Friday, December 7, 2012

துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்...


துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மை சமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.

இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விடயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.

பெண்கள் குடிப்பது குறித்தான‌ முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

2 ல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஒருவ‌ர் அழ‌கில்லாத‌வ‌ர்(அவ‌ர்க‌ள் பார்வையில்)என்றாலும் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌லாம் என்ற‌ தோழியின் அறிவுரையை ஏற்று, அழ‌கும் ச‌ம்பாதிக்கும் திற‌மையும் உள்ள‌ விஜையை விட்டு விட‌க் கூடாது என்று ஆட்டோ பிடித்து வ‌ருகிறார் கதாநாயகி. இதை விட‌ இழிவான‌ காத‌ல் காட்சியை ச‌மீப‌த்தில் எந்த‌ திரைப்ப‌ட‌த்திலும் பார்த்த‌தில்லை.

ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்க‌ளை ம‌ட்டும் அழ‌கிக‌ளாக‌ மாற்றி, ஆண்க‌ளைக் காப்பாற்றும் ச‌மூக‌ம் ந‌ம் ச‌மூக‌ம். இந்த‌ ப‌ட‌த்தில் இன்னும் ஒரு ப‌டி மேலே போய் "மேட்டர்" என்ற‌ வார்த்தையை வெகுஜ‌ன‌ப் ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். மேலை நாடுக‌ளில் பிராஸ்ட்டிடியூட் என்ற‌ வார்த்தையை ஆங்கில‌த்தில் இருந்து எடுத்து விட்ட‌ இந்த‌ சூழ‌லில் தாம் மேட்ட‌ர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.

ப‌ட‌த்தில் வில்ல‌னின் அண்ண‌ன் சுட‌ப்ப‌ட்டு இற‌ந்து போக‌, அதை டிவியில் பார்த்துக் கூச்ச‌லிடும் குழ‌ந்தையை அந்த‌ வீட்டு பெண் எந்த‌ ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இத‌ற்கு மேலும் இந்த‌ காட்சியில் விவ‌ரிக்க‌ ஒன்றுமில்லை.

"ப‌ட‌த்தின் வெற்றி ம‌ட்டும் தான் முக்கிய‌ம்..அத‌ற்காக‌ நாங்க‌ள் எதையும் செய்வோம், எப்ப‌டி வேண்டுமானாலும்‌ காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இய‌க்குந‌ர்க‌ளுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் ந‌ம் போன்ற‌ ர‌சிக‌ர்க‌ளும் ம‌லிந்து விட்ட‌ சூழ‌லில் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ அத்துனை விட‌ய‌ங்க‌ளும் வீண் தானோ என்று தோன்றுவ‌தையும் ம‌றுப்ப‌திற்கில்லை.

Friday, January 27, 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி - பகுதி 1



புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்திருக்கிறது.ஒரு முறை பாலகுமாரனின் தீவிர வாசகனாக இருந்த போது, புத்தகக் கண்காட்சி முழுமையும் அவர் பின்னே அவர் அறியாமல் சுற்றியிருக்கிறேன். தளபதி படத்தில் ரஜினி ஸ்ரீவித்யா பின்னால் சுற்றுவாரே அதைப் போல...

பிறிதொரு முறை கி.ரா அய்யா என் சொந்த ஊர் கடலையூர் என்று சொன்னவுடன் அருகில் அமர வைத்து வாஞ்சையோடு இரண்டு நிமிடங்கள் கதைத்தார்.அவருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் இடைசெவல். ஒரு விநாடியில் ஓரூர்க்காரர்கள் ஆனோம். என் வாழ்வில் உள்ள மறக்க முடியாத நினைவுகள் பட்டியலில் எப்போதும் இவையிருக்கும்.

இம்முறை முற்றிலும் புதிய அனுபவம்.

திருப்பூரில் பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து 9 வது புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். சுமார் 100 கடைகளில் புத்தகங்களும், “கானுயிர் காப்போம்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும், மாலை நேர சிறப்பு நிகழ்வுகளும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி குழுவினரின் உழைப்பையும், ஆர்வத்தையும் பறைசாற்றுகின்
றன.

கண்காட்சியில் சுமார் 30 நேரடிப் பதிப்பகங்களும், சுமார் 50 புத்தக விற்பனையாளர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். உயிர்மை, கிழக்கு, விகடன், சுரா, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளார்கள். இருந்தாலும் காலச்சுவடு, காவ்யா போன்ற பதிப்பகங்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் கேட்க முடிந்தது.

அடுத்த முறை படக்கதைக்கு என்று பிரத்யேக ஸ்டால்கள் போடவிருப்பதாக சொன்னார்கள். சுட்டி, சித்திரம், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க் என்று அடுத்தவர்களின் கற்ப்னையை பார்வையிடும் வேலைகளை மட்டுமே செய்து வரும் நம் குழந்தைகளை மீட்டு அவர்களை சுயமாகக் கற்பனை செய்யத்தூண்டும் திறனும், வாசிப்பின் ருசியை அவர்களுக்கு உணரச் செய்யும் திறனும் காமிக்ஸ்களுக்கு மட்டுமே உண்டு.

நாம் வாழும் வாழ்க்கையை பிழைப்பிற்காக வாழும் தொழில்வாழ்க்கை (Professional), நமக்காக வாழும் சுயவாழ்க்கை(Personal), சமூகத்திற்காக வாழும் சமூக வாழ்க்கை (Social) என்று மூன்றாகப் பிரித்துக் கொண்டோமேயானால் மூன்றையும் மேம்படுத்த உதவுவது புத்தகங்கள் மட்டுமே.

திருப்பூர் போன்ற தொழில் நெருக்கடி மிகுந்த நகரகங்களிலும் புத்தகங்களைத் தேடி குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் விற்பனை ஆகும் பெரும்பான்மைப் புத்தகங்கள் சமையல் குறிப்பு, சுயமுன்னேற்றப் புத்தகங்கள் தான் என்று கேள்விப் படும் போது சற்று வருத்தமாகவும் உள்ளது. இதையும் தாண்டி நம் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கும் புத்தகங்கள் நிறைய உள்ளன என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.


இது தவிர திருப்பூர் இணையக் குழுமமான ”சேர்தளம்” வரவேற்புக் குழுவுடன் இணைந்து அன்றாட நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறது. பார்வையாளர்களாக இருந்த எங்களைப் பங்கேற்பாளர்களாகவும் மாற்றியிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி.

ஒவ்வொரு நாளும் மாலையில் நண்பர்கள் கூடுவதும், கண்காட்சியை சுற்றி வருவதும்,திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 என்ற வலைப்பதிவுக்காக வாசகர்களையும், பதிப்பாளர்களையும் பேட்டி எடுப்பதுமாக இனிமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.

புத்தகங்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை என்பது மட்டுமில்லாமல் நல்ல நண்பர்கள் புத்தகங்களுக்கு ஒப்பானவர்கள் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012.

Friday, December 16, 2011

Why this Kolaveri di ? - நமக்கு சொல்வது என்ன ???



