் mob யும்,ஒரு கையில் தடியையும் எடுத்துக் கொண்டு சமயலறையில் நுழைந்தேன்.(அறுக்க மாட்டாதவன் கையில்... போன்ற பழமொழியெல்லாம் ஞாபகத்திற்கு வரக் கூடாது)

எலி என்னைப் பார்த்து "வாடா வாடா வாடா உன் ப‌ல‌த்துக்கும் என் ப‌ல‌த்துக்கும் சோடி போட்டுகிடுவோமா???வாடா வாடா "என்று கூப்பிட்ட‌து போல் இருந்த‌து.

கோபம் தலைக்கேற கண்ணை மூடிக்கொண்டு (பயத்துல தான்)ஒரே அடி.இரண்டாக உடைந்தது...அம்மா வாங்கி வைத்திருந்த பொங்கல் பானை.

மீண்டும் ஒரே அடி.இந்த‌ முறை வாங்கிய‌து நான்...அம்மாவிட‌ம்.ஏண்டா பொங்க‌ளுக்கு வாங்கி வ‌ச்சிருந்த‌ பானைய‌ யாராவ‌து உடைப்பாங்க‌ளா??நாந்தான் அப்ப‌மே சொன்ன‌னே..பேசாம‌ ப‌டுன்னு..கேட்டியா???

ந‌ல்ல‌ வேளை எலி என்னைப் பார்த்து காறி துப்பிய‌தை என் அம்மா பார்க்க‌வில்லை...

Wednesday, January 23, 2008

"கனா காணும் காலங்கள்"கதாசிரியருக்குக் கல்தா???

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் "கனா காணும் காலங்கள்".பள்ளிப் பருவத்து சம்பவங்களை மிகக் கச்சிதமாக தொடராக மாற்றியிருப்பார்கள்.

மிகைப்படுத்துதல் இருந்தாலும்,சுமார் 2 டசன் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசியங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் என்று புகுந்து விளையாடியிருப்பார்கள்.

நடிகர்களின் நடிப்பு ஆகட்டும், கேமரா, பிண்ணணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆகட்டும் ஒரு நேர்த்தி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திரைக்கதையும், வசன‌ங்களும் இருக்கும்.பிரம்மா என்பவர் எழுதி வந்தார்.இப்போது பார்த்தால் திடீரென அந்த நாடகத்தின் உயரதிகாரியின் பெயர் (ரமண கிரிவாசன் executive producer)வருகிறது.

ஏற்க‌ன‌வே இய‌க்குந‌ர் பிர‌புக‌ண்ணாவிற்குப் ப‌திலாக‌ ராஜா என்ப‌வ‌ரை மாற்றினார்க‌ள்.நாட‌க‌ம் நொண்டிய‌டிக்க‌த் தொட‌ங்கிய‌து...

இப்போது க‌தாசிரிய‌ரையும் மாற்றி விட்டார்க‌ள் .... பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று??

(நாங்க‌ளும் ரிப்போர்ட்ட‌ர் ஆயிட்டோம்ல‌)

Monday, January 21, 2008

பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்

முன்குறிப்பு:

"சரி வாடா படத்துக்குப் போகலாம்" என்றேன் தம்பியிடம்.

"என்ன படத்துக்கு?" என்றான்.

"அது வந்து,அது வந்து...பிரிவோம் சந்திப்போம்"கு போகலாம் என்றேன்.

"என்ன‌து?"

இல்ல‌டா ப‌ட‌ம் ந‌ல்லா இருக்காம்..போய்த்தான் பாப்போமே !!!

