மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.
ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.
குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.
ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....
ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.
ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.
இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...
வாழ்க தமிழ்சினிமா..........