Kolaveri Di...ஒரு அறிமுகம் :

இன்றைய தேதியில் கொலவெறி பாடலை யூத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வது என்பது அவர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வெளிவரப்போகும் 3 படத்தில் தனுஷ் கொலைவெறியோடு பாடிய பாடல் இன்று சமூக வளைத்தளங்களின் உதவியாலும் ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் தன்மையாலும் அநியாயத்திற்கு ஹிட்டடித்து உள்ளது.

இதே அளவிற்கு முல்லைப்பெரியார் பற்றியும், கூடங்குளம் பற்றியும் அதே யூத் தமிழர்களுக்கு தெரியுமா என்று கேட்டால் நம்மை கிழட்டு தமிழர்கள் பட்டியலில் சேர்த்து விடும் வாய்ப்பு உள்ளதால் எஸ்கேப்...

கொலைவெறி ஏன் நமக்கு பிடித்தது????

திரைப்படங்களை ஓட வைக்க உதவும் முக்கிய விதிகளில் ஒன்று “ரசிகர்கள் தங்களை கதாநாயகர்களாக உருவகம் செய்து கொள்ளுமாறு கதை அமைப்பது”, தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இருந்தே இதே விதியைக் கடைபிடித்துத் தான் வெற்றியடந்து வருகிறார். தன்னைப் போலவே உள்ள ஒரு கதாநாயகன் திரையில் தான் செய்வதையே அல்லது செய்ய விரும்புவதை செய்வது கண்டு ரசிகர்கள் கிளர்ச்சியடைவது தான் இவ்வகைப்படங்களின் வெற்றி.

காப்பாற்றப்படும் ஆணாதிக்க சிந்தனை :

”நான் ஒரு பெண்ணைக் காதலிப்பேன். அவளுடனான காதல் தோல்வியில் முடிந்தால் சரக்கடித்து விட்டு அவளைத் திட்டுவேன்” என்பது தான் பாடலின் ஒன்லைன். இதே இப்பாடலில் ஒரு பெண் காதலில் தோற்று அவளும் சரக்கடித்து விட்டு ஒரு ஆணைத் திட்டியிருந்தால் இப்பாடல் இதே அளவு வெற்றியடைந்திருக்குமா???

மறுபடியும் படத்தில் ரேவதி நிழல்கள் ரவி மீதான கோபத்தில் மது அருந்துவதை அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் தாம் நாம். <இக்காட்சி வேறு வகையில் தவறு என்றாலும்>

டாஸ்மாக் வாழ்க :

மது இன்று பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் எப்படி இரண்டு முரண் பட்ட விடயங்களுக்கு வடிகாலாக இருக்கிறது என்பது புரியவில்லை. ஏற்கனவே மது விற்பனை 20000 கோடியைத் தொடப்போகும் தமிழ்நாட்டில் தற்போது வரும் படங்களில் மதுவும் ஒரு கதாபாத்திரமாகவே கிட்டத்தட்ட அத்துனை திரைப்படங்களிலும் உலா வருகிறது. தான் செய்யும் தவறுகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது மனம் அதைக் கொண்டாடவே செய்யும்.

அரைகுறை ஆங்கிலம் :

ஆங்கிலத்தில் பேசுவது தான் உயர்வு என்று அனைவருமே நம்ப ஆரம்பித்து விட்ட காலம் இது. முறையான மொழிப் பழக்கம் இல்லாவிட்டால் ஒரு மொழியில் புலமை பெற முடியாது என்பது ஆதார விதி. நமக்கு முறையான மொழிப்பழக்கம் இல்லாத காரணத்தால் தான் ஆங்கிலத்தைப் பேசவும் முடியாமல், விடவும் முடியாமல் தடுமாற்றத்தோடே வாழ்ந்து வருகிறோம். இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அந்த தடுமாற்றத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் கொலவெறி....

நாட்டுப்புற இசையின் நீர்த்த வடிவம் :

காலங்காலமாக நம்மை மகிழ்வித்து வந்த நாட்டுப்புற இசையை அழித்து விட்டு...அதே இசையை மேற்கத்திய கருவிகளில் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம்.

பன்னாட்டு நிறுவனத்தின் பணம் :

பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூஸிக்கின் ஒரு கோடி ரூபாய் முதலீடு இந்தப் பாடலின் வெற்றிக்கு பின் உள்ளது. < இத் தகவல் த.மு.எ.க.ச மேடையில் கேட்டது>. இதை விட திறமையான கலைகள், கலைஞர்கள் வெளிவராமலே மடிந்து விடும் கொடுமையை ராஜீமுருகனின் விகடன் தொடரில் படித்திருப்பீர்கள். எனவே பணம் இருந்தால் குடித்து விட்டு உளருவதைக் கூட வெற்றியடைய வைக்க முடியும் என்பது தான் இப்பாடல் நமக்கு சொல்லும் செய்தி....

கொலவெறி யின் வெற்றியின் வெற்றிக்குப் பின்னால் நம் சமூகத்தின் தோல்விதான் கண்ணுக்குத் தெரிகிறது.

போராளி திரைப்படமும்...சாதீயக் குறியீடுகளும்



அன்புள்ள சமுத்திரகனிக்கு,

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநராக ஆனீர்கள். படம் தோல்வி...பின்பு சசிக்குமாருடன் இணைந்து சுப்ரமணியபுரம் படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வந்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தீர்கள்.

அதன் பின்பு நீங்கள் இயக்கிய நாடோடிகள் அதிரி..புதிரி வெற்றி. சசியின் ஈசன் படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்தீர்கள். இன்று போராளி ஒரு நல்ல வெற்றி படம்...இது தான் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்த வரலாறு.

எளிமையான கதை, அதற்கேற்ற அழகான திரைக்கதை, பக்க பலமாக நகைச்சுவை, சசி-கதிர்-தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி, இயல்பான நடிகர்கள் இவை தான் உங்கள் படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைய காரணங்கள் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். போராளி திரைப்படத்தில் மனநிலை குன்றியவர்களின் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.

எல்லாவற்றையும் விட காதல் - நட்பு கலவை உங்களுக்கு மிக அழகாக வருகிறது. ரசிகர்களைத் திருப்தி படுத்தும் வசனங்கள் ஆகப் பெரிய எழுத்தாளர்களுக்குக் கூட கை வராத கலை. ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களுக்குக் கைதட்டல் வாங்குவது என்பது சாதாரண விடயம் கிடையாது.

இது வரை நலம்....

இவ்வளவு இருந்தும் ஏன் சாதியத்தைத் தூக்கிக் கொண்டே அலைகிறீர்கள் என்பது தான் புரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம் பெரும் முத்துராமலிங்கம் குறித்தான வசனங்கள்....இதை விட அதிகம் ஆபத்தானது போராளி படத்தில் அண்ணாச்சியின் சாதியைக் குறிக்க காமராஜர் படத்தையும், கிடை போடுவோர் சாதியைக் குறிக்க அம்பேத்கர் படத்தையும் காட்டியது. ஒரு வேளை தெரியாமல் தான் பிரேமில் கொண்டு வந்து விட்டீர்களோ என்று எண்ணினால் .... “உன் பின்னாடி ஒரு சாதின்னா..என் பின்னாடி ஒரு சாதி” என்று அண்ணாச்சி பேசுவதாக ஒரு வசனம், கிடை போடும் பெரியவர் சசியின் பெரியப்பா குறித்து வியந்து பேசும் வசனங்கள் என மிகத் தெளிவாகத் தான் திணித்துள்ளீர்கள்.

