ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.
படத்தின் ஹீரோவாக அடித்திருப்பவர்...சாரி நடித்திருப்பவர் சேது,அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கும் விக்ரம்.வில்லனாக நடித்திருப்பவர் பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன்.படத்தை இயக்கியிருப்பவர் ஆனந்தம்,ரன் இவற்றின் இயக்குனர் லிங்குசாமி.இப்படியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்கள்!!.
படத்தின் கதை...
சென்னையில் பணிபுரியும்(!) ஒரு நல்ல ரவுடி பிரகாஷ்ராஜ்.(காட்பாதர் மாதிரி, நாயகன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புறம் சரி வேண்டாம் விடுங்க)
இவர் போட்டுத்தள்ள நினைக்கும் ஆட்களை இவருக்கு முன் போட்டுத் தள்ளுகிறார் விக்ரம்.யாருடா நீ? என்று பிரகாஷ் கோபமாகக் கேட்க விக்ரம் உன்கிட்ட வேலைக்கு சேரணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.
வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே விக்ரமின் புஜபலபராக்கிரமத்தைப் பார்த்து "25 வருசங்களுக்கு முன்பு நான் என்னையே பார்த்த மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்படின்னு கேட்க... பிளாஷ்பேக்.
சிறுவனான விக்ரமிற்கு தப்புகளைத் தட்டிக்கேட்கும் பிரகாஷ்ராஜ் ஒரு ஹீரோவாகத் தெரிகிறார்.ஒரு கட்டத்தில் விக்ரமின் அப்பாவை அடித்தவர்களைப் பிரகாஷ் அடிக்க, விக்ரமும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிரகாஷ்ராஜ் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் வந்து சேர்கிறார்.
இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக அவர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காதலிக்கிறார்.
பிரகாஷ்ராஜின் எதிரி ரகுவரன்.அவரும் ஒரு ரவுடி தான்.(கெட்ட ரவுடி!!).பிரகாஷ்ராஜிற்கு விக்ரம் அவருடைய பழைய காதலியையே திருமணம் செய்து வைக்கிறார்.
ரகுவரன்,பிரகாஷ்ராஜ் கும்பல் அடிக்கடி மோதிக்கொள்கிறது.இரண்டு பக்கமும் ஆட்கள் இறக்கிறார்கள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.
சென்னைக்கு புது போலீஸ் கமிஷனராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ரவுடிகளையும் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.
விக்ரமிற்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரிசாவுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைவர...முடிவில் என்ன ஆனது என்பது தான் கிளைமாக்ஸ்.
விக்ரம் இந்தப்படம் முழுக்க யாரையாவது அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அதற்கே நேரம் போய்விடுவதால் நடிப்பதற்கு நேரமேயில்லை.
திரிசா மூன்றாவது சீனிலேயே விக்ரமை காதலித்து விட்டு அவ்வப்போது டூயட்டிற்கு மட்டும் வருகிறார்.
ரகுவரனின் வில்லத்தனத்தைப் பார்த்து தியேட்டரில் அனைவரும் சிரிக்கிறார்கள்.படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்து வைப்பது ரகுவரனின் வில்லத்தனம் தான்.
படத்தின் ஒரே ஆறுதல் பிரகாஷ்ராஜ் தான்.நன்றாக நடித்துள்ளார்.ஆனால் ஏற்கனவே பல முறை இதே போல் பார்த்துவிட்டதால் nothing special.
படத்தின் வசனங்கள் எஸ்.ராமகிருஷ்னணன்.பாபாவில் தொடங்கி இந்தப் படம் வரை தனக்கு சினிமா வசங்கள் எழுத வராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க துணையெழுத்து படிச்சிட்டு பல நேரங்கள்ள கண்ல இருந்து தண்ணி வந்திருக்கு)ப்ச்..
"முதன்முறை" என்ற பாடல் மட்டும் பரவாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வந்து குத்தாட்டம் போடுகிறார்.நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாடல் வரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாடல் வருகிறது ஒரே சலிப்பு...
கேமரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..
2007 ல் ரவுடிகள் படமாக வந்து கொண்டிருந்ததே...அப்போதே வந்திருக்க வேண்டிய படம்.தமிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட இந்நிலையில் too late...
முடிவில் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நம்மையும் சேர்த்து...
பரிந்துரை:
இதற்கு மேல் உங்கள் இஷ்டம்!!!!
பின்குறிப்பு:
படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
என்ன கொடுமை சார் இது??