"இப்ப‌டித்தான் சொல்லி மாய‌க்க‌ண்ணாடிக்கு கூட்டிட்டுப் போன.சேர‌ன் இனிமே என் ப‌ட‌த்துக்கு வ‌ருவியா?வ‌ருவியானு செருப்பால‌யே அடிச்சுத் தொர‌த்தினாரு"

"இல்லடா இந்த‌ப் ப‌ட‌ம் அப்ப‌டி இல்லையாம்"

ஓவ‌ர் டூ பிரிவோம் ச‌ந்திப்போம்(டேய் உன‌க்கே கொஞ்ச‌ம் ஓவ‌ரா இல்ல‌)

ப‌ட‌த்தின் க‌தையை நீங்க‌ள் ப‌ல‌ ப‌திவுக‌ளில்/இட‌ங்க‌ளில் ப‌டித்திருக்க‌க் கூடும் என்ப‌தால் சி.சி.கதையாக‌ ம‌ட்டும்.

"திருமணத்திற்கு பிறகு கூட்டுக்குடும்ப‌த்தில் வாழ‌ ஆச‌ப்ப‌டும் பெண்ணிற்கும், த‌னிக்குடும்ப‌மாக‌ வாழ‌ ஆசைப்ப‌டும் ஆணிற்கும் திரும‌ண‌ம் ந‌ட‌க்கிற‌து.திரும‌ண‌த்திற்குப் பிற‌கு த‌னியே அவர்க‌ள் வாழும் போது அந்த‌ப் பெண்ணிற்கு என்ன‌ பிர‌ச்சினை ஏற்ப‌டுகிற‌து என்ப‌து தான் க‌தை..

இனி பிடித்த‌தும்,பிடிக்காத‌தும்.....

பிடித்த‌து...

1)"வெட்டுறதுக்கு நான் ஒன்னும் இளனி இல்லடா பளனி.."போன்ற பஞ்(சர்)டயலாக்குகள் இல்லை."ஏன் நம்ம த.. கூட..வேண்டாம் விட்டுடு" போன்ற சீண்டல்கள் இல்லை.

2)சிநேகா...மிக‌ச் சிற‌ந்த‌ ந‌டிப்பு.வ‌ந்தோமா,ஹீரோவ‌ ல‌வ் ப‌ண்ண‌மோ,டூய‌ட் பாடுன‌மா என்றில்லாம‌ல் அருமையாக‌ச் செய்து இருக்கிறார்.

3)ஆரம்பக் காட்சியிலேயே கிட்டத்தட்ட 2 டசன் கதாபாத்திரங்களை அழகாக அறிமுகப் படுத்தி அட போட வைக்கிறார் இயக்குநர்.

4)கதாபாத்திரங்களும்,அதற்கான தேர்வும்,அவர்கள் நடிப்பும் கச்சிதம்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் M.S.பாஸ்கர்,ஜெயராம் போன்றோர்கள்.அதிலும் ஜெயராம் மருத்துவராகப் பின்னி இருக்கிறார்.

5)நிறைய காட்சிகளைக் கவித்துவமாக எடுத்துள்ளார்.இன்விடேச‌ன் தேர்ந்தெடுப்ப‌து...ஒலிகளைப் ப‌திவு செய்வ‌து...ஜி.நாக‌ராஜ‌ன் ப‌ற்றிப் பேசுவ‌து... போன்ற‌வை.

6)கேம‌ரா அட்ட‌க்க‌ட்டு ப‌குதியை மிக‌ அழ‌காக‌ப் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.

பிடிக்காத‌து....

1)ப‌ட‌த்தில் எல்லோரும் இய‌ல்பாக‌ ந‌டித்திருக்க‌ சேர‌ன் ம‌ட்டும் "அப்ப‌டின்னா என்ன?" என்று கேட்கிறார்.

2)ப‌ட‌ம் அடிக்கடி ஒரே இட‌த்தில் தேங்கி விடுகிற‌து.ந‌க‌ர‌ மாட்டேன் என்கிற‌து.இடைவேளைக்குப் பிற‌கு த‌னியே இருப்ப‌தால் சிநேகாவுக்கு வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் என்ற‌ ஒன்லைனையே 1 ம‌ணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.