காமராசரை நாடாராகவும், வ.உ.சி யை பிள்ளைமாராகவும், அண்ணாவை செங்குந்தராகவும், அவ்வளவு என் தியாகராஜ பாகவதரை விஸ்வகர்மாவாகவும் தூக்கிக் கொண்டு அலையும் சமூகம் இது.

உங்களைப் போன்ற திரை மொழி மிகச் சிறப்பாக கைவரும் இயக்குநர்கள் மக்களை அதில் இருந்து வெளியே இழுக்கா விட்டாலும் பரவாயில்லை..மீண்டும் உள்ளேயே தள்ளாமலாவது இருங்கள்.

சசிக்குமார் இலங்கைக்கு இந்த படத்தை வியாபாரம் செய்ய மாட்டோம் என்று சொன்ன போது ஏற்பட்ட மதிப்பு..இது போன்ற காரணங்களால் ஒரு மாற்று குறைகிறது என்பதே உண்மை.

அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ இன்றைய தமிழ் சமூகத்தில் சமத்துவம் நிலவும் இடங்களில் ஒன்றாக திரையரங்கங்கள் உள்ளன. உங்கள் மேலான திறமையால் அதன் கதையையும் முடித்து விடாதீர்கள்.

தேவர் மகன் போல அவ்வளவு விசம் இல்லாவிட்டாலும்..போராளி போன்ற ஒரு நல்ல படத்தில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம் விசம்தானே....

Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை



முதலிலேயே சொல்லி விடுகிறேன்.”அழகர்சாமியின் குதிரை” கதையை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான முயற்சி.இந்த அழகான முயற்சியை விமர்சித்து நார் நாராகக் கிழிப்பது எனது நோக்கமல்ல.படம் குறித்த எனது புரிதல்களின் பகிர்தல்களே இந்தப் பதிவு.

வெண்ணிலா கபடிக்குழு போலவே திருவிழாவோடு துவங்குகிறது படம்.தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தெய்வமாகிய அழகர்சாமியின் திருவிழாவை நடத்த முடியாமல் தவிக்கிறது ஊர்.”எப்படியாவது திருவிழாவை நடத்தி விடுங்கள்...அப்போது தான் ஊரில் மழை பெய்யும்” என்று ஊர் கோடாங்கி சாமி வந்து (வராமல்)சொல்லிவிட, ஊரும் பகீரத முயற்சி எடுக்கும் வேளையில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புக்குட்டியின் குதிரை ஊருக்கு வந்து சேர்கிறது. அதன் பின் திருவிழா நடந்ததா???அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்ததா???மழை வந்ததா??? என்பதே இரண்டாம் பகுதி.

படத்தின் முதல் பகுதி முழுதும் இழையோடும் இயல்பான நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவே இரண்டாம் பகுதியில் அந்த நகைச்சுவை இல்லாத போது ஜீரணிக்கவே முடியவில்லை.

”படத்தின் காலகட்டத்தை 1982 என அமைத்தது”, ”பல இடங்களில் மூட நம்பிக்கையை சாடியுள்ளது”,கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் நம் மனதில் பதிய வைத்தது” என சுசீந்திரன் படத்தில் பல விடயங்களை அநாயசமாக செய்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் குறிப்பிடத்தகுந்தவர்களே.

பாஸ்கர்சக்தியின் இயல்பான கதை, வசனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

தேனி ஈஸ்வர் தேனியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குதிரைக்குட்டி பாடலில் இளையராஜாவின் குரல் அட்டகாசம். ஆனால் மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் வழக்கம் போலவே ஏமாற்றிவிட்டார்.”வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ”லேசா பறக்குது மனசு” என்ற பாடலுக்கு ஈடாக படத்தில் ஒரு பாடலும் இல்லை. இத்தனைக்கும் படத்தில் ஒரு தனி லவ் ட்ராக்கும் இருக்கிறது.

இடைவேளை வரை மேலே மேலே போகும் படம், இடைவேளைக்குப் பிறகு கீழே, கீழே இறங்குகிறது.

அப்புக்குட்டியின் பெண் பார்க்கும் படலம் + காதல், குதிரை போய் கெட்டவர்களையெல்லாம் அழிப்பது என இரண்டாம் பாதியில் நாடகமாக்கமாகி விட்டது.

படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, நாடகமாக்கலையும் தவிர்த்திருந்தால் தமிழ்சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றாக இருந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை.

Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக....


அறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமர்ந்து வினவு போன்ற சமூக தளங்களைப் படித்து விட்டு,அநியாயங்களுக்கு எதிராக பின்னூட்டங்கள் போடக் கூட பயந்து, முன் எச்சரிக்கையாக யாரோ எடுத்த திரைப்படங்களில் மொக்கையாகக் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் என் போன்ற ஆட்கள் மத்தியில் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் புரிகிறார் என்றால், உமாசங்கர் தான் உண்மையான கதாநாயகன்.

உமாசங்கரை அசால்ட்டாகத் தூக்கி எறியலாம் என்று நினைத்த அரசாங்கம் கூட, அவருடைய நெஞ்சுரத்தையும், அவருக்கு இருக்கும் ஆதரவையும் பார்த்து விட்டு “நாங்கள் ஒன்றும் பெரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. வெறும் தற்காலிகப் பணிநீக்கம் தான்” என்று இறங்கி வந்து அறிக்கை விட்டிருப்பதே அவருக்குக் கிடைத்த வெற்றி தான்.

தமிழகம் ஓரளவிற்கு முன்னேறியிருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று என்னைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றமும் தான்.அப்போது தான் இந்த அரசாங்கம் செய்த தவறுகளை அடுத்த அரசாங்கம் செய்ய ஓரளவிற்காவது பயப்படும்.

எண்ணற்ற இலவசத் திட்டங்களை அளித்திருந்தாலும் மின்வெட்டு, தொழிற்சுணக்கம், விலைவாசியேற்றம் என்று மக்களை எதிர்க்கட்சியை நோக்கித்தான் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு .கோவை, திருச்சி என எதிர்க்கட்சிக்குக் கூடும் கூட்ட்மே இதற்கு சாட்சி.

இன்னும் உமாசங்கர் போன்ற நேர்மையான, நெஞ்சுரமிக்க அதிகாரிகளைக் காவு வாங்கி எதிர்க்கட்சியை நோக்கி மக்களை வேகமாகத் தள்ளிவிடும் போக்கைக் கைவிட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

செல்வம்

Monday, July 26, 2010

கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு

”வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை”

எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.

திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய ”சேர்தளம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.

இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :

1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)

2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.

3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.

4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.

5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.

6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.

உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :

வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே), சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).

”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.

Saturday, July 17, 2010

எந்திரன் - நாங்க ரெடி?நீங்க ரெடியா?

முதலில் ஒரு கொசுவத்தி....

