Saturday, April 11, 2009

ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை

ஏற்கனவே பிரியா, கரையெல்லாம்செண்பகப்பூ, விக்ரம் என்றெல்லாம் எடுத்து சுஜாதாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட தமிழ்சினிமா இன்று ஆனந்த தாண்டவம் எடுத்து நம்முடைய வயிற்றெரிச்சலையும் சேர்த்துக் கொட்டிக் கொண்டுள்ளது.

படத்தின் கதை தெரிய வேண்டுமானால் தயவு செய்து சிரமம் பார்க்காமல் "பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் படித்து விடுங்கள். ஏனெனில் படத்தைப் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ரஜினியாலேயே கணேஷ் கதாபாத்திரத்தை நடிக்க முடியாமல் பில்லா / ரங்கா ரேஞ்சிற்கு நடித்திருந்த‌ போது....பாவம் சித்தார்த் மட்டும் ரகு பாத்திரத்தை நடித்து விட முடியுமா என்ன? ஆனால் அவர் எதற்காக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு
நடித்தார் என்று நேற்று இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நடிப்பா ? அப்படின்னா என்னப்பா ? எதுனா ரேசன் கடைல கலைஞர் படம் போட்டுக் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார்.

மதுமிதாவாக தமன்னா. கரையெல்லால் செண்பகப்பூ படத்தில் பொன்னியாக வந்து சிரிப்ரியா வந்து எப்படி கொடுமைப் படுத்தினாரோ அதைவிட ஜாஸ்தியாக கொடுமைப் படுத்தியிருக்கிறார் தமன்னா.

ரத்னாவாக ருக்மணி. ரகுவின் காதலைக் காதலித்து ரகுவையே கைப்பிடிக்கும் பாத்திரம்.

சார்லி, கிட்டி, கிருஷ்னா என்று நிறைய பேர் இருந்தும் யாரும் நம்மைக் காப்பாற்றவில்லை.

சுஜாதா வசனம் மட்டும் எழுதிய படங்களிலேயே இதை விட சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். சுஜாதாவின் இக்கதையைத் தேர்வு செய்ததே சரியான சொதப்பல். நாவலின் எந்த பாத்திரத்தின் குணநலன்களும் நம்மை பாதிக்காத நிலையில் சுஜாதா தன் எழுத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பாதிப்படைய செய்யும் திறமை படைத்தவர். அதைக் காட்சிப்படுத்தும் போது வேறு எப்படி இருக்கும்? இபப்படித்தான் இருக்கும். அதிலும் மதுமிதாவின் குழந்தைத்தனத்தைக் காட்டுகிறேன் என்று சித்தார்த்தின் காதில் வந்து ஓ என்று கத்திய போதுநமக்கும் ஓ என்று அழ வேண்டும் என்பது போல் தோன்றியது.

ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இயக்குநர் காந்திகிருஷ்னா இப்படம் எடுத்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடம் நம்பிக்கை விதையைத் தூவியுள்ளார். (இப்படியெல்லாம் எடுக்கிறாங்க...இதைவிட நல்லா நாம எடுக்கமாட்டோமா? )

மற்றபடி சுஜாதாவின் கதையை எடுத்தவர்களையும், இனி எடுக்கப்போகிறவர்களயும், அதையும் விடாமல் பார்க்கப் போகும் நம்மையும்

"பசித்த புலி தின்னட்டும்"

Thursday, April 9, 2009

திருப்பூரும்..கம்யூனிசமும்... பின்னே நானும்

திருப்பூர்..... எனக்குச் செவிட்டில் அடித்து தொழில் சொல்லிக் கொடுத்த ஊர். அடி என்றால் சாதாரண அடி இல்லை. இனி இந்த திவ்ய தேசத்தின் பக்கமே வரக்கூடாது என்று மனதில் சொல்லிக்கொண்டு (அழுது கொண்டு) சேலம் நோக்கிப் பெட்டியைக் கட்டினேன்.

அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.

உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள்.
ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.
ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.

ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை.

அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து, "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது, உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.

திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....

"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"

" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"

" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"

ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.

கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான்.

"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......