Saturday, May 30, 2009

ஏஞ்சல்ஸ் அண்ட் டீமென்ஸ்

ஆனந்த தாண்டவம், சர்வம், சிவபுரம் என்று வாராவாரம் ஏதோ கோவிலுக்கு நேர்ந்து விட்டாற் போல் பலிகடா ஆகிக்கொண்டே வந்ததற்கு சற்றே ஆறுதலாக அமைந்தது ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ்.

ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-(‍‍ அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.

இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான்.

வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும் (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும்
செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி
அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.

லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது
மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.

ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது.

வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.

தி டாவின்ஸி கோட் ‍ தொடர்ச்சி என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?
அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.

நம் நாட்டில் உள்ள‌ மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.