விளம்பரங்கள் :

2007 சூன் மாதம் ”சிவாஜி” திரைக்கு வந்தது. அதற்கு முன்பே அந்தத் திரைப்படத்திற்குத்தான் எத்துணை வழிகளில் விளம்பரங்கள்.
படத்தின் முன்னோட்டம் CNN-IBN இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அத்துணை வட இந்திய மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சிகளும் சிவாஜியைப் பற்றியே பேசின.சன் மட்டும் அடக்கி வாசித்ததாக ஞாபகம்.
பிரிண்ட் மீடியாவும் நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா? என்று சிவாஜியை மக்களிடம் கொண்டு சேர்த்தன.ஆனந்தவிகடன் சிவாஜிக்கென்றே வாராவாரம் தனிப் பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தது.
வலையுலகில் கூட “சிவாஜி” படத்தைப் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதாவிட்டால் எங்கே கூகுள் நம் பிளாக்கரைத் தடை செய்து விடுமோ என்ற பயம் நிலவியது போல் தெரிந்தது.
ஆக மக்கள் மனதில் சிவாஜியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது.

விலை :

எங்கே சிவாஜி படத்தைப் பார்க்கவில்லை என்றால் நம்மையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்று பயந்து, முன்பதிவு ஆரம்பித்த நாளில் வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5.00 மணிஅளவில் பல் கூட விலக்காமல் சுமார் 30 வது ஆளாக வரிசையில் நின்றேன். கஷ்டப்பட்டு டிக்கெட்டை வாங்கலாம் என்று பார்த்தால் அடுத்த செவ்வாய் கிழமைக்குத்தான் டிக்கெட் உள்ளது என்றார்கள். நானும் சரி “நமக்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ?” என்று நினைத்து செவ்வாய்க்கிழமை டிக்கெட்டை வாங்கினேன்.
ஆனால் அன்று மாலை நண்பர்களிடமிருந்து போன்,”அதே திரையரங்கில் ரிலீஸ் அன்றே இரவுக்காட்சி டிக்கெட் 300.00 ரூபாய். வாங்கியாச்சு. வந்துரு” என்று.

இதில் சில நண்பர்கள் பெருமையாக ”நாங்கள் 1000.00 ரூபாய் கொடுத்து சிவாஜி டிக்கெட் வாங்கினோம்,எங்களுக்கு எதாவது அவார்டு தருவார்களா?” என்ற தொனியில் கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.

நாம் அனைவரும் 300.00 / 500.00 / 1000.00 என்று டிக்கெட் வாங்கி ரஜினிகாந்த் கருப்புப் பணத்தை ஒழிப்பதைப் பார்த்ததைக் ”கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டில்” சேர்த்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

கொசுவத்தி முடிந்தது..

இனி...

எந்திரன் பாடல்கள் ஜீலை 31 ரிலீஸ். படம் ஆகஸ்டு 3 வது வாரம் ரிலீஸ். படத்தினை மார்க்கெட் செய்யப் போவது சன் டி.வி.3000 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இப்பவே எந்திரன் காய்ச்சல் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது.பேசாமல் எந்திரன் கேப்சனை பின்வருமாறு போடலாம் -

”கொள்ளையடிக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?”

மினி கொள்ளை:

டாக்டர் விஜய் அவர்களின் வேலாயுதம் படத்துவக்க விழா டி-சர்ட் விலை 999.00 ரூபாயாம். திருப்பூரில் நல்லா செஞ்சாலே ஒரு டி-சர்ட்டின் தயாரிப்பு செலவு 200.00க்கு மேலே போகாது. ஒரு வேளை தங்கத்துல செஞ்சாங்களோ என்னவோ?

இதையெல்லாம் மீடியாவும் பெரிதுபடுத்தாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சினிமாவிலேயே நீடித்தால் நா.கதிர்வேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும், அரசியலுக்கு வரலாமா என்று யோசித்தால் ப.திருமாவேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும் போட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.

குறிப்பு:

தொடர்ந்து ஆனந்த விகடனையே குற்றம் சொல்லக் காரணம், அது நமக்குப் பிடித்தாற்போல் மாறாதா? என்ற ஆசையினால் தான்.

Monday, June 21, 2010

ராவணன் - படத்தின் அரசியல்

மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ராவணன் திரைப்படத்தின் இசை,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,கலை, படமாக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவைகள் பற்றியும், கதை....(மல்லிச்சூ...அப்படி ஒன்றே விளம்பரத்தில் காணப்பட வில்லை)திரைக்கதை, வசனம் போன்றவைகள் பற்றியும் நிறைய வந்துவிட்டதால் அதன் அரசியல் குறித்து மட்டும் இங்கு பார்ப்போம்.

மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.

ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.

குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.

ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....

ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.

ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.

இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...

வாழ்க தமிழ்சினிமா..........

Monday, June 14, 2010

செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் சூன் 23 தொடங்கி சூன் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதில் கணிணித் தமிழ் சார்பில் அமைக்கப்படும் அரங்கில் கலந்து கொள்ளலாம் என்று என் பெயரினைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கச் சொல்லி சில நண்பர்கள் மின்னஞ்சல்களிலும், வலைப்பதிவுகளிலும் கோரிக்கை விடுத்து விவாதம் செய்து வருகின்றனர்.

வலையுலகம் சார்பில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையிலிருந்து எழுதுகிறேன்.

தமிழ் வலையுலகம் ஆரம்பிக்கப்பட்டு 6 முதல் 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் இது பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ”பிரபல”
என்ற வார்த்தை குறித்த சர்ச்சை வெளியான போது மூத்த வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது. “இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.

ஆம்...அது உண்மைதான் என்பது “பிரபல” பதிவுகளுக்கு வரும் ஹிட்சுகளை வைத்துச் சொல்லிவிடலாம்.

இன்றைய தமிழ் ஊடகங்களின் நிலையையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகச் சிறந்தது என்று சொல்லப்படும் ஊடகம் கூட தமிழகத்தின் செல்லக்குரல் அல்கா அஜித்தா? இல்லை ரோஷனா? என்று மக்களைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டுவரும் இச்சூழலில் மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகம் இந்த வலையுலகம்.

அடுத்த பத்தாண்டுகளில் இணையம் இன்னும் பரவலாக்கப்பட்டு வீடு தோறும் இருக்கப் போகும் சூழ்நிலையில், மக்களுக்கு இப்போதே வலையுலகம் குறித்த அறிமுகம் அவசியம்.

தி.மு.க அரசு நடத்தப் போகும் இந்த மாநாடு போன்றதொரு மாநாட்டை வேறெந்த வகையிலும் நாம் (பதிவர்கள்) நடத்தி விட முடியாது.

நம் கொள்கைகளோ / இயக்கமோ / கட்சியோ / நிறுவனமோ வளர வேண்டுமென்றால் பொதுஜனத்தொடர்பு மிகவும் அவசியம். இம்மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் அத்தகைய மிகப்பெரிய பொதுஜனத் தொடர்பைப் புறக்கணிக்கிறோம். மாநாட்டிற்கு வரப்போகும் ஆட்சியாளர்கள் முதல் அடி மட்டத் தொண்டன் வரை நம் வலையுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்.

