முதல் நாள் எடுத்த சபதத்தையும் மறந்து,"வில்லால் ஏற்பட்ட காயத்தைப் படிக்காதவனைக் கொண்டு ஆற்றலாம்" என்று எண்ணி கூச்ச நாச்சமேயில்லாமல் திரையரங்கிற்குச் சென்றுவிட்டோம்.
படத்தின் முற்பகுதியும் நம் காயங்களுக்கு மருந்து போடுவது போல் தான் இருந்தது.படத்தின் கதை பின்வருமாறு.(சொல்றதுக்கு கதைன்னு ஒன்னு இருக்குதே நன்றி சுராஜ்)
மெத்தப் படித்த பெரிய குடும்பத்தில் ஒரே ஒரு படிக்காத ஆள் தனுஷ்.இதனால் பல அவமானங்களுக்கு உள்ளாகும் தனுஷ், தான் ஒரு படித்த பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் தன் அவமானங்கள் குறையும் என்று ஒரு தியரியைக் கண்டுபிடித்து அதற்காக பொறியியல் படித்து வரும் தமன்னாவைக் காதலிக்கிறார்.தமன்னாவும் தனுஷைக் காதலிக்கத் துவங்கும் போது அவரது தந்தையான சுமன் ஹெலிகாப்டரில் வந்து தன் பொண்ணைக் கூட்டிச் செல்கிறார்.ஆந்திராவிற்குச் சென்று தமன்னாவைக் தனுஷ் எப்படி கைப்பிடிக்கிறார்? என்பதே மீதிக்கதை.
இந்தக் குட்டியூண்டு கதையில், 2 பெரிய ஆந்திரா ரவுடிகள் (சுமன்,சாயாஜி ஷிண்டே)ஒரு பெரிய திருநெல்வேலி ரவுடி(காதல் தண்டபாணி)/அவரது மகன், ஒரு மிகப்பெரிய திருநெல்வேலி ரவுடி (அதுல் குல்கர்னி) / அவரது தம்பி(நிதின் சத்யா), ஒரு சின்ன சென்னை ரவுடி(விருமாண்டி படத்தில் வருவாரே அவர்), அவர்கள் கேங் எல்லாம் சேர்த்து சுமார் 500 உப ரவுடிகள்,ஒரு காமெடி ரவுடி (விவேக்)/அவரது கேங் (செல் முருகன்,போண்டாமணி) (வேறு யாராவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)தனுஷ் சண்டை போட்டு சமாளிப்பதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது.
தனுஷ் பொல்லாதவன் படத்திற்குப் பிறகு நல்ல மெட்சூராக நடிக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.ரியாக்ஷன், வசன உச்சரிப்பு, நகைச்சுவை, டான்ஸ், பைட் என்று எல்லாமே இவருக்கு நன்றாக வருகிறது.
தமன்னா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.
படத்தில் காமெடியனாகச் செய்திருப்பது வடிவேலு...ச்சே சாரி விவேக். விவேக் எம்.ஆர் ராதா, சிவாஜி இவர்களையெல்லாம் மிமிக்ரி செய்து முடித்து விட்டு இப்போது வடிவேலுவைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் உட்பட அப்படியே டிட்டோ. ஒரே ஒரு சீனில் ஆபாசமாக காட்சியமைத்து தான் விவேக் தான் என்பதை ஞாபகப்படுத்தியுள்ளார்.இருந்தாலும் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
படத்தில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரம் தனுஷின் தந்தையாக வரும் பிரதாப் போத்தன்.மனிதர் தனுஷைப் பார்த்து டென்சன் ஆகி ஆகியே கலகலக்க வைக்கிறார்.
வில்லன்கள் அனைவரும் வந்து நம்மை வேறு வகையில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.
மயில்சாமி,கனேஷ்,ஆர்த்தி,சுவாமிநாதன் எல்லோரும் நகைச்சுவைக்கு உதவியிருக்கிறார்கள்.அதிலும் சில சீன்கள் லொல்லுசபா / சூப்பர் 10 பார்ப்பது போலவே உள்ளது.
சுராஜ் "ஆங்கில / மற்ற மொழிப்படங்களை எல்லாம் காப்பி அடித்து படம் எடுக்கத்தேவையில்லை,நம் தமிழ்ப்படங்களையே புத்திசாலித்தனமாக காப்பி அடித்தாலே போதும்" என்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளார். அதிலும் அதுல்குல்கர்னியை வைத்து ரன் பட கிளைமேக்சையும்,பொல்லாதவன் பினிஷிங்கையும்,புதுப்பேட்டை காட்சியையும் வைத்தே கிளைமேக்சை முடித்ததில் இருந்தே இவர் திறமையைக் கண்டுகொள்ளலாம்.
மற்றபடி படிக்காதவன் நம்மை சந்தோஷப்படுத்துவான்.