3)படத்தில் மிகைப்படுத்துதல் ஜாஸ்தி.

4)நாடக சினிமா...(முன்னோர்கள் விசு,பாலச்சந்தர் போன்றோர்)

ப‌ரிந்துரை:

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் பார்க்க‌லாம்

Wednesday, January 16, 2008

பீமா - என்ன கொடுமை சார் இது? (விமர்சனம்)

ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.

ப‌ட‌த்தின் ஹீரோவாக‌ அடித்திருப்ப‌வ‌ர்...சாரி நடித்திருப்ப‌வ‌ர் சேது,அந்நிய‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் எல்லாம் ந‌டித்திருக்கும் விக்ர‌ம்.வில்ல‌னாக‌ ந‌டித்திருப்ப‌வ‌ர் பாட்ஷா ப‌ட‌த்தில் ந‌டித்த‌ ர‌குவ‌ர‌ன்.ப‌ட‌த்தை இயக்கியிருப்ப‌வ‌ர் ஆனந்த‌ம்,ர‌ன் இவ‌ற்றின் இய‌க்குன‌ர் லிங்குசாமி.இப்ப‌டியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்க‌ள்!!.

ப‌ட‌த்தின் க‌தை...

சென்னையில் ப‌ணிபுரியும்(!) ஒரு நல்ல‌ ர‌வுடி பிர‌காஷ்ராஜ்.(காட்பாத‌ர் மாதிரி, நாய‌க‌ன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புற‌ம் ச‌ரி வேண்டாம் விடுங்க‌)
இவ‌ர் போட்டுத்த‌ள்ள‌ நினைக்கும் ஆட்க‌ளை இவ‌ருக்கு முன் போட்டுத் த‌ள்ளுகிறார் விக்ர‌ம்.யாருடா நீ? என்று பிர‌காஷ் கோப‌மாக‌க் கேட்க‌ விக்ர‌ம் உன்கிட்ட‌ வேலைக்கு சேர‌ணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.

வேலைக்கு சேர்ந்த‌ கொஞ்ச‌ நாட்க‌ளிலேயே விக்ர‌மின் புஜ‌ப‌ல‌ப‌ராக்கிர‌ம‌த்தைப் பார்த்து "25 வ‌ருச‌ங்க‌ளுக்கு முன்பு நான் என்னையே பார்த்த‌ மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்ப‌டின்னு கேட்க... பிளாஷ்பேக்.

சிறுவ‌னான‌ விக்ர‌மிற்கு த‌ப்புக‌ளைத் த‌ட்டிக்கேட்கும் பிர‌காஷ்ராஜ் ஒரு ஹீரோவாக‌த் தெரிகிறார்.ஒரு க‌ட்ட‌த்தில் விக்ர‌மின் அப்பாவை அடித்த‌வ‌ர்க‌ளைப் பிரகாஷ் அடிக்க, விக்ர‌மும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிர‌காஷ்ராஜ் போல் ஆக‌ வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டு அவ‌ரிட‌ம் வ‌ந்து சேர்கிறார்.

இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக‌ அவ‌ர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வ‌ந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காத‌லிக்கிறார்.

பிர‌காஷ்ராஜின் எதிரி ர‌குவ‌ர‌ன்.அவ‌ரும் ஒரு ர‌வுடி தான்.(கெட்ட‌ ர‌வுடி!!).பிர‌காஷ்ராஜிற்கு விக்ர‌ம் அவ‌ருடைய‌ ப‌ழை‌ய‌ காத‌லியையே திரும‌ணம் செய்து வைக்கிறார்.

ர‌குவ‌ர‌ன்,பிர‌காஷ்ராஜ் கும்ப‌ல் அடிக்க‌டி மோதிக்கொள்கிற‌து.இர‌ண்டு ப‌க்க‌மும் ஆட்க‌ள் இற‌க்கிறார்க‌ள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.