மாநாட்டில் பங்கு பெறுவோம். வலையுலகில் நிறைந்து கிடக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, ஈழ, மாவோயிஸ, திராவிட, ஆன்மிக, பெண்ணிய, விமர்சன, இலக்கிய, மோதலிய, சர்ச்சைகளிய எழுத்துக்கள் அனைத்தையும் பொதுஜனத்திடமும் கொண்டு போய் சேர்ப்போம்.

Tuesday, March 16, 2010

நித்யா(னந்தா) அவார்ட்ஸ்...

இது வரை அருளாசிகள் வழங்கியது போதும்...இனி அவார்டுகள் வழங்கலாம் என்று நித்யானந்தா முடிவு செய்து குப்புறப் படுத்து யோசித்துக் கொண்டிருந்ததையும் நம் பத்திரிக்கைகள் சுட்டு விட்டன. அவையிவை.( அவார்ட் கொடுத்தாலே சுஜாதான்னு நினைப்பு...)

உலகத்திலேயே சிறந்த நடிகை:

ரஞ்சிதா (நான் சேவை தானே செஞ்சேன் என்று அப்பாவியாய்க் கேட்டதால்)

உலகத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் :

லெனின் (துல்லியமாகப் படம் பிடித்ததால்.)

உலகத்திலேயே சிறந்த பிண்ணனி இசை:

நக்கீரன் இணைய வீடியோ( நாக்டுதனா.....)

உலகத்திலேயே சிறந்த பல்டி பத்திரிக்கை:

குமுதம் (அப்போ : கதவைத் திற காற்று வரட்டும், இப்போ : சரசம்..சல்லாபம்...சாமியார்)

உலகத்திலேயே சிறந்த P.R.O

சாரு நிவேதிதா (வசனம் தேவையில்லை)

உலகத்திலேயே சிறந்த கார்ட்டூன்:

வினவு கார்ட்டூன்

உலகத்திலேயே சிறந்த துணிதுவைப்பவர்கள்:

பிளாக்கர்கள் (தொடர்ந்து கும்முவதால்)

உலகத்திலேயே சிறந்த சமாளிப்பு :

நான் அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன்.

உலகத்திலேயே சிறந்த கொடுமை:

நான் இன்னும் அந்த வீடியோவ பாக்கல

உலகத்திலேயே ரொமப நல்லவய்ங்க:

என்னோட பக்தர்கள். அவரு என்ன சொன்னாலும் நம்புறாங்க.

Thursday, March 11, 2010

ஆனந்த விகடனும்....சூப்பர் சாமியார் கட்டுரையும்

நித்யானந்த சுவாமிகளின் ஒழுக்கக் கேட்டைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பறை அறிவித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியே தீருவோம் என்ற முடிவை சனநாயகத்தின் நான்காவது தூண்களான நக்கீரன், குமுதம் குழும இதழ்கள் எடுத்திருப்பதைப் பார்த்த ஆனந்த விகடன் குழுமமும் தன் பங்காக ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

கட்டுரையை எழுதியிருப்பது பா.திருமாவேலன். ஆனந்த விகடனில் அரசியல் , சமூக கட்டுரைகள் என்றாலே அது பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும்.

இவரும் வழக்கம் போல் அனைத்து சாமியார்களைப் பற்றியும் கண்டது, கேட்டது, படித்தது, அறிந்தது, அறியாதது எல்லாவற்றையும் வைத்து ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் படங்களும் போட்டாகி விட்டது.

என்ன ஆச்சரியம்....எல்லோர் பேரும் உள்ள அந்த கட்டுரையில் ஜக்கி வாசுதேவ் பேர் மட்டும் இல்லை. எங்கே அவர் பெயர் என்று பார்த்தால் அவர் வழக்கம் போல் சுபா தயவில் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏன் திருமாவேலனுக்கு ஜக்கி பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை?

குமுதமும் இப்படித்தானே நித்யானந்தனின் அருளுரைகளை வழங்கி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது அவரை வைத்து வேறு பிஸினஸ் ஆரம்பித்து விட்டது தனிக்கதை.

ஏன் இப்படி.. முற்போக்கு வேடம் ஏற்றாயிற்று சரி. அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டாமா? ஜக்கி மீது எந்தப் புகாரும் வரவில்லையே என்று சொல்லலாம். (புகார்கள் ஏற்கனவே வலையுலகில் கிடைக்கின்ற‌ன) ஆனால் புகார் வந்த பிறகு மட்டும் என்ன செய்கிறீர்கள் ? குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பு. ம்ஹூம்...சரி இனி எந்த சாமியாரின் கட்டுரைகளையும் வெளியிட மாட்டோம் என்ற அறிவிப்பு. ம்ஹூம்..... அதை வைத்தும் வியாபாரம்.

தயவு செய்து உங்கள் தலையங்கங்கள் ஆட்சியாளர்களை நோக்கிக் கை காட்டுவதோடு மட்டுமில்லாமல் உங்களை நோக்கியும் கை காட்டட்டும்.

செய்த தவறை ஒத்துக்கொண்டு, இனி அடுத்த தவறு செய்யாமல் இருப்பதே உங்களை 15.00 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் பேருதவி.

Monday, January 11, 2010

கமலும், வைணவமும்....

கமல் கஷ்டப்பட்டுத் தன்னை நாத்திகர் என்று சொல்லி வந்தாலும் இஷ்டப்பட்டு சில விஷ(ய)ங்களைத் தன் படங்களின் மூலம் சொல்லி வந்துள்ளார்.

ஆதரவாக அவரது பின்வரும் 4 படங்களைக் காண்போம்.

காதலா..காத‌லா..
க‌ம‌ல் த‌மிழ்க்க‌ட‌வுளாம் முருக‌னின் வேட‌ம‌ணிந்து ந‌டித்த‌ காம‌டி.கம‌ல் கிருஷ்ணராக வேடமேற்று, செளந்தர்யா பாமாவாகவும்,ரம்பா ருக்மணியாகவும் நடித்திருந்தாலும் அக்காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் கதை விவாத‌த்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகள் நாத்திகரான கமல் முருகனை வைத்துக் காமடி செய்தால் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று கமலை ஏமாற்றிவிட்டார்கள்.

அன்பே சிவம்...
இந்த கதையின் நாயகன் கம்யூனிசம் பேசும் நாத்திகனாக இருந்த போதிலும், வில்லன் "ஓம் நமோ நாராயாணாய" என்று சொல்லாமல்,"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவபக்தராய் அமைந்தது நாத்திகரான கமலே எதிர்பாராத விஷயம்.

பம்மல் கே சம்பந்தம்...
ராயபுரம் சிவன் போல் நடிக்கத் தெரிந்த கமல் என்ற நாத்திகருக்கு ராயபுரம் விஷ்ணு போல் நடிக்கத் தெரியாது.

தசாவதாரம்...
இப் படத்திற்கு வசனம் தேவையில்லை :-))

இது போக வால் துண்டாக "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் தீவிரவாதியாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்க, கணிப்பொறி மேதையாக வரும் மாணவன் இந்து மதத்தைச் சார்ந்தவனாக‌ இருப்பது கமல் ஒரு மிகத் தெளிவான "நாத்திகர்" என்பதையே காட்டுகிறது.

