Friday, December 7, 2012

துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்...


துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மை சமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.

இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விடயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.

பெண்கள் குடிப்பது குறித்தான‌ முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

2 ல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஒருவ‌ர் அழ‌கில்லாத‌வ‌ர்(அவ‌ர்க‌ள் பார்வையில்)என்றாலும் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌லாம் என்ற‌ தோழியின் அறிவுரையை ஏற்று, அழ‌கும் ச‌ம்பாதிக்கும் திற‌மையும் உள்ள‌ விஜையை விட்டு விட‌க் கூடாது என்று ஆட்டோ பிடித்து வ‌ருகிறார் கதாநாயகி. இதை விட‌ இழிவான‌ காத‌ல் காட்சியை ச‌மீப‌த்தில் எந்த‌ திரைப்ப‌ட‌த்திலும் பார்த்த‌தில்லை.

ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்க‌ளை ம‌ட்டும் அழ‌கிக‌ளாக‌ மாற்றி, ஆண்க‌ளைக் காப்பாற்றும் ச‌மூக‌ம் ந‌ம் ச‌மூக‌ம். இந்த‌ ப‌ட‌த்தில் இன்னும் ஒரு ப‌டி மேலே போய் "மேட்டர்" என்ற‌ வார்த்தையை வெகுஜ‌ன‌ப் ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். மேலை நாடுக‌ளில் பிராஸ்ட்டிடியூட் என்ற‌ வார்த்தையை ஆங்கில‌த்தில் இருந்து எடுத்து விட்ட‌ இந்த‌ சூழ‌லில் தாம் மேட்ட‌ர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.

ப‌ட‌த்தில் வில்ல‌னின் அண்ண‌ன் சுட‌ப்ப‌ட்டு இற‌ந்து போக‌, அதை டிவியில் பார்த்துக் கூச்ச‌லிடும் குழ‌ந்தையை அந்த‌ வீட்டு பெண் எந்த‌ ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இத‌ற்கு மேலும் இந்த‌ காட்சியில் விவ‌ரிக்க‌ ஒன்றுமில்லை.

"ப‌ட‌த்தின் வெற்றி ம‌ட்டும் தான் முக்கிய‌ம்..அத‌ற்காக‌ நாங்க‌ள் எதையும் செய்வோம், எப்ப‌டி வேண்டுமானாலும்‌ காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இய‌க்குந‌ர்க‌ளுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் ந‌ம் போன்ற‌ ர‌சிக‌ர்க‌ளும் ம‌லிந்து விட்ட‌ சூழ‌லில் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ அத்துனை விட‌ய‌ங்க‌ளும் வீண் தானோ என்று தோன்றுவ‌தையும் ம‌றுப்ப‌திற்கில்லை.

Friday, January 27, 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி - பகுதி 1



புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்திருக்கிறது.ஒரு முறை பாலகுமாரனின் தீவிர வாசகனாக இருந்த போது, புத்தகக் கண்காட்சி முழுமையும் அவர் பின்னே அவர் அறியாமல் சுற்றியிருக்கிறேன். தளபதி படத்தில் ரஜினி ஸ்ரீவித்யா பின்னால் சுற்றுவாரே அதைப் போல...

பிறிதொரு முறை கி.ரா அய்யா என் சொந்த ஊர் கடலையூர் என்று சொன்னவுடன் அருகில் அமர வைத்து வாஞ்சையோடு இரண்டு நிமிடங்கள் கதைத்தார்.அவருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் இடைசெவல். ஒரு விநாடியில் ஓரூர்க்காரர்கள் ஆனோம். என் வாழ்வில் உள்ள மறக்க முடியாத நினைவுகள் பட்டியலில் எப்போதும் இவையிருக்கும்.

இம்முறை முற்றிலும் புதிய அனுபவம்.

திருப்பூரில் பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து 9 வது புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். சுமார் 100 கடைகளில் புத்தகங்களும், “கானுயிர் காப்போம்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும், மாலை நேர சிறப்பு நிகழ்வுகளும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி குழுவினரின் உழைப்பையும், ஆர்வத்தையும் பறைசாற்றுகின்
றன.

கண்காட்சியில் சுமார் 30 நேரடிப் பதிப்பகங்களும், சுமார் 50 புத்தக விற்பனையாளர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். உயிர்மை, கிழக்கு, விகடன், சுரா, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளார்கள். இருந்தாலும் காலச்சுவடு, காவ்யா போன்ற பதிப்பகங்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் கேட்க முடிந்தது.

அடுத்த முறை படக்கதைக்கு என்று பிரத்யேக ஸ்டால்கள் போடவிருப்பதாக சொன்னார்கள். சுட்டி, சித்திரம், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க் என்று அடுத்தவர்களின் கற்ப்னையை பார்வையிடும் வேலைகளை மட்டுமே செய்து வரும் நம் குழந்தைகளை மீட்டு அவர்களை சுயமாகக் கற்பனை செய்யத்தூண்டும் திறனும், வாசிப்பின் ருசியை அவர்களுக்கு உணரச் செய்யும் திறனும் காமிக்ஸ்களுக்கு மட்டுமே உண்டு.

நாம் வாழும் வாழ்க்கையை பிழைப்பிற்காக வாழும் தொழில்வாழ்க்கை (Professional), நமக்காக வாழும் சுயவாழ்க்கை(Personal), சமூகத்திற்காக வாழும் சமூக வாழ்க்கை (Social) என்று மூன்றாகப் பிரித்துக் கொண்டோமேயானால் மூன்றையும் மேம்படுத்த உதவுவது புத்தகங்கள் மட்டுமே.

திருப்பூர் போன்ற தொழில் நெருக்கடி மிகுந்த நகரகங்களிலும் புத்தகங்களைத் தேடி குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் விற்பனை ஆகும் பெரும்பான்மைப் புத்தகங்கள் சமையல் குறிப்பு, சுயமுன்னேற்றப் புத்தகங்கள் தான் என்று கேள்விப் படும் போது சற்று வருத்தமாகவும் உள்ளது. இதையும் தாண்டி நம் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கும் புத்தகங்கள் நிறைய உள்ளன என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.


இது தவிர திருப்பூர் இணையக் குழுமமான ”சேர்தளம்” வரவேற்புக் குழுவுடன் இணைந்து அன்றாட நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறது. பார்வையாளர்களாக இருந்த எங்களைப் பங்கேற்பாளர்களாகவும் மாற்றியிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி.

ஒவ்வொரு நாளும் மாலையில் நண்பர்கள் கூடுவதும், கண்காட்சியை சுற்றி வருவதும்,திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 என்ற வலைப்பதிவுக்காக வாசகர்களையும், பதிப்பாளர்களையும் பேட்டி எடுப்பதுமாக இனிமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.

புத்தகங்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை என்பது மட்டுமில்லாமல் நல்ல நண்பர்கள் புத்தகங்களுக்கு ஒப்பானவர்கள் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012.