சென்னைக்கு புது போலீஸ் க‌மிஷ‌ன‌ராக‌ வ‌ரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ர‌வுடிக‌ளையும் என்க‌வுன்ட்ட‌ரில் போட்டுத் த‌ள்ள‌ உத்த‌ர‌விடுகிறார்.

விக்ர‌மிற்கும் எல்லாவ‌ற்றையும் விட்டுவிட்டு திரிசாவுட‌ன் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ வேண்டும் என்று ஆசைவ‌ர‌...முடிவில் என்ன‌ ஆன‌து என்ப‌து தான் கிளைமாக்ஸ்.

விக்ர‌ம் இந்த‌ப்ப‌ட‌ம் முழுக்க யாரையாவ‌து அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அத‌ற்கே நேர‌ம் போய்விடுவ‌தால் நடிப்பதற்கு நேரமேயில்லை.

திரிசா மூன்றாவ‌து சீனிலேயே விக்ர‌மை காத‌லித்து விட்டு அவ்வ‌ப்போது டூய‌ட்டிற்கு ம‌ட்டும் வ‌ருகிறார்.

ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌த்தைப் பார்த்து தியேட்ட‌ரில் அனைவ‌ரும் சிரிக்கிறார்க‌ள்.ப‌ட‌த்தில் காமெடி இல்லை என்ற‌ குறையைத் தீர்த்து வைப்ப‌து ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌ம் தான்.

ப‌ட‌த்தின் ஒரே ஆறுத‌ல் பிர‌காஷ்ராஜ் தான்.ந‌ன்றாக‌ ந‌டித்துள்ளார்.ஆனால் ஏற்க‌ன‌வே ப‌ல‌ முறை இதே போல் பார்த்துவிட்ட‌தால் nothing special.

ப‌ட‌த்தின் வ‌சன‌ங்க‌ள் எஸ்.ராம‌கிருஷ்னண‌ன்.பாபாவில் தொட‌ங்கி இந்த‌ப் ப‌ட‌ம் வ‌ரை த‌ன‌க்கு சினிமா வ‌ச‌ங்க‌ள் எழுத‌ வ‌ராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க‌ துணையெழுத்து ப‌டிச்சிட்டு ப‌ல‌ நேர‌ங்க‌ள்ள‌ க‌ண்ல‌ இருந்து த‌ண்ணி வ‌ந்திருக்கு)ப்ச்..

"முத‌ன்முறை" என்ற‌ பாட‌ல் ம‌ட்டும் ப‌ர‌வாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வ‌ந்து குத்தாட்ட‌ம் போடுகிறார்.நீங்க‌ள் க‌ண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாட‌ல் வ‌ரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாட‌ல் வ‌ருகிற‌து ஒரே ச‌லிப்பு...

கேம‌ரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வ‌த‌ற்கில்லை..

2007 ல் ர‌வுடிக‌ள் ப‌ட‌மாக‌ வ‌ந்து கொண்டிருந்த‌தே...அப்போதே வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்.த‌மிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட‌ இந்நிலையில் too late...

முடிவில் எல்லோரும் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ள்.ந‌ம்மையும் சேர்த்து...

ப‌ரிந்துரை:

இத‌ற்கு மேல் உங்க‌ள் இஷ்ட‌ம்!!!!


பின்குறிப்பு:

ப‌ட‌ம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வ‌ந்தால் அங்கு ஒருவ‌ர் என் வ‌ண்டியில் அவ‌ருடைய‌ சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன‌ இது ? என்று கேட்ட‌த‌ற்கு சாரி பாஸ் பீமா எப‌க்ட் என்றார்.

என்ன‌ கொடுமை சார் இது??