"இதைய‌ல்லாம் பார்க்காதீர்க‌ள்...சினிமாவை சினிமாவாக‌ப் பாருங்க‌ள்" என்று கூறும் ந‌ண்ப‌ர்க‌ளுக்குப் ப‌தில்...

"சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"

Thursday, November 5, 2009

எனக்கு கல்யாணம் .......எனக்கு கல்யாணம்

அப்பாவும், அம்மாவும் திடீரென்று பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு கடந்த ஜனவரி மாதம் திடு திப்பென்று வந்தார்கள்.

"உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கோம்....நீ என்ன சொல்ற‌"

"இப்பவே என்ன அவசரம் ? இன்னும் 2 வருஷம் போட்டுமே". (இப்பவே வயது 35 மாதிரி தெரியுது. இன்னும் 2 வருஷம் போனா கிழிஞ்சுறும்)

"அதெல்லாம் எங்களுக்கு எப்ப பண்ணனும்னு தெரியும். ஆனா நாங்க பேச வந்தது வேற..." என்று இழுத்தார்கள்.

நேற்று நீயா...நானா ரேஞ்சுக்கு காதல் திருமணத்தைப் பற்றிப் பேசிய விளைவுதான் அது என்பது புரிய எனக்கு சற்று நேரமானது.

"நானெல்லாம் எந்தப் பொண்ணையும் லவ் பண்ணல‌. (பொண்ணுங்கள்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க). நீங்களே பாருங்க".

அப்போது ஆரம்பித்தது. அப்பாவும் அம்மாவும் ஓவர்டைம் வேலை எல்லாம் பார்த்தார்கள்.

"பையன் நல்லாத்தான் இருக்காரு...ஆனா குண்டா இருக்காரு"

"பையன் இஞ்ஜினியரிங்னு சொன்னாங்க....ஆனா ஏதோ தலகாணி கம்பெனில வேலை செய்றாறு.... நான் படிச்சது டெக்ஸ்டைல்ங்க"

"பையனுக்கு என்ன வருமானம் வரும்?............. பூ இவ்வளவுதானா ஏப்பா நீ பேசாம பாரின் கீரின் ட்ரை பண்லாம்ல.

"பையனுக்கு ஆயல்யம் நட்சத்திரமா? ஐயையோ !!!!!!!!!!!!! பெண்ணின் அம்மா அலறிய போது கோபம் வந்தது. தன் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில்தான் அலறினார்கள் என்று தெரிய வந்த போது சிரிப்பு வந்தது.

"ஏம்பா அவன் போட்டாவையும், ஃபுல் டீடைல்ஸையும் முதல்ல அனுப்புங்க. பாத்துட்டு புடிச்சிருந்தா மட்டும் அவன வந்து பாக்கச் சொல்லுங்க. சும்மா இப்படி வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கே கோபம் வந்திடும்" தம்பி அப்பாவை அரட்டினான்.

இவ்வளவையும் மீறி கோவில்பட்டியில் ஒரு கோவிலில் வைத்து பார்க்கப்பட்ட கெளரி என்னைப் பார்த்து பிடிச்சுருக்கு என்று சொல்லியவாறே 5 ஸ்டார் சாக்லேட்டை நீட்டியது இன்று திருமணம் வரை வந்துள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் (கோவில்பட்டி அருகில்) எனக்குத் திருமணம் நடக்க உள்ளது. அது மட்டுமின்றி நவம்பர் 29 ஆம் தேதி சேலத்தில் ரிசப்ஷனும் நடக்க உள்ளது. இரு நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து எங்களை வாழ்த்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பத்திரிக்கை இணைக்கப் பட்டுள்ளது.அனைவரும் வருக.

என்றென்றும் அன்புடன்

செல்வம்





Saturday, May 30, 2009

ஏஞ்சல்ஸ் அண்ட் டீமென்ஸ்

ஆனந்த தாண்டவம், சர்வம், சிவபுரம் என்று வாராவாரம் ஏதோ கோவிலுக்கு நேர்ந்து விட்டாற் போல் பலிகடா ஆகிக்கொண்டே வந்ததற்கு சற்றே ஆறுதலாக அமைந்தது ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ்.

ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-(‍‍ அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.

இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான்.

வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும் (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும்
செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி
அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.

லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது
மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.

ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது.

வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.

தி டாவின்ஸி கோட் ‍ தொடர்ச்சி என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?
அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.

நம் நாட்டில் உள்ள‌ மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.

Saturday, April 11, 2009

ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை

ஏற்கனவே பிரியா, கரையெல்லாம்செண்பகப்பூ, விக்ரம் என்றெல்லாம் எடுத்து சுஜாதாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட தமிழ்சினிமா இன்று ஆனந்த தாண்டவம் எடுத்து நம்முடைய வயிற்றெரிச்சலையும் சேர்த்துக் கொட்டிக் கொண்டுள்ளது.

படத்தின் கதை தெரிய வேண்டுமானால் தயவு செய்து சிரமம் பார்க்காமல் "பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் படித்து விடுங்கள். ஏனெனில் படத்தைப் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ரஜினியாலேயே கணேஷ் கதாபாத்திரத்தை நடிக்க முடியாமல் பில்லா / ரங்கா ரேஞ்சிற்கு நடித்திருந்த‌ போது....பாவம் சித்தார்த் மட்டும் ரகு பாத்திரத்தை நடித்து விட முடியுமா என்ன? ஆனால் அவர் எதற்காக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு
நடித்தார் என்று நேற்று இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நடிப்பா ? அப்படின்னா என்னப்பா ? எதுனா ரேசன் கடைல கலைஞர் படம் போட்டுக் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார்.

மதுமிதாவாக தமன்னா. கரையெல்லால் செண்பகப்பூ படத்தில் பொன்னியாக வந்து சிரிப்ரியா வந்து எப்படி கொடுமைப் படுத்தினாரோ அதைவிட ஜாஸ்தியாக கொடுமைப் படுத்தியிருக்கிறார் தமன்னா.

ரத்னாவாக ருக்மணி. ரகுவின் காதலைக் காதலித்து ரகுவையே கைப்பிடிக்கும் பாத்திரம்.

சார்லி, கிட்டி, கிருஷ்னா என்று நிறைய பேர் இருந்தும் யாரும் நம்மைக் காப்பாற்றவில்லை.

சுஜாதா வசனம் மட்டும் எழுதிய படங்களிலேயே இதை விட சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். சுஜாதாவின் இக்கதையைத் தேர்வு செய்ததே சரியான சொதப்பல். நாவலின் எந்த பாத்திரத்தின் குணநலன்களும் நம்மை பாதிக்காத நிலையில் சுஜாதா தன் எழுத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பாதிப்படைய செய்யும் திறமை படைத்தவர். அதைக் காட்சிப்படுத்தும் போது வேறு எப்படி இருக்கும்? இபப்படித்தான் இருக்கும். அதிலும் மதுமிதாவின் குழந்தைத்தனத்தைக் காட்டுகிறேன் என்று சித்தார்த்தின் காதில் வந்து ஓ என்று கத்திய போதுநமக்கும் ஓ என்று அழ வேண்டும் என்பது போல் தோன்றியது.

ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இயக்குநர் காந்திகிருஷ்னா இப்படம் எடுத்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடம் நம்பிக்கை விதையைத் தூவியுள்ளார். (இப்படியெல்லாம் எடுக்கிறாங்க...இதைவிட நல்லா நாம எடுக்கமாட்டோமா? )

மற்றபடி சுஜாதாவின் கதையை எடுத்தவர்களையும், இனி எடுக்கப்போகிறவர்களயும், அதையும் விடாமல் பார்க்கப் போகும் நம்மையும்

"பசித்த புலி தின்னட்டும்"

Thursday, April 9, 2009

திருப்பூரும்..கம்யூனிசமும்... பின்னே நானும்

திருப்பூர்..... எனக்குச் செவிட்டில் அடித்து தொழில் சொல்லிக் கொடுத்த ஊர். அடி என்றால் சாதாரண அடி இல்லை. இனி இந்த திவ்ய தேசத்தின் பக்கமே வரக்கூடாது என்று மனதில் சொல்லிக்கொண்டு (அழுது கொண்டு) சேலம் நோக்கிப் பெட்டியைக் கட்டினேன்.

அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.

உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள்.
ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.
ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.

ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை.

அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து, "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது, உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.

திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....

"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"

" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"

" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"

ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.

கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான்.

"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......

Tuesday, March 17, 2009

விஜய்யின் கோபமும், நம்முடைய கோபமின்மையும்

டாக்டர் விஜயை நாம் ஓட்டாவிட்டாலும் அவரே அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்று தன்னைத் தானே ஓட்டிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்தவர். விஜய் மீது எப்போதும் வராத எரிச்சல் (வில்லு பார்த்தாலும் கூட வேட்டைக்காரனுக்குத் தயாராகவே உள்ளோம்) சமீபத்தில் அவர் கோககோலா
விளம்பரத்தில் எல்லோரையும் கூல் செய்ய கோககோலாவைத் தரும் விளம்பரத்தைப் பார்த்ததில் இருந்து ஏற்பட்டது.

முதன்முதலில் அவர் கோககோலா விளம்பரத்தில் ஆடிய போது அவர் படத்தின் ஓப்பனிங் சாங் "அச்சம் என்பது மடமையடா" இல்லை. அவர் கொடியும் காட்டப்படவில்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வில்லை. ஆனால் இப்போது ....சற்று பயமாகத்தான் உள்ளது.

விஜய் எப்படியும் புதியஜனநாயகம், வினவு போன்ற கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை. படித்தாலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதும் இல்லை. விழிப்புணர்வு போன்ற கருமம் எல்லாம் வந்து விட்டால் இப்படி "பிரஸ்மீட்டில் காட்டுக் கத்தல் கத்த முடியாதே!"

கோககோலா நிறுவனம் அந்த பிரஸ்மீட்டில் தன் குளிர்பானத்தைக் கொடுத்து டாக்டரைக் குளிர்வித்திருக்கலாம்.

நாம் இதற்கெல்லாம் கோபமின்மையை வெளிப்படுத்தும் வரை, அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்.

மற்றொரு பயம் நம் மீடியாவைப் பார்த்து. விஜயைப் போற்றி புகழும் வேலையை செய்துவரும் ஜனநாயகத்தின்
தூண் இந்த மாதிரி விசயங்களில் கப்சிப்....

வாழ்வு குறித்த பயங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது........

Saturday, February 7, 2009

நான் கடவுள்

இப்படி (?) ஒரு படம் எடுக்க பாலாவால் மட்டும் தான் முடியும்.

"அஹம்பிரம்மாஸ்மி" என்று கத்திக்கொண்டு படம் நெடுக கஞ்சா இழுக்கும் ஒரு நாயகன், பார்வையற்ற பிச்சைக்காரியாக வரும் நாயகி(முக்கியமாக எல்லா படத்திலும் வரும் காதல் என்ற வஸ்துவே இருவருக்கும் இடையே இல்லை),குழந்தைகளையும்,ஊனமுற்றவர்களையும் மூலதனமாகப் போட்டு பிச்சைத்தொழில் நடத்தும் தொழிலதிப வில்லன் (இது மட்டும் ஏற்கனவே "வில்லன்" படத்தில் வந்தது)பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பது தவிர்த்த அவர்கள் வாழ்க்கை என்று யாருமே எடுக்காத யாருமே எடுக்க முடியாத ஒரு களத்தை ரணகளமாகக் (உண்மையிலேயே நேற்று திரையரங்கில் குழந்தை ஒன்று கதறிக்கொண்டிருந்தது)
கையாண்டிருக்கிறார்.

ப‌ட‌த்தின் க‌தை:

ஜோசிய‌ ந‌ம்பிக்கையில் காசியில் சிறுவ‌ய‌தாக‌ இருக்கும் போது விட்ட‌ த‌ன் ம‌க‌னைத் தேடி தென் த‌மிழ‌க‌த்தில் இருந்து ஒரு பெரிய‌வ‌ர் த‌ன் ம‌க‌ளுட‌ன் வ‌ருவ‌தாக‌ப் ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌து.த‌ன் ம‌க‌னைக் காசியில் கால‌ பைர‌வ‌க் கூட்ட‌த்தைச்சேர்ந்த‌ ஒருவ‌னாக‌ப் (ஆர்யா) பார்த்து விக்கித்து போகிறார்.த‌லைமை சாமியின் உத்த‌ர‌வைப் பெற்று ஆர்யா அவருடைய சொந்த‌ ஊருக்கு வ‌ருகிறார்.ஊருக்கு வந்தாலும் தன் தாயிடமும், தங்கையிடமும் ஒட்டாமல் கால பைரவ வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

ஊரில் பிச்சைத்தொழிலைக் கொடூர‌மாக‌வும்,கோர‌மாக‌வும் ந‌ட‌த்தி வ‌ருகிறார் ஒருவ‌ர்.அவ‌ரிட‌ம் வேறொரு கூட்ட‌த்தைச் சேர்ந்த பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் பூஜா வ‌ந்து சிக்குகிறார்.பூஜாவைப் ப‌ண‌த்திற்காக‌ ஒருவ‌ரிட‌ம் விற்க‌ முய‌லும் போது வ‌ழ‌க்க‌மான பாலாவின் க‌தாநாய‌க‌னால் வழக்கமான முறையில் அடிப‌ட்டுச் சாகிறார்.