Tuesday, January 15, 2008

புத்தகச் சந்தையில் 1/4 நாள்

போன சனிக்கிழம‌ லீவு விட்டிருந்தாங்க‌.சென்னையோட‌ ஹீரோவான டிராபிக்ஜாமுடன் முட்டி மோதித் தோத்துப்போய் கண்காட்சியை அடைஞ்சேன்.மிகச் சரியாக Exitனு போட்டிருந்த பாதையில் உள்ளே நுழைந்தேன்.அமைப்பாளர் ஒருத்தரு ஓடி வந்து "கொஞ்சமாவது அறிவிருக்கா?னு டோக்கன் போடும் ஊழியரைச் சத்தம் போட்டாரு.(சத்தியமாய் அவரத்தாங்க.:-))அத வாங்கத் தான உள்ள போறோம்னு மனசில சொல்லிக்கிட்டே உள்ள நுழஞ்சேன்.

வாசல் பூராவும் கட்டவுட், பேனர்..இதென்னடா ஏதும் அரசியல் கூட்டத்துக்கு தப்பா வந்துட்டோமானு பாத்தா நம்ம எழுத்தாளர்கள் விதவிதமான போசில சிந்திச்சுக்கிட்டு இருந்தாங்க..ஆகா நாம சரியாத்தான் வந்திருக்கோம்னு நினச்சிக்கிட்டு டிக்கட் எடுத்துட்டு உள்ர போய் பாத்தா..ஏத்தே!!எத்தன கடைங்க.ஒரு நிமிசம் நாம இதில தொலஞ்சு போய்டுவோமோன்னு பயமே வந்துடுச்சு.

அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே முதல்ல நுழஞ்சது கிழக்கு பதிப்பகம்.எம்மாடி எத்தன வகையான புத்தகங்க!!.நம்ம சிவாஜி படத்த பத்தின ராணிமைந்தன் புத்தகத்துல ஆரம்பிச்சு எச்சக்கச்சமா அடுக்கி வச்சிருந்தாங்க."அள்ள அள்ளப் பணம்‍ 3", "நான் சரவணண்" இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன்.ஸ்டாலுக்கு வெளியே சில பேர் கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.பதிவர்கள் களை அவங்க கிட்ட‌ இருந்துச்சு.

அப்புற‌மா நான் நுழ‌ஞ்ச‌து ஞான‌பானு ப‌திப்ப‌க‌ம்.இங்க‌ன ஞானியோட புத்த‌க‌ங்க எல்லாம் ம‌லிவுவிலைப் ப‌திப்பா போட்டிருந்தாங்க.ம‌க்க‌ள் க‌ருத்த‌ கேட்க‌ இரண்டு பானையையும் வ‌ச்சிருந்தாங்க.இங்கன 3 புத்தகங்கள வாங்கிட்டு அப்படியே நடையக் கட்டினேன்.

உயிர்மை வாசல்ல மனுஷ்யபுத்திரன் உக்கார்ந்திருந்தாரு.அழகா சிரிச்சுகிட்டேயிருந்தாரு.

காலச்சுவடுலயும் நல்ல கூட்டம்.வகைவகையா நிறய புத்தகங்க இருந்துச்சு.என்ன வில தான் கொஞ்சம் ஜாஸ்தி.

அன்ன‌ம் ப‌திப்ப‌க‌ம் கி.ரா வோட‌ எல்லா புத்த‌க‌ங்க‌ள‌யும் போட்டிருந்தாங்க‌.கி.ரா ஐயா வெளியே உக்காந்திருந்தாரு.அவ‌ருகிட்ட‌ போய் 2 நிமிச‌ம் பேசினேன்.எங்க‌ ஊரும் கோவில்ப‌ட்டி ப‌க்க‌த்தில‌ தான்னு சொன்னேன்.ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டாரு.நான் வாங்கி வ‌ச்சிருந்த "கோபல்ல‌ கிராம‌ம்" புத்த‌க‌த்தில‌ கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு.