க‌டைசியில் பூஜா என்ன‌ ஆனார் என்ப‌தே கிளைமேக்ஸ்.(கடைசியில் நாம் என்ன‌ ஆனோம் என்ப‌து ஆண்டி கிளைமேக்ஸ் :‍((

ஆர்யாவிற்கு இப்ப‌டி ஒரு பாத்திர‌ம் இனி அமையுமா? என்ப‌து ச‌ந்தேக‌மே.ஆனால் என்ன ஆர‌ம்ப‌த்தில் அள‌வுக்க‌திக‌மான‌ ஓப்ப‌னிங் கொடுத்து ப‌ட‌ம் முழுக்க‌ க‌ஞ்சா இழுக்க‌ விட்டிருக்கிறார்க‌ள்.அவ்வ‌ப்போது நானே கட‌வுள் என்று க‌த்துகிறார்.நீச‌ பாஷையில் பேசாம‌ல் தேவ‌பாசையில் அடிக்க‌டி பேசுவ‌தால் மொழிபெய‌ர்க்க‌ சித‌ம்ப‌ர‌ம் கோயில் தீட்சித‌ர்க‌ளைக் கூட்டிக் கொண்டு போவ‌து உத்த‌ம‌ம்.ப‌ட‌த்தின் ஹீரோ இவ‌ர் என்று நினைத்தால் அது த‌வ‌று. மொத்த‌மே 10 காட்சிக‌ளில் தான் வ‌ருவார் போலிருக்கிற‌து.க‌டைசியில் வில்ல‌ன்க‌ளைக் கொல்வ‌த‌ற்காக‌ப் பட‌ம் நெடுக‌ காத்திருந்தாற் போல் ஒரு உண‌ர்வு.கெட்ட‌ப், உட‌ற்மொழி அனைத்தும் ஓ.கே

அடுத்துப் பூஜா...ந‌ம் த‌மிழ்சினிமாவில் இப்ப‌டிப் ப‌ட்ட‌ பாத்திர‌ங்க‌ளையும் ந‌டிப்ப‌த‌ற்குக் :கொஞ்ச்ம்..கொஞ்ச்ம்" ஆளிருப்ப‌து ஆறுத‌ல் அளிக்கிற‌து.என்ன‌ மிக‌ச்சிற‌ந்த‌ பாட‌கி என்று இவ‌ரைச் சொல்லிவிட்டு ப‌ழைய ஒரிஜினல் பாட‌ல்க‌ளுக்கு வாய‌சைக்க‌ விட்டுக் காமெடி ப‌ண்ணிவிட்டார்க‌ள்.பூஜா பாடிய‌ முறையிலேயே பாடினால் நான் கூட‌ க‌ண்ணே...க‌லைமானே பாட்டை ந‌ல்ல‌ப‌டியாக பாடுவேன்.ஆர்யாவிற்கு அட்வைஸ் செய்யும் போதும், உச்ச‌க்க‌ட்ட‌ காட்சியின் போதும் ம‌ட்டும் ச‌ற்று ப‌டுத்துகிறார். ம‌ற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌,முய‌ற்சி.

வில்ல‌னாக‌ வ‌ருப‌வ‌ர்...ராம‌ராஜ‌ன் ப‌ட‌த்தில் ஒருவ‌ர் வில்ல‌னாக‌ வ‌ருவாரே அவ‌ரை நினைவூட்டுகிறார்.தென்மாவ‌ட்ட‌த்தமிழ் பேசி கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

முருகன் கதாபாத்திரம் ஏற்ற கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை கீர்த்தனா, பிச்சைக்காரர்களாக நடித்த நடிகர்கள், தமிழ்சினிமாவின் புது இன்ஸ்பெக்டர் (இவர் இன்னும் 50 படங்களிலாவது இதே கேரக்டரி வருவார் என்று நினைக்கிறேன்)என்று எல்லோரும் நன்றாகச் செய்துள்ளார்கள்.

ஆர்தர் வில்சன் கேமராவையும், சுரேஷஅர்ஸ் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார்கள்.

பழைய இளையராஜவை படம் முழுக்கத்தேடினாலும் கிடைக்கவில்லை.பிண்னணி இசையாக இருந்தாலும் சரி, பாடல் இசையாக இருந்தாலும் சரி மீண்டும் அந்த இளையராஜா கிடைத்து விடமாட்டாரா என்று நம்மை ஏங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்."பிச்சைப்பாத்திரம்.." பாடல் மட்டும் டிபிக்கல் நவ இளையராஜ ஸ்டைல்.

ஜெயமோகன் நிறைய இடங்களில் (பூஜா அட்வைஸ் செய்வது,பூஜாவின் உச்சக்கட்ட காட்சி வசனம்) மொக்கையாக எழுதியிருந்தாலும்...(மலையாளத்தான்.../ஜட்ஜாக வருபவர்)என்று ஆங்காங்கே ஊசி குத்தும் வேலையை மட்டும் விடவில்லை.ஆங்காங்கே தெளிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் மட்டுமே ஆறுதல் (அதிலும் ஜெயமோகனின் நகைச்சுவை சற்று பயப்படக்கூடியதே எம்ஜியார்...சிவாஜி குறித்து இவர் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைக்கு உலகமே வேறு மாதிரியாகச் சிரித்தது)

ந‌ம்மை மொத்த‌மாக‌ப் போட்டு எடுத்த‌து பாலா தான். ஒவ்வொரு காட்சியையும் ர‌சிக‌ர்க‌ளுக்கு அதிர்ச்சியை உண்டாக்க‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடே எடுத்திருப்பது / ப‌ட‌த்தில் எந்த‌வொரு அழ‌கிய‌ல் உண‌ர்ச்சியும் இல்லாத‌து / நிறைய‌ த‌ப்பாக‌ச் சொல்லிக்கொடுப்ப‌து (உச்ச‌க்க‌ட்ட‌ காட்சி ஒரு உதார‌ண‌ம்) / இவ‌ர் வியாபார‌ம் ப‌ண்ண‌வோ அல்ல‌து க‌லைச்சேவை செய்ய‌வோ ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை உப‌யோகிப்ப‌து / சேர்க்கை ச‌ரியில்லாத‌து / திரைக்க‌தையில் தொட‌ர்ச்சியின்மை / திரும்ப‌த்திரும்ப அவர் படத்தில் இருந்தே எடுக்க‌ப்ப‌டும் காட்சிக‌ள் (எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கிற‌து)இன்னும் நிறைய‌...

பாலா த‌மிழ்சினிமாவை நேசிக்கும்,சுவாசிக்கும், திற‌மைமிகுந்த‌ ஒரு க‌ட‌வுள்.ஆனால் இப்போது அக்க‌ட‌வுள் சாப‌ம் கொடுத்துவிட்ட‌து. வ‌ர‌த்திற்காக‌க் காத்திருபோம்.

நான் க‌ட‌வுள் ப‌ற்றிய‌ முற்றிலும் நெக‌ட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம்...நாளை

Saturday, January 31, 2009

நாகேஷ்

எதிர்நீச்சல்...

தாம‌ரைநெஞ்ச‌ம்...

திருவிளையாட‌ல்...

க‌லாட்டாக‌ல்யாண‌ம்...

தேன்ம‌ழை...

சோப்புசீப்புக‌ண்ணாடி...

பாமாவிஜ‌ய‌ம்...

மேஜ‌ர்ச‌ந்திரகாந்த்...

நினைவில்நின்ற‌வ‌ள்...

தில்லான‌ மோக‌னாம்பாள்...

ப‌ட்டிண‌த்தில்பூத‌ம்...

மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன்...

அபூர்வ‌ச‌கோத‌ர‌ர்க‌ள்...

ம‌க‌ளிர்ம‌ட்டும்...

ஐயா நீங்க‌ள் பிற‌விக்க‌லைஞ‌ன் தான். ந‌ன்றி உங்க‌ளுக்கு...வேறொன்றும் சொல்ல‌த்தோண‌வில்லை.