ப‌ழ‌.நெடுமாற‌ன் அய்யாவும் ஸ்டாலுக்கு வெளியே உக்காந்திருந்தாரு.திடீர்னு ஒருத்த‌ரு அய்யாவோட‌ கால்ல‌ ச‌ட்டுனு விழுந்தாரு.அவ‌ரு விழ‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே அவ‌ருக்கு இருந்த‌ மாதிரி தெரிய‌ல‌.இருந்தும் அவ‌ரு விழுந்த‌து என்னென்னமோ மனசுக்குள்ள‌ சொல்லிச்சு.

அம்ருதா ப‌திப்ப‌க‌ம் சிற‌ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளோட‌ 10 ப‌டைப்புகள் தில‌க‌வ‌தி அவ‌ர்க‌ளால‌ தொகுக்க‌ப்ப‌ட்டு "முத்துக்க‌ள் ப‌த்து" அப்ப‌டின்னு பேர் கொடுத்து வெளியிட்டு இருந்தாங்க‌.நான் அசோக‌மித்திர‌ன் ம‌ற்றும் வ‌ண்ண‌தாச‌ன் இவ‌ங்க‌ளோட‌ தொகுப்புக‌ள‌ வாங்கினேன்.

விக‌ட‌ன், குமுத‌ம், ஹிந்து ஸ்டால்க‌ள்ள‌ ந‌ல்ல‌ கூட்ட‌ம்.

"த‌மிழ‌ன் என்றோர் இன‌முண்டு,த‌னியே அவ‌ர்க்கோர் குணமுன்டு"னு சொல்றதுக்கேற்ப கண்காட்சியிலேயே food court பகுதியில தான் நல்ல கூட்டம்.பச்சைத் தமிழனான நானும் மரபிற்கேற்ப ஒரு icecream வாங்கி சாப்பிட்டு வெளியே வந்தேன்.

வெளியே அரங்கத்தில கவியரங்கம் ஒன்று நடத்திக்கிட்டு இருந்தாங்க.வெண்ணிலா,யுகபாரதி எல்லோரும் இருந்தாங்க.தங்களோட கவிதைகளால உலகத்தையே திருத்திட ஆசப்படும் அவங்க பண்ணுணது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

வெண்ணிலா க‌விதை வாசிச்சு முடிச்சுட்டு கிள‌ம்பிட்டாங்க‌.அடுத்த‌வ‌ரு என்ன‌ சொல்ல‌றாருனு மேடையில‌ இருந்த‌வ‌ங்க‌ளே கேட்க‌ல‌.ஒருத்த‌ரு க‌வித‌ வாசிக்க‌ ந‌டுவ‌ரா இருந்த‌வ‌ரு மைக்கக் கூட‌ அமைக்காம‌ ப‌க்க‌த்துல‌ பேசிக்கிட்டே இருந்தாரு.பிரபஞ்சன் வேற உக்காந்துகிட்டு இருந்தாரு.கொடுமை.

திருஷ்டிப‌ரிகார‌ங்க‌ள்:

இவ்வ‌ள‌வு செல‌வு செஞ்ச‌ bapasi ந‌ல்ல முறையில‌ க‌ழிப்பிட‌ வ‌ச‌தி செய்யாம விட்டுடுச்சு.

புத்த‌க‌ ரேட் எல்லாம் கூடிகிட்டே போகுது.15 ரூபாய்க்கு நான் வாங்கி ப‌டிச்ச "பூக்குட்டி" இன்ன‌க்கி 90 ரூபாய்.ப‌டிப்பானுப‌வ‌ம், உல‌க‌த்த‌ர‌ம்னு என்னென்ன‌மோ சொல்றாங்க‌.
"யாதும் ஊரே யாவ‌ருங் கேளிர்" பாட்டு ப‌னை ஓலையில‌ தான் எழுதியிருப்பாங்க‌.

கூட்ட‌ம் க‌ம்மி.ப‌ல‌ ஸ்டால்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இல்லை.

இருந்தாலும் ஒரு நிறைவான திருவிழா.